என்ன சொல்கிறாய்?

எமது முற்றவெளி மீது

யுத்தத்தின் கரு நிழல்கள்

நெளிந்துவரத் தொடங்கிய வேளை

எமது வாழ்வின்

துயர் மிகு அத்தியாயம் எழுதப் படலாயிற்று!

திடீரென ஊரின் எல்லை கடந்து-நீ

தொலை தூரமேகியதன் பின்

வந்த நாட்களில் இருளடர்ந்த இரவுகள்

யாவிலும் எமது வாழிடமெங்கும்

உனைத்தேடி ஏமாந்து திரும்பினார்கள்!

அதன் பின் நிகழ்ந்த

பிரளயப் பொழுதில்எங்கள் குடிமனைகளுக்கு

மேலாகப் பறந்த

இயந்திரப் பிசாசுகள்

அதிரும் ஓசையுடன்

அச்சத்தைப் பொழிந்தன.

மரக்கிளைகள் சுழன்று

அசைந்ததில் சிதறுண்டு பறந்த

பறவைக் கூட்டங்களோடு

எமதினிய இளைஞர்களும்

காணாமற் போயினர்.

துன்பம் பல சுமந்து

முன்னோர்கள்

தேடி வைத்தவை யாவும்

எம்மிடமிருந்து பறிக்கப்பட்டு

நாசமாக்கப் பட்டன.

ஆனந்த அலை பாய்ந்த

இல்லங்களுக்குள்ளிருந்து எமது

பெண்களின் அவலக் குரல்கள் எழுந்தன.

எங்கள் குழந்தைகளைக் காத்திட

எந்தத் தேவதைகளும் வரவேயில்லை.

ஏங்கோ தூரத்தில்.....

துப்பாக்கிகள் வெடிக்கின்றன.

ஈனக்குரலெடுத்துக் கதறும் ஓசை

காற்றிலேறி வருகிறது.

தினந்தோறும் சாவு எமது வாசல்

வந்து

திரும்பிய

த ட ய ங் க ளை க்

காண்கிறோம்

எப்போதும் கதவு தட்டப் படலாம்!

நீ தேடியழைந்த எதுவுமுனக்கு

ஈடேற்றம் தரவில்லை.

தோற்றுப் போன அரசியலின் பின்னர்

அமைதியைத் தேடித்

தூரத்தேசம் ஒன்றில்அடைக்கலம் புகுந்தாய்!

மனச்சுமைகள் அனைத்தையும்

மௌனமாக அஞ்ஞாத வாசத்திற் கரைத்தாய்!

ஐரோப்பாவில் எங்கோ

அடர்ந்த மூங்கிற் காட்டினிடையே

இராணுவ வீரர்களுக்கு மத்தியில்

இருந்துதொழுகைத் தழும்பேறிய

நெற்றியுடன் நீ எடுத்தனுப்பியிருந்த

நிழற்படம் சொல்லாத சேதிகள்

பலவற்றை எனக்குச் சொன்னது

அதில் ஆனந்த மின்னல் பளிச்சிடும்

உன்முகம் எத்துணை அழகாக உள்ளது?

அன்பானவனே!

எந்த விடிவுமற்ற தேசத்தின்

தலைவிதியை நொந்த வண்ணம்

இங்கு எனது இருப்புப் பற்றியும்

நம்பிக்கைகள் பற்றியும்

ஓயாது விமர்சிக்கின்றாய்!

தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…

உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று

அழிந்திட.....
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த

வாழ்வைச் சபித்தவளாக

நான் வாழ்ந்த போதும்

எனது தேசம்

எனக்கு வேண்டும்!

நீ என்ன சொல்கிறாய்?

-ஃபஹீமா ஜஹான்

அதி வேக ஊர்திகளாலும் அவசரங்களாலும்
ஆக்கிரமிக்கப் பட்ட தெருவில்
கவனத்தைப் பதித்துச் சென்ற
காலைப் பொழுதொன்றில் நீயழைத்தாய்:
என் பெயர் கூறியழைத்தாயோ....
எதைச் சொல்லிக் கதைத்தாயோ....
இரைச்சலில் நழுவவிட்டு விட்டேன் -
உனது ஆரம்பச் சொற்களை - பின்னர்
கம்பீரமான குரலில் உனது பெயர் கூறி
நீளமான சொற்களை நீயுதிர்த்தாய்!

திகைத்துத் தடுமாறி
தெருவிலிருந்து நீங்கிய பின் உன்னுடன் கதைத்தேன்
பிரிவைச் சொன்னாய்:
பல நூறு நட்சத்திரங்கள் மின்னிய வானத்தைச் சுருட்டி
எங்கோ எறிந்து
அருவிகளையும் ஓடைகளையும்
என்னிடம் விட்டு விட்டு
அதற்கப்பால் நீ போனாய்!

