உனது சொர்க்கமென அமைந்த வீட்டில்
அவள் நோய் வாய்ப்பட்டிருக்கிறாள்
நீ வளர்த்த எல்லாச் செடிகளும்
அவளுடன் வாடிக் கிடக்கின்றன

ஆனந்தமும் அன்பின் பரிமாற்றங்களும்
துள்ளிக் குதிக்கும் அறையெங்கும்
படிந்து போயுள்ளன
அவளது வருத்தங்கள்

கவிழ்ந்து தூங்குகிறது படுக்கைதனில்
கசப்பானதொரு வேதனை
உனை நகரவிடாது
அருகே அமர்த்தியுள்ளன
அவளது எளிய தேவைகள்

எந்தக் குறுக்கிடல்களும்
அமைதியைக் குலைத்துவிடக் கூடாதெனத்
தொலைபேசிகளைத்
துண்டித்து வைத்துவிட்டுத்
தூக்கம் விழித்திருக்கிறாய்

அபூர்வமாக
இன்றைய அதிகாலைப் பொழுதில்
அலாரத்துக்கு முன்பாக விழித்து
அமைதியாகக் காத்திருக்கிறாள்
உடலைவிட்டு விலகிப்போன
வலிகளை நினைத்துப் பார்க்கிறாள்
ஒரு கொடிபோல
ஆதாரத்தைத் தேடும் தூண்டலுடன்
உனைச் சுற்றியுள்ளது ஒரு கரம்

மென் நீல ஒளி சிந்தும்
இரவு விளக்கின் கீழே
மின்விசிறிக் காற்றிலசையும்
தலைமுடியைக் கோதிவிடுகிறாய்
உன் விரல்களிடையே தோய்கிறது
கருணையின் பரிதவிப்பு
தேவதையைப் போல
அசைகின்றன திரைச் சீலைகள்
இனி
அவளது நடமாட்டம்
இறுகிப் போயுள்ள வீட்டை
மீண்டும் தளர்த்தி வைக்கும்




சூரியன் தனது வெக்கை மிகு கதிர்களால்
இலைகளை வீழ்த்திக் கொண்டிருந்த
மரமொன்றில் வந்தமர்ந்தது
பிரளயத்திலிருந்து தப்பித்து வந்த பறவை


கனிகளோ வித்துக்களோ இன்றி
ஒரு சத்திரம் போல
நின்றிருந்த மரத்திடம்
சின்னஞ்சிறு பறவைக்குக் கொடுத்திட
எதுவுமே இருக்கவில்லை


குருவி குந்தியிருந்த மரத்தின் கீழே
வீழ்ந்து கிடந்தது
இற்றுப் போன ஒரு நிழல்
தொலை தூர ஆற்றுப் படுகையில்
மறைந்து கொண்டிருந்தது கடைசிச் சூரியன்

அசைந்து வரும் கரிய யானைகளைப்
பார்த்தவாறு
கைவிடப்பட்ட தனது கூட்டை எண்ணிக்
கண்ணீர் உகுத்திடலாயிற்று


அடைகாத்த முட்டைகளைப்
பெருங்காற்றில் போட்டுடைத்த கரங்களில்
எல்லா அதிகாரங்களும் இருந்தது
“ஏன் செய்தாய்” எனக் கேட்க முடியாத
அடக்கு முறையில் காலம் சிக்கியிருந்தது


குருவியை உறங்க வைத்திட முடியாமல்
கிளைகளினூடே
பதுங்கிப் பதுங்கி அசைந்து கொண்டிருந்தது
இருண்ட இரவு


உள்ளேயொரு சூனியத்தை வைத்து
உயிர் வேலியொன்றைச் சுமந்தவாறு
முடிவற்ற இருளொன்றினூடாக
அந்தச் சிறு பறவை
பறந்து போயிற்று




உனது முக வசீகரத்தைத்
துலக்கித் துலக்கித்
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது
காலத்தின் அற்புதக் கரங்கள்


