உனது முக வசீகரத்தைத்
துலக்கித் துலக்கித்
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது
காலத்தின் அற்புதக் கரங்கள்


உனது சொற்களைப் பற்றியவாறு
வீடெங்கும் படர்கிறது
பாசத்தில் வேர் ஊன்றிய கொடியொன்று


அத்தனை இனிமையான
அவ்வளவு ஆனந்தமான
அந்த மாலைப் பொழுதிலிருந்து
மெல்லத் துளிர்விட்டது
எப்பொழுதும் வாடாத ஒரு பூ


மரணம் இயன்றவரை பந்தாடிக்
கை விட்டுச் சென்ற
பாலை நிலத்திலிருந்து
ஒளிர்விடும் முத்தெனத் திரும்பி வந்திருந்தாய்
எமைப் பரிதவிக்க விட்ட
காலத்தின் கண்ணீரைத் துடைத்தவாறு
நிகரிலா ஆவலுடன்
நேத்திரங்களில் நிறைந்தாய்


எவரும் வந்து போய்விடக்கூடிய
முடிவற்ற தெருவினூடாக
எவராலும் எடுத்துவரமுடியாத
ஆனந்ததை ஒப்படைத்த பெருமிதத்துடன்
விடைபெறத் தயாரானாய்


உன்னிடம் காண்பித்திட
ஒரு வெளி நிறைந்த காட்சிகள் இருந்தன
அவசர மனிதர்களும்
மாலைப் பொழுதும்
எமைக் கடந்து போய்க் கொண்டிருந்த
வீதியிலே நடந்தோம்


பெரு மழைக் காலத்தை எதிர்பார்த்து
தூரத்து வ்யல் வெளிகளில்
எரிந்து கொண்டிருந்தது தீ
மூங்கில்கள் தலைகுனிந்து
எதனையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்
அடர்ந்த மரங்களின் கீழே
ஓடிக் கொண்டிருந்தது ஆறு
கொடிகளை இழுத்து அசைத்தவாறு


நீலம் பூத்த மலைகளும் தென்னந்தோப்புகளும்
கரையத் தொடங்கிய இருளில்
எம்மீது படிந்து கொண்டிருந்தது
ஏதோவோர் ஒளி
ஆகாயத்தின் கிழக்கே
உன்னைப் போலவே ஒரு நட்சத்திரம்
மின்னத் தொடங்கியிருந்தது


நின்று இரசித்திட யாருக்கும் நேரமற்ற
அந்த அஸ்தமனத்தின் மெல்லிய ஒளியினூடாக
தெருமுனைவில் வழிபார்த்திருந்த
அம்மாவிடம் மீண்டோம்


இருளானதும் கூடு செல்லத் துடிக்கும்
பறவையின் சிறகுகளோடு உந்திப் பறந்தாய்
பரிமாறப்படாத இரவுணவையும்
தந்துசென்ற அன்பின் பரிசுகளையும்
எங்கள் உள்ளங்களில் சுமக்கவிட்டு

(2009.09.27 இன் நினைவாக)






எனது இரண்டாவது கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.
இத் தொகுப்பை வெளியிட்ட தம்பி அகிலன், சயந்தன் உள்ளிட்ட "வடலி"க்கு எனது மனமார்ந்த நன்றிகள்

(இங்கே வாங்கலாம்)http://vadaly.com/shop/?page_id=231&category=27&product_id=88





நீ
இறைவனின் தோற்றமொன்றை
எதிர்பார்த்துக் காத்திருந்தாய்
தீண்டத் தகாத பொருளாக்கி
இருளின் மூலையொன்றில்
உனைக் கிடத்தியிருந்தது முதுமை

எழுந்து நடக்கத் தயாராகும் பொழுதெலாம்
வயோதிபமடைந்த பூமி
தள்ளாடித் தள்ளாடி
உனை வீழ்த்திடத் தயாராக இருந்தது

உன் வாழ்வு முழுதும் சேகரித்த
வேதனைகளைப் பகர்ந்திட
எந்தச் செவியுமே
அவ்வீட்டில் இல்லாதிருந்தது


பேரன்புடன்
அவதரிக்கச் செய்து ஆளாக்கி வளர்த்த
உருவங்களுக்குள்ளிருந்து
திரும்பி வரவே இல்லை
உனக்கான பரிதவிப்புகளும் பாசங்களும்


இனியும் சகித்திட முடியாத
வாழ்வை உதறியெறிந்து
நீ போனாய்



நீ நீரூற்றியதால்
வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்
இன்று
உன் கருணையின் காலடிகளைத்
தேடியவாறு
தலைகவிழ்ந்து நிற்பதைக் காண்

(நன்றி- "எதுவரை" இதழ்-2)