பண்பாடுகளாலும் விழுமியங்களாலும்
நீ எனக்களித்த கெளரவங்களாலும்
கட்டப் பட்டுக் கிடக்கிறேன்
ஒன்றுமே அறியாதவனா நீ?
திரும்பித் திரும்பிப் பார்த்து
எனதான்மாவிலிருந்து எதனையோ
எடுத்துச் சென்ற பின்பும்
ஒன்றுமே அறியாதவனா நீ?

காற்றில் உதிரும் இலைகளோடு
எந்த ஒசையுமற்று உதிர்ந்து கொண்டிருக்கிறேன்
கிளை பரப்பித் தளிர்த்தோங்கிட நான்
காற்றிலே இசை நிரப்பித் தந்தாய் நீ

கண்ணீரையும் பிராத்தனையையும்
ஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு
உறவின் நூலிழைகள் வழிகின்றன.

நீ என்னிடம் விட்டுச் சென்ற
ஈரப் பார்வைகள்
இன்னும் எனை உற்றுப் பார்த்தவாறே கிடக்கின்றன.

ஃபஹீமாஜஹான்

இருள் செறிந்த இராப் பொழுதில்
ஒளியைத் தேடித் தவித்திருந்ததென் தெரு வழியே
இனிய குரலெடுத்துப் பாடிச் சென்றாய்
விஷு வருடத் தை மாத இருபத்தோராம் நாளில்

வாசல் திறந்தேன்
நீ போனதற்கான தடயங்களின்றி
இருள் நிறைந்த பெருவெளி என் கண்களில் மோதியது
மின்மினிகளும் தூரத்து வானின் நட்சத்திரங்களுமின்றிக்
கால்களில் இடறுண்டது என் முற்றவெளி

உனது பயணத்தின் குறியீடாகப்
பாடிச் சென்ற பாடல்
சோகத்தில் துடிதுடித்த ஏதோவொன்றை
இடிந்து தகர்ந்த நகரின் சிதைவுகள் மீதும்
குட்டிச் சுவர்களாய் எஞ்சியிருந்த குடிமனைகள் மீதும்
சனங்கள் எழுந்து சென்ற பூர்விகத் தளங்கள் மீதும்
பல்லாயிரம் இளைஞர்களின் புதை குழிகள் மீதும் தடவிற்று

நிலவையழைத்து
ஒளிச் சுடரொன்றினை அழைத்துத்
தனித்த பயணத்திற்கொரு
வழித்துணையை அழைத்து எழுந்த உன் குரல்
அன்றைய இரவு நீளவும் எதிரொலித்தது

உன் குரலினைப் பின் தொடர்ந்து
வெகு தூரம் வந்தேன் நான்
நடந்த கால்களின் கீழே கண்ணீர் நழுவி ஓடியது
சிரித்த ஒலிகளை ஊடுருவி நிலவின் தண்ணொளி படிந்தது
மரங்களின் பழுத்த இலைகளை உதிர்த்தவாறு
எங்கிருந்தோ வந்த காற்று
யாரோ ஏற்றி வைத்த என்ணற்ற தீபங்களை
எதுவும் செய்யாமல் போயிற்று
இரவின் வானத்தின் கீழே

எனை மோதி வீழ்த்தக் காத்திருந்தது
என் முற்றவெளி

ஃபஹீமாஜஹான்

வெட்டி வீழ்த்தப் பட்ட மரத்தின்....
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை

இன்று அதனிடம்
பறத்தலும் இல்லை..
ஒரு பாடலும் இல்லை....

அதன் விழிகளின் எதிரே
வெயில் காயும்
ஒரு பெரு வெளி விரிந்துள்ளது

அந்த மனிதர்களைச் சபிக்கிறதோ
தனது கூட்டை எண்ணித் தவிக்கிறதோ

பறத்தலையும் மறந்து,
பாடலையும் இழந்து
வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின்
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை


முன்பு போல
எதுவித அறிமுகமுமற்றவளாக நான் போய் விடுகிறேன்:
உன் மனதிலெனக்கு
நன்மைகள் கொண்டோ தீடைகள் கொண்டோ
தீர்ப்பெழுதி விடாதே!

உய்த்துணர்வதால் மட்டுமே தெரிந்து கொள்ளத் தக்க
துயரங்களின் வலியை நானுனக்கு
உணர்த்திக் காட்ட முடியாது:
நிகழ்வுகளை விபரித்துச் சொல்வதனால்
சாக்காடாகிப் போன வாழ்வின் வேதனையை
வெளிப்படுத்தவுமேலாது!

உன் மனத்திரையினூடு சட்டமிட்டுப் பார்க்கும்
எல்லைகள் உள்ள வரை
எனது குரலின் நியாயத்தை நீயுணர முடியாது!

அனைத்துப் பூதங்களுக்கும் பயந்தவளாய்
எல்லாக் குற்றச் சாட்டுகளுக்கும் மௌனமாய்த்
தலையசைப்பவளாய்
எதிர்த்துச் சொல்ல எந்த வார்த்தைக்கும் உரிமையற்றவளாய்
தனதினத்தை மாத்திரமே நேசிப்பவளாய்
இருக்க வேண்டுமென எனக்குச் சாசனமேதுமில்லையே...!