உனது சொற்களைப் பற்றியவாறு
வீடெங்கும் படர்கிறது
பாசத்தில் வேர் ஊன்றிய கொடியொன்று


அத்தனை இனிமையான
அவ்வளவு ஆனந்தமான
அந்த மாலைப் பொழுதிலிருந்து
மெல்லத் துளிர்விட்டது
எப்பொழுதும் வாடாத ஒரு பூ


மரணம் இயன்றவரை பந்தாடிக்
கை விட்டுச் சென்ற
பாலை நிலத்திலிருந்து
ஒளிர்விடும் முத்தெனத் திரும்பி வந்திருந்தாய்
எமைப் பரிதவிக்க விட்ட
காலத்தின் கண்ணீரைத் துடைத்தவாறு
நிகரிலா ஆவலுடன்
நேத்திரங்களில் நிறைந்தாய்


எவரும் வந்து போய்விடக்கூடிய
முடிவற்ற தெருவினூடாக
எவராலும் எடுத்துவரமுடியாத
ஆனந்ததை ஒப்படைத்த பெருமிதத்துடன்
விடைபெறத் தயாரானாய்


உன்னிடம் காண்பித்திட
ஒரு வெளி நிறைந்த காட்சிகள் இருந்தன
அவசர மனிதர்களும்
மாலைப் பொழுதும்
எமைக் கடந்து போய்க் கொண்டிருந்த
வீதியிலே நடந்தோம்


பெரு மழைக் காலத்தை எதிர்பார்த்து
தூரத்து வ்யல் வெளிகளில்
எரிந்து கொண்டிருந்தது தீ
மூங்கில்கள் தலைகுனிந்து
எதனையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்
அடர்ந்த மரங்களின் கீழே
ஓடிக் கொண்டிருந்தது ஆறு
கொடிகளை இழுத்து அசைத்தவாறு


நீலம் பூத்த மலைகளும் தென்னந்தோப்புகளும்
கரையத் தொடங்கிய இருளில்
எம்மீது படிந்து கொண்டிருந்தது
ஏதோவோர் ஒளி
ஆகாயத்தின் கிழக்கே
உன்னைப் போலவே ஒரு நட்சத்திரம்
மின்னத் தொடங்கியிருந்தது


நின்று இரசித்திட யாருக்கும் நேரமற்ற
அந்த அஸ்தமனத்தின் மெல்லிய ஒளியினூடாக
தெருமுனைவில் வழிபார்த்திருந்த
அம்மாவிடம் மீண்டோம்


இருளானதும் கூடு செல்லத் துடிக்கும்
பறவையின் சிறகுகளோடு உந்திப் பறந்தாய்
பரிமாறப்படாத இரவுணவையும்
தந்துசென்ற அன்பின் பரிசுகளையும்
எங்கள் உள்ளங்களில் சுமக்கவிட்டு

(2009.09.27 இன் நினைவாக)






எனது இரண்டாவது கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.
இத் தொகுப்பை வெளியிட்ட தம்பி அகிலன், சயந்தன் உள்ளிட்ட "வடலி"க்கு எனது மனமார்ந்த நன்றிகள்

(இங்கே வாங்கலாம்)http://vadaly.com/shop/?page_id=231&category=27&product_id=88





நீ
இறைவனின் தோற்றமொன்றை
எதிர்பார்த்துக் காத்திருந்தாய்
தீண்டத் தகாத பொருளாக்கி
இருளின் மூலையொன்றில்
உனைக் கிடத்தியிருந்தது முதுமை

எழுந்து நடக்கத் தயாராகும் பொழுதெலாம்
வயோதிபமடைந்த பூமி
தள்ளாடித் தள்ளாடி
உனை வீழ்த்திடத் தயாராக இருந்தது

உன் வாழ்வு முழுதும் சேகரித்த
வேதனைகளைப் பகர்ந்திட
எந்தச் செவியுமே
அவ்வீட்டில் இல்லாதிருந்தது


பேரன்புடன்
அவதரிக்கச் செய்து ஆளாக்கி வளர்த்த
உருவங்களுக்குள்ளிருந்து
திரும்பி வரவே இல்லை
உனக்கான பரிதவிப்புகளும் பாசங்களும்