உன் கொள்கைகளின் வழியே யாவரும் நடக்கவோ
நீ வெறுப்பவைகளை மற்றவரும் வெறுக்கவோ
அல்லது
வேண்டாம்,உனக்கிவைகளைக் கூற முடியாது
அறிவிலும் ஆற்றல்களிலும் முதன்மையானவன் நீ
அன்றியும் எனது மதிப்பு மிக்கவன்!

உனது உரையாடலின் தொனி
நான் தவறிழைத்து விட்டதென
உணர்த்திப் போவது அறிவாயா?
செய்யாததொன்றுக்காக உன்னெதிரில்
தண்டனை பெற்ற உள்ளமெனது!
நீ அறிந்தவைகளுக்கு அப்பாலுள்ள
கறைபடியாத ஆத்மாவின் கதையெனது!
உன் மனதின் பதிவுகளை மாற்றிக் கொள்வாயாக!

நாளை
எந்தவித அறிமுகமுமற்றவளாக நான் போய் விடுகிறேன்:
உனதுள்ளத்தில்
நன்மைகள் கொண்டோ தீமைகள் கொண்டோ
எனக்குத் தீர்ப்பெழுதி விடாதிருப்பாயாக!

அந்த வயல் வெளி மீது வாழ்வும் மொழியும் வேறுபிரிக்கப் பட்டது
வானமும் திசைகளும் விக்கித்து நின்றிட ,விதியெழுதப் பட்டது!

ஊரெங்கிலும் அச்சம் விதைக்கப் பட்டிருந்த இரவுப் பொழுதும்
வைத்தியசாலையும் மருந்து வாடையும்எனது நினைவை விட்டு
இன்னும் நீங்குவதாயில்லை!
மருத்துவ மனையின் விசாலமான முற்றவெளியெங்கும்
மின் விளக்குகளின் ஒளிக்கற்றைகள் பரவியிருந்தன.
கடலோர மணலும் காய்ந்த புற்களும் கால்களின் கீழே சரசரத்தன
ஆங்காங்கே ஆண்கள் பதற்றத்துடன் நின்றிருக்க.....
இவைதவிர்ந்த காற்று வெளியெங்கும் சோகத்துடன் அமைதி குடியிருந்தது!

தமது பண்பாட்டுச் சுமைகளைச் சூடிநின்ற பெண்கள்
நோயாளர் அறைகளெங்கிலும் நடமாடித் திரிந்தனர்
குசுகுசுத்துக் கதைக்கையில் அவர்தம் முக்காடுகளின் சரிவில் நகைகள் மின்னின.
தற்காலிகச் சவச்சாலையாக மாறிப் போன இடத்தில்-அவை
வெண்ணிறப் போர்வைகளால் மூடி வைக்கப் பட்டிருந்தன:
கண்ணீர் வற்றிப் போன உறவுகள் வெளியே காத்திருக்கக் கூடும்!
தாய்,பிள்ளை,மனைவியென்ற பாசங்கள் வீடுகளில் துடித்திருக்கக் கூடுமங்கே!

இன்று போல் எமது பெண்கள் அல்லாடி வாழ்ந்திடவில்லையன்று:
வயோதிகப் பெற்றோர் தமது புதல்வர்களுக்காக அழுது புலம்பவுமில்லை:
அனாதைகளான சிறுவர்கள் வீதிகளில் அலைந்து திரிந்திடவுமில்லையன்று ...!

மாலைப் பொன்னொளி கவியெழுத வரும் அழகிய வயல் வெளியைச்
சனியன்கள் தம் துயரப் போர்வை கொண்டு மூடின!
மரணப் பீதியுடனான ஓலம் திசைகளை உலுப்பிற்று:
வயல் வெளி கடந்து அவ்வதிர்வு
நீலம் பூத்த மலைகளையும் அடிவானையும் நீண்டு தொட்டது!

அறுவடைக்குச் சென்ற அப்பாவிகள் அறுவடை செய்யப் பட்டனர்:
பின் உழவு இயந்திரப் பெட்டிகளில் நெல் மூடைகளுக்குப் பதிலாகத்
துண்டாடப் பட்ட சடலங்கள் எடுத்துவரப்பட்ட போது எல்லாம் தடுமாறி நின்றன!
இவ்வாறு வன்மமும் வெறுப்பும் வாரியிறைக்கப் பட்ட
வரலாற்றுக் காயம் நிகழ்ந்தது!
எல்லாவற்றையும் வீழ்த்திச் சிதைத்து அள்ளிப் போனது பிரளயத்தின் பெருங் காற்று!


அடைய முடியாத் தொலைவும் நீ
தீண்ட முடியா உறவும் நீ
தொலைவிலிருந்து கேட்கும் இனிய பாடலாக உனது
குரலினை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறேன்.

அசுப தேவதைகள் ஆர் சொல்லை ஆசிர்வதித்தனவோ...
சாபம் போலொரு துயரம் வாழ்வோடு சேர்ந்தது!
என் மீதிருந்த எல்லா உரிமைகளையும் விட்டு நீ
வெகுதூரம்...வெகுதூரம்...போனாய்!
மீட்சியில்லாத் துயரங்களின் முன்
நேசிப்புக்கு இடமில்லாமற்போனது!

அதீத புனைவுகளால் சித்திரிக்கப் பட்டுத்
தோற்றுப் போனது கடந்த காலம்
அனைத்தின் மீதும் கேள்வியெழுப்பி
வாழ விடாமற் செய்துள்ளது நிகழ்காலம்!

யார் யாராலோ விதிக்கப் பட்டதை எனக்கு
ஏற்று வாழும் படியாயிற்று
திணிக்கப் பட்டதை மறுத்ததால் உனக்குத்
தொலைதூரம் போகும் படியாயிற்று
உன்னுலகை விட்டு நானும்
என்னுலகை விட்டு நீயும் தூரமானோம்...
எமக்கிடையே தேச தேசாந்திரங்களும்
கடல்களும் காடு, மலைகளுமாய்...

எனது விதிரேகையும் ஆயுள் ரேகையும்
அனர்த்தங்கள் குறித்து ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்ததை
தாமதமாகவே அறிந்து கொண்டேன்.

மரணத்தின் தூதுவர்கள் அலைகின்ற
அதிவேகத் தெருக்களில் நீ சென்றுகொண்டிருந்தாலும்
சற்றே ஒதுங்கி நின்று
எனக்கொரு அழைப்புத் தருவாயா?
தங்க எங்கும் இடமற்று நீ வாழும் தேசம் வரை
நீண்டு நீண்டு வருகின்றன என் கனவுகள்!


சின்னஞ் சிறு வெண் சிறகிரண்டிலும்
புழுதி படியலாயிற்று:
பஞ்சு போன்ற அதன் உடலம்
ஒடுங்கிச் சிறுத்திற்று:
கூடி விளையாடிய அவளது பாதம்
தவறுதலாகக் குஞ்சின் தலை மீதேறியது:
கால்களும் உடலும் நெடுநேரம் நடுங்கிடச் சிறுமி
தனது பிரியம் துடிப்பதைப் பார்த்திருந்தாள்!

கரு முகிலே! உன் துளிகள் தூவி
அதன் மேனிக்கு வலுவூட்டு!
நீல விசும்பே!உன் குரல் கொண்டு
மீளாத் துயிலிலிருந்து அதையெழுப்பு!
வீசும் பவனமே!உனது மென் கரங்களால்
மூடிய இரு கண் மூடிகளைத் திறந்து விடு!
இனிய குஞ்சே ! வலிகளைக் காலடியில் விட்டு
குணமடைந்து எழுந்து விடு:
முறையிட்டாள் சிறுமி ஆகாயம் நோக்கி.

உயிர் பிழைத்த குங்சு
ஒரு கண் பார்வையிழந்து தவித்தது!
இடையில் தவறிய வழி தேடிக் கீச்சிட்டவாறு
எங்கோ எங்கோ பார்த்திருந்தது


மரணத்தின் நிழல் அதன் தலைக்கு மேலே
கவிழ்திருந்த காலைப் பொழுதில்
கடும் பிரயத்தனத்துடன் ஒரு சொண்டுத் தண்ணீரை
அண்ணாந்து குடித்தது
உலகில் அதற்கென ஆண்டவன் வைத்திருந்த
கடைசி நீர்த் துளி அது!

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சுpறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!

இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!


சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து
காற்றிலே கரைகிறது சூனியம்!


அவர்களும் விதைத்தனர்
இவர்களும் விதைத்தனர்:
எந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை
உருமலை உள்ளடக்கிக்
காலங்கள்தொறுமவை காத்துக்கிடந்தன!


தத்தித் தவழும் பாலகனோ...
ஏழைத் தாயொருத்தியோ...
இனிய இளைஞnihருவனோ...
மதகுருவோ...
மேய்ச்சலுக்குச் சென்ற மந்தையொன்றோ...
அல்லது
குறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ?


அறுவடை காண மறந்த வன்னிப் பெரு நிலத்தில்
நச்சுக் கிழங்குகளை நாளெல்லாம் தோண்டலாம்:
நீண்ட கோடைகளிலும் மரிப்பதில்லை
மாரி காலம் கடந்து போன பின்னும் முளைப்பதில்லை:
ஏவி விடப் பட்ட பூதங்களைத் தமக்குள் பிடித்து
பாதையோரங்களிலும் பொட்டல் வெளிகளிலும் காத்திருந்தன!


நெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட
தன் கரம் சுமந்த கோலுடன்
அங்குலமங்குலமாக
வன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்!


எங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்
எம்மொழியும் அறியான்...எமதினமும் அறியான்...
அவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்
நாமினி எதை நடப் போகிறோம்?


அவளைப் பலவீனப் படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்
அவளை உள் நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?