இனியும் சகித்திட முடியாத
வாழ்வை உதறியெறிந்து
நீ போனாய்



நீ நீரூற்றியதால்
வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்
இன்று
உன் கருணையின் காலடிகளைத்
தேடியவாறு
தலைகவிழ்ந்து நிற்பதைக் காண்

(நன்றி- "எதுவரை" இதழ்-2)




முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன

தனது குழந்தைகளுக்காக
எடுத்துச் செல்லும் கனிகள்
ஒவ்வொன்றாக அழுகுவதை
ஏக்கத்துடன் தூக்கியெறிகிறாள்

அன்பை
நிம்மதியை
மாபெரும் கருணையொன்றை
தன்னோடு எடுத்துச் செல்லக்
காத்திருக்கிறாள்

ராஜாக்களின் அரசியல்
அவள் வீட்டைச் சிதைத்தது
அதிகாரம் கொண்ட கழுகொன்று
அவளது புத்திரரைக் கெளவிப் பறந்தது
சித்தம் பிசக வைத்த
இரக்கமற்ற குரலொன்று
அவளைத் தெருவெங்கும் ஓடவைத்தது

இன்று...
கின்னரர் தம் இசையிழந்த
நிலமெங்கும்
அவளது ஒப்பாரி அலைகிறது
அரசனைத் துதிபாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டொழிகிறது


(நன்றி: "எதுவரை" இதழ்-2)

மழை




இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை

ஆட்டுக் குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப் போவதற்குத்
தருணம் பார்க்கிறது

புகார்கொண்டு
தன்னைப் போர்த்தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழிதவறியலைகிறது

வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது

யார் யாரோ
வரைந்த கோடுகளையெலாம்
தனது கால்களால்
தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக் கழுவுகிறது

பெரும் கோட்டைகளையெலாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமற் போகவே
அவற்றின் வசீகரங்களை
கழுவிக் கொண்டு நகர்கிறது

ஆழ் மண் வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை

(நன்றி:மறுபாதி)

அம்மா





இருக்கும் இரு கரங்களும்
போதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின் பின்னால்
எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும்
இரக்கமற்ற சொற்களும்
இங்கிதமில்லாக் கட்டளைகளும்
ஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக் கொண்டிருக்கும்
ஓராயிரம் பணிவிடைகளும்


மனமுடைந்து போன சொற்கள்
முட்டிமோதுகின்ற வீட்டில்
எப்பொழுதும் வெடித்துவிடத் தயாராக
நடமாடித்திரிகிறது பொறுமை


வலிய பாதங்களை அதிர வைத்து
நடந்து போகிறது
அனைத்தையும் மறுதலிக்கும்
ஒரு புறக்கணிப்பு


ஓங்கி வைக்கப் படும் பொருட்களிலிருந்தும்
அறைந்து சாத்தப் படும் கதவுகளிலிருந்தும்
புறப்பட்டு வருகிறது
அடுத்தவர் மீதான ஆத்திரங்கள்


கற்களை மாத்திரமே வைத்துக் கட்டப்பட்ட
வீட்டின்
விசாலமான கதவு , யன்னல்கள் வழியே புகுந்து
திரைச்சீலைகளை வீசியெறிந்து
முகஞ்சுழித்தவாறு வெளியேறிப் போகிறது
அன்பில் தோயாத ஒரு வெப்பக் காற்று

சிதறடிக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்வையும்
உடைத்து வீசப்பட்ட அன்பின் வரைபடங்களையும்
வீடெங்கும் இறைந்து கிடக்கும்
ஒருவனின் வக்கிரங்களையும்
சேகரிப்பதிலேயே
களைத்துப் போகிறாள்


வருத்தம் கவிழ்ந்த உடலுடன்
என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்
ஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும்
தண்ணீர்க் குவளையொன்றுக்காகவோ
அற்பச் சொல்லொன்றுக்காகவோ
கூச்சலிடும் ஒரு குரல்
நடைப்பிணம் போல எழுந்து வரும்
அவளது பாதங்களில் பின்னும்
யுகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும் நிம்மதியொன்று


என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடு நேரம் வரைத்
துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்
எல்லோரும் உண்டு முடித்து எஞ்சும்
குளிர்ந்த உணவுக்காக


கருங்கல் சிலையொன்று
அதிகாரம் செய்த படி அலைகின்ற வீட்டில்
மோதி மோதியே செத்து விட்டன
அவள் வளர்த்த எல்லா மான்குட்டிகளும்

2009.01.02
(நன்றி: "கலைமுகம்"-49)






வெறியேறிய நீசன்
அபராதி நீ


உனது சாக்கடைகளில் வளரும்
பன்றிகள் கூட்டத்தை
ஊடகப் பண்ணையொன்றில்
உள் நுழைய விட்டாய்
'மகாராஜாவின்' கழுத்தை நெரித்த
கைகளின் விறைப்புத் தணிய முன்பே
'லசன்த'வின் குருதியில்
இன்னுயிரை ஓடவிட்டு
அந்தப் பகற்பொழுதைப்
பதைபதைத்திட விட்டிருந்தாய்


வெறியேறிய நீசனன்றி
வேறென்ன பெயர் உனக்கு?

சொர்க்கத் தீவின் அற்புதக் கிரீடம்
அதிஷ்டம் தவறி உனது
தலையில் வீழ்ந்த கணம்
அனைத்தையும் இடம்மாற்றி இருத்தியது
மனிதாபிமானத்தைப் புதை குழியிலும்
காட்டுமிராண்டியைச் சிம்மாசனத்திலுமாக


காஸாவுக்குக் கருணைமனு எழுதும் நீ
வன்னிக்குள் ஏவிவிட்ட 'காவல் தெய்வங்கள்'
சிதறிக் கிடக்கும் உடலங்களின் மீதும்
சின்னாபின்னமான குழந்தைகளின் வாழ்வுமீதும்
ஏறிநடப்பதைப் பார்த்தவாறு
தினந்தோறும் உன்மத்தம் கொள்கிறாய்


இரத்தமும் சதையும் தின்றவாறு
மக்கள் கைவிட்டுச் சென்ற ஊர்கள்தொறும்
நாவைத் தொங்கவிட்டபடி அலைகிறது
நீ கட்டவிழ்த்து விட்ட பேரவலம்


கொடூரச் சாவுகளைக்
கண்டு கண்டு அதிர்ந்த மண்
பலி கொள்ளும் கண்களுடன்
உனையே பார்த்திருக்கிறது

உனது அரசியல்
சகித்திட முடியாத் துர்வாடையுடன்
வீதிக்கு வந்துள்ளது
சுபீட்சம் மிகுந்த தேசத்தின் ஆன்மா
கைவிடப் பட்ட களர் நிலமொன்றில்
புதையுண்டு அழுகிறது
(நன்றி: புகலி)






மேதைகளும் மாபெரிய வீரர்களும்
மீண்டு வராமற்போன
மருத்துவமனைக் கட்டிலொன்றிலிருந்து
அதே தீர்க்கமான முடிவொன்றிலிருந்து
எழுந்து வந்துள்ளாய்


திருநாமங்களையெலாம்
உச்சாடனம் செய்து
எல்லாம் வல்லவனிடம்
உனை மீட்டுத் தரவேண்டி
ஏந்தித் தவித்த கரங்களை
அழுத்திக் கொண்டிருந்தது
அன்பின் கொடும் சுமை


உயிரோடு போராடிக் கொண்டிருந்த
இன்னுயிரைத்
தூர தேசத்தில் விட்டு விட்டு
ஊர்ந்தூர்ந்து வந்ததந்தக்
கொடிய காலம்


இருக்கும் இடத்தை
நொந்து போன எண்ணங்களால்
நிரப்பி விட்டுத்
துயரேறிய பொழுதுகளை
இழுத்தவாறு நொண்டி நகர்ந்தன
இரு பாதங்கள்


செல்லப் பறவையே....
இறுதியில் நீ வந்தாய்
உதிரமெங்கும் கலந்தோடிய நஞ்சிலிருந்து
உன் ஜீவனை மீட்டெடுத்து வந்தாய்