போரிலும் பகையிலும் முதல் பொருளாய்
அவளையே சூறையாடினாய்:
அவளுக்கே துயரிழைத்தாய:;
உன்னால் அனாதைகளாக்கப் பட்ட
குழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய்:
தலைவனாகவும் தேவனாகவும் நீ
தலை நிமிர்ந்து நடந்தாய்

எல்லா இருள்களின் மறைவிலும்
நீயே மறைந்திருந்தாய்:
ஒளியின் முதல் கிரணத்தையும்
உன் முகத்திலேயே வாங்கிக் கொண்டாய்!

உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்:
கலாசாரம்,பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்

உனது மயக்கங்களில்
தென்றல்,மலர்,இசை...
தேவதை அம்சங்களென...
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்

அவளிடமிருந்த அனைத்தையும் பறித்துக் கொண்டு
சிகரங்களில் ஏறி நின்றாய்
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு காணச் சொன்னது
உனக்கு மட்டுமென எப்படிக் கொண்டாய்?


நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!
எமக்குப் பின்னால்
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!
தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது
வெண்பனி
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி
எம் செவி வழி நுழைந்தது
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை !
சந்தடி ஓய்ந்த தெரு வழியே
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் !

இப்படியே
எத்தனையோ இரவுகளில்
விவாதிப்போம் நெடு நேரம்
முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன்
பிரிந்து செல்வோம் !

பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில்
உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த
அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் !

பரணி...
உன் நினைவுகள் தேய்ந்து கொண்டிருந்த வேளை
மாரி கால அந்திப் பொழுதொன்றில்
நனைந்த சீருடைகளில் இருந்து நீர் சொட்டச் சொட்ட
மீளவும் நீ வந்தாய் !

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !

இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?


உனது மகிழ்ச்சிகளையெல்லாம்
என்னிடமிருந்தே பெற்றுக் கொண்டாய்:
எனது துயரங்களையெல்லாம்
நீயன்றோ ஏற்படுத்தித் தந்தாய்?
தாங்க முடியா வலி தருகின்ற உன் தளைகளிலிருந்து
என்னை விட்டுவிடேன்-போகிறேன்!

எவருக்கும் புலப்படாத வெளிகளில் அலைந்து
ஏதோ ஒரு கடற் காற்றை என்னோடு எடுத்து வந்து
நாறிப் போன காற்று வெளியில் பதிலீடு செய்ய வேண்டும்!

கடந்த காலம் தந்த சொற்களை
வரி வரியாக விதைப்பது அலுத்துவிட்டது!
அடிச்சுவடுகளெல்லாம்
மிகுந்த துயரங்களைத் தேக்கிவைத்து
நான் மிதிக்கும் வேளை
பழங்காலத்துப் பாசி படிந்த நீரை
என் மீது வாரியிறைக்கின்றன!

எனைச் சூழ்ந்த பெருவெளியெங்கும்
நிரம்பித் தாக்கும் பேரிரைச்சல்
சகித்து வாழ முடியாச் செய்திகளைத் தருகின்றன:
நீ தந்த சிதைவுகளிலிருந்து தானே மீள
நான் உயிர்த்து வர வேண்டும்!

யாரை உதறி எறிந்து
யார் வெளியேறுவது?
வடபுலம் நான் தென் திசை நீ என்ற
நமதெல்லைகளைக் களைந்து
ஆண்டாண்டுகளாகச் சிக்கிவாழும்
பிம்பங்களிலிருந்து மெய்யன்பை
வெளிக் கொணர்வோம்!

உனது அதிகாரங்களையும்
எனது அண்டி வாழ்தலையும்
கீழிறக்கி வைத்துவிடுவது
சாத்தியப் படுமெனில் ஒன்று சேர்வோம்!

நீ அவனைக் காதலித்தாயா? எனத்
தொலை புலத்திலிருந்து கேட்கும்
அண்ணனுக்கு
நாளை பதில் எழுதுவேன்!

இனிய குரலெடுத்துப் பாடும் உன் பாடலுடன்
வசந்த காலமொன்று என் அடவிகளில் வந்து விழும்

துயரங்கள் நிரம்பித் தாக்கும் வேளைகளில்
வேதனையில் உன் சிரிப்பொலி எழும்போது
அகால இடி முழக்கத்தில் என் வானம் அதிரும்

ஏதோ ஒரு ஆறுதலில் நீ
என் கிளைகளில் தாவிக் குரலெழுப்பும் போது
கார்காலமொன்று எனது வேர்களைச் சூழும்

மரணத்தைப் பற்றியும்
நிலையற்ற வாழ்வின் நியதிகள் பற்றியும்
மகானைப் போல நீ போதிக்கும் தருணங்களில்
கடும் கோடை காலமொன்று என்
கால்களைச் சுற்றி வந்து பெருமூச்செறியும்

ஆனாலும் அன்பே...
இலையுதிர் காலத்தில் விக்கித்து நின்றபோது
ஓராயிரம் இலைகளும் உதிர்ந்து போகையில்
என்னிடம் புன்னகைக்கக் கெஞ்சிய
உன் கீச்சிடலுடன்
பனித்துளிகள் சொரிந்திடலாயின

வாழ்வளித்த நிழலை நின் புலன்களில் தேக்கி
இனிய குஞ்சுடன் தொலை தூரம் பறந்து போகையில்
எனது உயிர்க் குரல் ஓய்ந்து போயிற்று


நீ வாழ்ந்த கூட்டைக் குரங்குகள் பிய்த்தெறிந்தன
நான் மரமென நின்றிருக்கிறேன்:
துயரங்களையும் எதிர்ப்பையும் கூறிட
எனக்கொரு மொழியின்றி...