உறங்க மறந்த இரவின் மீது
ஆனந்தக் கண்ணீரைக்
கசிய விட்டவாறு
வாழ்விலிருந்து நழுவிப் போனதொரு
பெரும் வலி

என்ன வார்த்தையால் உனை வரவேற்பது
எந்தக் கரம் கொண்டு உனை அரவணைப்பது
எனத் தெரியாத கடலொன்றுக்கப்பாலிருந்து
கையசைக்கிறாய்


ஆருயிரே வருக
பாக்கியம் புரிந்தவர் நாம்
உனை மீளவும் பெற்றிருக்கிறோம்

-----------------------------------
*தம்பி ரிஷானுக்கு




ஒரு துர்க்காலத்தைப்
பரப்பி வைத்துப்
புழுங்கித் தவித்தது
நீண்ட கோடை



நஞ்சுண்ட நாட்களைச்
சுமந்தவாறு
அரபிக் கடல் மீது
ஓயாமல் தத்தளித்தது
ஒரு பேரலை

ஆருயிர்கள்
துடிதுடித்த பொழுதுகளைப்
புரட்டிப் புரட்டிப் படித்து விட்டுத்
தூர எறிந்து போயிற்று
விதியின் கொடும் கை


இன்று...
வீழ்ந்து கிடந்த திசைகள்
புத்துயிர் பெற்று நிமிர்கின்றன

தலைமீது சுமந்தலைந்த
பாறாங்கல்லொன்றை
இறக்கி வைத்துவிட்டு
விலைமதிப்பற்ற திரவியமொன்றை
ஆரமெனச் சூடிவருகிறது
சூரியோதயம்

நொந்து போன சிறகுகளை
மெல்ல மெல்ல அசைத்தவாறு
உந்திப் பறந்திடும்
உற்சாக வேளைக்காகக்
காத்துக் கிடக்கிறது
எங்கள் அன்பு "வானம் பாடி"

இறைவ,
நினதளவற்ற அருளுக்கு
நன்றிகள் கோடி
****************************
(ரிஷானுக்கு)





மனமுருகிக்கேட்ட பிரார்த்தனைகளின் முடிவில்
அடுத்துச் செய்வது
என்னவென்றறியாமல்
வலிமிகுந்த கேள்விகள்
வீடெங்கும் பரவிப் போயிருந்த
இன்றைய
அந்திப் பொழுதின் பளுவை நீக்கி
நீயழைத்தாய்


எஞ்சியிருக்கும் வலுவெலாம் திரட்டி
இரகசியக் குரலில் கதைத்தாய்
உயிர் பிழிபடும் வேதனையை
உச்சரித்த ஒவ்வொரு சொல்லிலும்
வழியவிட்டாய்

உன் சிரித்த முகம்
உன்து புன்னகைக் குரல்
எல்லாவற்றையும்
இந்தப் பயங்கர நாட்களிடம்
பசியாறக் கொடுத்துவிட்டாய்

உனது தோள் மீது வந்தமரும்
பட்சிகளெதுவும் பறந்து வராத
அடிவான மலைத் தொடர்களை... ...
உன் குருதியில் கலந்திருக்கும் நஞ்சை
வாங்கிக் கொள்ளத் தெரியாமல் பார்த்திருந்த
விசாலமிகு வான வெளியை ........
வேதனை நிரம்பியிருக்கும்
மிகப் பெரிய கடலொன்றை.....
எண்ணித் தவிக்கிறாய் .
இன்னும் நீ
நோவுகளில் இருந்து மீளவில்லை
இது வரையும் நீ
துயரத்தின் எல்லையைத் தாண்டவும் இல்லை

உனை ஆபத்தில் கிடத்திக் கொண்டு
அடுத்தவரின் நிம்மதிக்காக
அனைத்தையும் மறைத்தாய்
உன் உடலில் புகுந்த நஞ்சை
நாங்கள் பருகியிருக்கக் கூடாதா?
உனை வதைக்கும் வலிகளை
நாங்கள் ஏற்றிருக்கக் கூடாதா?

அதிகாலையின் மீதும் பத்து இரவுகள் மீதும்
வானத்தின் மீதும் விடிவெள்ளியின் மீதும்
அந்த மாபெரும் நகர்மீதும் மலை மீதும்
சத்தியம் செய்பவனே....
எங்கும் நிறைந்த இறைவனே
எல்லாம் வல்ல ஒருவனே

எங்கள் தம்பியை
சுகப்படுத்தித் தந்துவிடு
நகரமுடியாத வேதனையின் சுமையுடன்
கால்களைச் சுற்றியிருக்கும்
இந்தக் காலத்தைப் போக்கிவிடு









2009.05.04 (16:14)


இன்று கதைத்து நீதானா?

அன்புத் தம்பி

அது நீதானா?



உனது குரல்

எனது நம்பிக்கைகளை உடைத்தது

உனது கோரிக்கை

எனது தைரியத்தைச் சிதைத்தது


எந்தப் பதிலுமளிக்காத

தொலைபேசி இலக்கமொன்றை

எம்மிடையே விட்டுப் போயிருந்தாய்

கடல்கள் தாண்டி

மலைகள் தாண்டி

ஏக்கத்துடன் திரும்பின

பல நூறு அழைப்புகள்



எல்லோரிடமும் புன்னகையை

மிதந்து போக விட்டுக் கொண்டிருக்கும்

நீ தான் இன்று

கைவிடப்பட்ட படகொன்றில்

அத்தனை பேரையும்

தவிக்க விட்டுள்ளாய்



தூர நாட்டில்

கிடத்தப் பட்டிருக்கும்

மருத்துவமனைக் கட்டிலொன்று

பிரார்த்தனைக்காக ஏந்தப் படும்

என் கரங்களுக்குள்ளே நடுநடுங்குகிறது

தனது அருளின் அரவணைப்புக்குள்

இறைவன் உனைக் காத்திட வேண்டுமென்று

உள்ளம் உருகியழுகிறது


டோஹாவின் காற்றே....மண்ணே....

நட்சத்திரங்களே..சூரிய சந்திரரே..

அற்புதங்களைப் பொதித்து வைத்திருக்கும்

மாபெரிய வானகமே...

எங்கள் தம்பி நலம் பெற்று வந்துவிட

இறைவனிடம் முறையிடுங்கள்


ரிஷா.......................ன்

உன் வருத்தங்களை

எங்களுக்குத் தந்து விட்டு

நீ எழுந்து வந்து விடு

எமது ஆரோக்கியங்களை

உன்னுடலில் வாங்கிக் கொண்டு

இன்புற்று வாழ்ந்து விடு

____________________________________-
* இதனைப் படிப்பவர்கள் ஒரு கணம்
விழிமூடி மெளமாக இருங்கள்
சகோதரன் ரிஷான் நலம் பெற வேண்டு மென்று
பிரார்த்தியுங்கள்


மலைச் சரிவின் பின்னால் இருந்து
சூரியன் தலைகாட்டத் தொடங்கியவுடன்
கதிர்களை இலைக் கரங்களில் ஏந்தி
நிழலை வழியவிடத் தொடங்குவாய்


எறும்புகள் போல நித்தமும் அலைகின்ற
எப்பொழுதேனும் உன் நிழலில் கூடுகின்ற
அந்தத் துடுக்கு மிக்க சிறுமியரின் தலைமுடியைக்
கிளை தாழ்த்திக் களைத்துவிட்டு
ஏதுமறியாத பாவனையுடன் அசைந்தாடுவாய்
மழை ஓய்ந்த வேளைகளில்
இலைகளில் தண்ணீரைத் தேக்கி வைத்து
அதே சிறுமியரின் முகமெங்கும்
தெளித்துக் கூத்தாடுவாய்


வானத்தைத் தாங்கிடவோவென
நெடிதுயர்ந்த கிளைகளினூடே
தூரத் திசைகளைப் பார்த்திருந்தாய்
உனது வேரடிக்கு
விஷமெடுத்து வந்த மனிதனை மட்டும் கவனியாது
கிளைகளை அசைத்த படி மரம் போல நின்றிருந்தாய்