அவளை உடனடியாக வந்து பார்த்திடுமாறு செய்தி கிடைத்தது:
பதற்றம் நிரம்பியவராய் மக்கள் ஆங்காங்கே குழுமி நின்று
அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தியைக்
கதைத்துக் கொண்டிருந்தனர்!

மனிதர்கள் அழுக்கையும் நாற்றத்தையும் மாத்திரமே
விட்டுச் செல்லும் நகரமொன்றில் அந்த வைத்தியசாலையிருந்தது!
தோளுரசிச் செல்லும் வாகனங்களும் நச்சுப் புகை நாற்றமும்
சனக் கூட்டமும் நெரியும் சாலைகளைக் கடந்து செல்லும்
பயணமே ஒரு போர்க்களமாய் விரிந்தது!

விரைவாகச் சென்றடையக் கூடிய
எல்லாச் சந்துகள் கடந்தும் அவற்றின் அசுப காட்சிகள் கடந்தும்
வைத்தியசாலைக்குள் நுழைந்தேன்:
நுழைவாயில் வரை உள்ளிருக்கும் வீச்சம் பரவி
ஆன்மாவைப் பிராண்டியது:
காற்றுமற்ற இடங்களில்
ஈரலிப்பையும் அழுக்கையும் நாற்றத்தையும்
நரக வதைகளாகச் சகித்திருந்தனர் நோயாளிகள்!

சகித்திட முடியாத இடமொன்றை
அவளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதென்ற
நெஞ்சுருகும் பிரார்த்தனையைக் கேட்டுக் கேட்டு
இருண்ட விறாந்தை வளைவுகள் தாண்டித் தேடியழைந்தேன்.

சற்றே தூய்மையான அறையொன்றைக் கடந்த வேளை,
கறுப்பு அங்கியணிந்திருந்த பெண்ணின் அசைவு தெரிந்தது:
அடையாளம் கண்டு கொண்டோம்!

உடலெங்கும் இணைக்கப் பட்டிருந்த குழாய்களுடன்
எழ முயன்றவளைத் தடுத்த போதும்
அனைத்தும் கழன்று விழ
பீறிட்டழும் விம்மலுடன் எழுந்து எனைத் தழுவினாள்!

-உனைச் சிதைத்தவர் யார்?ஆமினாவும் ஆயிஷாவும் எங்கே?-
எனது கேள்விகளுக்கு
ஒவ்வொரு வார்த்தையாக உயிர்கூட்டி உச்சரித்தாள்:
-துப்பாக்கிகளை நீட்டியவாறு குதித்திறங்கிய அவர்களது
வாகனத்திற் சின்னமிருந்தது.
ஆமினாவும் ஆயிஷாவும் துடிதுடித்து வீழ்ந்தனர்.
எனைச் சித்திரவதைப் படுத்திடவென்றே
அனேக ரவைகளைப் பாய்ச்சினர் உடலில்:
அவர்களின் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை-
எனைச் சல்லடையாக்கிச் சத்தியத்தின் குரலைச்
சாத்தான்களால் பறித்தெடுக்க முடியாது-
சொற்களுக்கு உயிர் கூட்டி முடித்தாள்.

எனைப் பற்றியிருந்த பிடி தளர்ந்தது:
அவள் வசமிருந்த இறுதி வாக்குமூலமும் அழிந்தது!

அந்தக் கனவையும் அதிகாலைத் துயிலையும் உதறி எழுந்தேன்!
மக்கள் சூழ்ந்து நின்றிட அவளை மருத்துவ மனைக்குத்
தூக்கிச் செல்வதை அல் ஜஸீரா காட்டியது!

இறுதி வாக்குமூலத்தை அறிந்திருந்த உலகம்
கொலைகாரர்கள் பெற்றுக் கொண்ட பாராட்டுதல்களையும் பார்த்திருந்தது:
ஏமாற்றப் பட்டோம் அம்மூன்று ஆன்மாக்களும் நானும்!


அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
மழைக்கால இரவொன்றில்
நிசப்தத்தையும் இருளையம்
உள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்!

வழமை போலவே அம்மாவின் அருட்கரங்களில்
ஒளி காழும் உத்தியாக மின் சூள் அகப்பட்டிருந்தது!

இரவுச் சாப்பாட்டின் ஒரு கவளம்
மீதியாயிருந்ததென் பீங்கானில்:
கையில் தேடியெடுத்திருந்த மெழுகுவர்த்திக்குத்
தீச்சுடரொன்று தேவைப் பட்டிருந்தது இளையவளக்கு:
எழுதிக் கொண்டிருந்த மூத்தவளுக்கோ
இறுதிச் சொல்லில் ஓரெழுத்து எஞ்சியிருந்ததப்போது:
அவரவர் தேவை கூறி அம்மாவைக்
கூப்பிட்ட கூச்சலில்
இருண்ட இல்லம் ஒலியலைகளால் நிரம்பிற்று!

முதலில் எனது பீங்கானில் விழுந்து தெறித்த
ஓளிக்கற்றைகளின் துணையுடன்
இளையவளின் மெழுகுதிரி சுடர்விடடெரிந்தது:
மூத்தவளின் கடைசி எழுத்துக்கும் அம்மா
ஒளி காவி நடந்த பின்னர்
சட்டென நுழைந்தது வீட்டினுள் மின்சாரம்!

மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது
சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
ஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:
எவரின் உதவியும் இன்றி
இருளினுள்ளேயிருந்து
எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனத


எல்லைப் படுத்தாத அன்புடன்
இரு திசைவழி நடந்தோம்
உன் மனதிலும் என் மனதிலும்
அன்பின் நிழல்கள் காவி...
தங்கைக்கேற்ற அண்ணனாயிருந்து
பிரிந்து செல்லும் வரை என்
பிறவிக் கடன் தீர்த்தாய்!

என் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து
ஆர்ப்பரித்துப் பொங்கும் வேளைத்
தூர நிலம் கடந்து
உனக்குள்ளும் அலைகள் எழுமோ?
மனதை விட்டு
உன் நினைவு தொலைந்து போயிருக்கும்
அவ்விருண்ட பொழுதுகளில்
தொலைபுலத்துக்கப்பாலிருந்து வரும்
உனதழைப்புக்கு நன்றி.

என் துயரின் காரணங்களைத்
தேடியறியத் துடித்ததில்லை நீ என்றும்:
புன்னகை கலந்த உனதுரையாடல்
மனதின் அலைகளை ஓய வைக்கும்.

நான் ஏற்ற தெய்வ தீர்ப்புகளால் அதிர்ந்தாயெனினும்
எந்த ஆறதலையோ சமாதானங்களையோ
நீ இருந்த வரை எனக்குச் சொன்னதேயில்லை:
ஆழ்ந்து ஊடுறுவும் உன் பார்வை தரும் அமைதியை விட
வார்த்தைகளின் ஒத்தடம் எனக்குத் தேவைப் படவுமில்லை!

நமது பிரிவெழுதியிருந்த காலத்தைப் பின்னகர்த்தப்
பஞ்சாங்கமோ பரிதவிப்புக்களோ உதவிடவில்லை:
எல்லைப் படுத்தாத அன்புடன்
இரு திசை வழி நடந்தோம்:
எமதிருமனங்களிலும் அன்பின் நிழல்கள் காவி !

வீடென்ற சிறைக்குள் சிக்குண்டவள்
மீளவும் மீளவம் நரகத்துழல்கிறேனடா!
இங்கு தினமும் நான் காணும்
பல்லாயிரம் மனிதரிடையேயிருந்து
எப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்?


என்ன சொல்கிறாய்?
எமது முற்றவெளி மீது
யுத்தத்தின் கரு நிழல்கள் நெளிந்து
வரத் தொடங்கிய வேளை
எமது வாழ்வின் துயர் மிகு அத்தியாயம் எழுதப் படலாயிற்று!

திடீரென ஊரின் எல்லை கடந்து-நீ
தொலை தூரமேகியதன் பின் வந்த நாட்களில்
இருளடர்ந்த இரவுகள் யாவிலும்
எமது வாழிடமெங்கும் உனைத்தேடி
ஏமாந்து திரும்பினார்கள்!

அதன் பின் நிகழ்ந்த பிரளயப் பொழுதில்
எங்கள் குடிமனைகளுக்கு மேலாகப் பறந்த
இயந்திரப் பிசாசுகள்
அதிரும் ஓசையுடன் அச்சத்தைப் பொழிந்தன.
மரக்கிளைகள் சுழன்று அசைந்ததில்
சிதறுண்டு பறந்த பறவைக் கூட்டங்களோடு
எமதினிய இளைஞர்களும் காணாமற் போயினர்.
துன்பம் பல சுமந்து
முன்னோர்கள் தேடி வைத்தவையாவும்
எம்மிடமிருந்து பறிக்கப் பட்டு நாசமாக்கப் பட்டன.
ஆனந்த அலை பாய்ந்த இல்லங்களுக்குள்ளிருந்து
எமது பெண்களின்
அவலக் குரல்கள் எழுந்தன.
எங்கள் குழந்தைகளைக் காத்திட
எந்தத் தேவதைகளும் வரவேயில்லை.

ஏங்கோ தூரத்தில் துப்பாக்கிகள் வெடிக்கின்றன.
ஈனக்குரலெடுத்துக் கதறும் ஓசை காற்றிலேறி வருகிறது.
தினந்தோரும் சாவு எமது வாசல் வந்து
திரும்பிய தடயங்களைக் காண்கிறோம்
எப்போதும் கதவு தட்டப் படலாம்!

நீ தேடியழைந்த எதுவுமுனக்கு ஈடேற்றம் தரவில்லை.
தோற்றுப் போன அரசியலின் பின்னர்
அமைதியைத் தேடித் தூரத்தேசம் ஒன்றில்
அடைக்கலம் புகுந்தாய்
மனச்சுமைகள் அனைத்தையும் மௌனமாக
அஞ்ஞாத வாசத்திற் கரைத்தாய்

ஐரோப்பாவில் எங்கோ அடர்ந்த மூங்கிற் காட்டினிடையே
இராணுவ வீரர்களுக்கு மத்தியில் இருந்து
தொழுகைத் தழும்பேறிய நெற்றியுடன்
நீ எடுத்தனுப்பியிருந்த நிழற்படம்
சொல்லாத சேதிகள் பலவற்றை எனக்குச் சொன்னது
அதில் ஆனந்த மின்னல் பளிச்சிடும் உன்முகம்
எத்துணை அழகாக உள்ளது.


அன்பானவனே!
எந்த விடிவுமற்ற தேசத்தின் தலைவிதியை நொந்த வண்ணம்
இங்கு எனது இருப்புப் பற்றியும் நம்பிக்கைகள் பற்றியும்
ஓயாது விமர்சிக்கின்றாய்!
தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…
உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று அழிந்திட
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச்
சபித்தவளாக நான் வாழ்ந்த போதும்
எனது தேசம் எனக்கு வேண்டும்!
நீ என்ன சொல்கிறாய்?


நிம்மதி குடியிருந்த கிராமத்தின் மீது
வந்து விழுந்தன கோர நகமுடைய கரங்கள்;;:
எங்களைக் குதறிடக் குறி பார்த்தவாறே.....

எமது கல்லூரி வளவினுள்ளே
வன விலங்குகள் ஒளிந்திருக்கவில்லை:
எமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை
ஓநாய்களும் கழுகுகளும் தம் வாழிடங்களாய்க் கொண்டதில்லை:
நிலாக்கால இரவுகளில் உப்புக் காற்று மேனி தழுவிட
விவாதங்கள் அரங்கேறிடும் கடற்கரை மணற்றிடலில்
பாம்புப் புற்றுகளேதும் இருக்கவில்லை:
மாலைகளில் ஆரவாரம் விண்ணளாவிட எமதிளைஞர்
உதைபந்தையன்றி வேறெதையும் உதைத்ததுமில்லை:
பக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்
எமதன்னையர்
நிவேதனத்தையன்றி வேறெதனையும்
இருகரமேந்தி ஆலயமேகவுமில்லை!

இங்கெல்லாம்
புரியாத மொழி பேசியவாறு துப்பாக்கி மனிதர்கள்
ஊடுறுவத் தொடங்கிய வேளை விக்கித்துப் போனோம்:
வார்த்தைகள் மறந்தோம்.
எமது கல்லூரி,நூலகம்,கடற்கரை,
விளையாட்டுத்திடல்,ஆலயமெங்கிலும்
அச்சம் விதைக்கப் பட்டு ஆனந்தம் பிடுங்கப் பட்டதை
விழித்துவாரங்களினூடே மௌனமாய்ப் பார்த்திருந்தோம்!

அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.
எமது வானவெளியை அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது.
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி
எம்மீது பூச்சொறிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப் பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.

எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:
எமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட
எதிர்காலப் பலாபலன்கள் யாவும் சூனியத்தில்கரைந்தன.

தற்போதெல்லாம் குழந்தைகள் இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:
அவர் தம் பாடக் கொப்பிகளில் துப்பாக்கிகளை வரைகிறார்கள்:
பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரமாய்ப் போயின:
எங்கள் தேசத்தின் இனிய கதைகளைப் பற்றி
-பாட்டிமார் கதைக்கிறார்கள்:
அந்த வரலாறு இனி எமது ஆனந்தங்களை மீட்டெடுக்கட்டும்!



உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்:
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜைப் பீடம்வேண்டாம்:
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக் கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்:
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்!

அவளது விழிகளில் உனதுலகத்தின்
சூரிய சந்திரர்கள் இல்லை :
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்து வருவதில்லை:
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை:
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை!

காலங்காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்க வேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்

உனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள
விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய்:
நான்கு குணங்களுக்குள் அவள்
வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:
அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள
எல்லையற்ற உலகை
உனக்காக எடுத்துக் கொண்டாய்!

எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்!

அவள் அவளாக வாழ வேண்டும்
வழி விடு!


ஆண்களை மயக்கும்மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டீச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!

உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!

நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!

Powered by Blogger.

தொகுப்புகள்

தொகுப்புகள்


About Me

My Photo
ஃபஹீமாஜஹான்
View my complete profile

Search

Blog Archive

About