உனது வேர்களைத் தேடி ஆயுதங்கள் சூழ்ந்த வேளை
பற்றியிருந்த மண்ணைப் பறிகொடுக்கலானாய்
மண்ணையிழந்தவர் தம் படிமங்களையும்
மொழியையும் இழப்பார்களென்று
உனது நிழலில் அமர்ந்து அந்தச் சிறுமியர் படித்த
வரலாற்று நூலை
என்றோவொரு நாளில் நீயும் கேட்டிருந்தாய்



தோண்டிய கிடங்கிலிருந்து
வேர்களால் கரையேறி வர முடியாமற்போகவே
விஷத்தைத் திணித்து
மூச்சுத் திணறும் வரைக்கும் மண்ணிட்ட
மரணத்தின் முற்றுகைக்குள் மூழ்கினாய்

உனது வேர்களை ஒடுக்கி ஒடுக்கிச் சுருட்டிய பொழுதும்
அதிர்ந்து போயிருந்த வேர்க் கண்களுக்குப்
பதுங்கிக் கொள்ளும் இடமெதுவும்
புலப்படாமலே போயிற்றோ?


இரவு முழுதும் ஓடிக் கொண்டிருந்த அருவியிடம்
உனைச் சூழ்ந்திருந்த விஷத்தைக்
கழுவிக் கொண்டோடுமாறு
மன்றாடிக் கொண்டேயிருந்தாய்
எல்லைகளைத் தாண்டமுடியாத அருவி
இடர் மீட்புக் குழுவினரின்
நிராகரிக்கப் பட்ட உதவிகளைப் போல
மணற்கரைகளை நனைத்துத் திரும்பலாயிற்று

சுவர்க்கத்தின் வாயில்கள் மூடப்பட்ட அதிகாலையில்
எங்கிருந்தோ மழையைச் சுமந்து வந்து
கருமுகில்கள் பொழிந்தன
அந்த மழைக்குக் கருணையே இல்லாதிருந்தது

மழை நீரில் கரைந்தூறிய நஞ்சை
வேறு வழியற்று
உன் மெல்லிய வேர்களில் நிரப்பலானாய்
பின்னர்
அன்னையர் போலத் தாங்கி நின்ற கிளைகளுக்கும்
பருவமொன்றின் கனவுகளுடன் பூத்திருந்த மலர்களுக்கும்
விஷத்தை எடுத்துச் சென்றாய்
சின்னஞ் சிறு குழந்தையின் பிஞ்சுக் கரங்களை நிகர்த்த
பசிய தளிர்களுக்கெல்லாம் நஞ்சைப் புகட்டிய பொழுது
பிரலாபித்து அழத் தொடங்கினாய்

இரகசியமாக ஊடுரும் உனது வேர்கள்
கட்டுமானங்களைத் தகர்ப்பதாயும்
அடர்ந்து வளர்ந்த கிளைகள்
விஷ ஜந்துக்களைப் பேணிக் காப்பதாயும்
புனையப் பட்ட கதைகளை எப்பொழுதும்
ஏற்க மறுத்தாய்

உடலெங்கும் ஊர்ந்து செல்லும் மரணத்தின் எதிரிலும்
உறுதி கொண்ட வீரத்துடன் வீழாமல் நின்றாய்
வானம் கைவிட்டதையும்
பூமி சிறைப் படுத்தியதையும்
காப்பாற்றிட முடியாத சூரியன் பரபரப்புடன்
தெருவழியே அலைந்து திரிந்ததையும்
நீலம் பாரித்த அலைகளினூடே
இறுதியாகக் கண்டிருப்பாய்
(நன்றி: அம்ருதா)


நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது
காலத்தின் பிறிதொரு முகம்


இன்று
மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுள்ளேன்
முதன் முறையாக
நிறைவு செய்யப்பட்ட வசனமொன்றை
உன்னிடம் ஒப்பிக்கிறேன்
அதே புன்னகையை மறுபடியும்
எடுத்து வைக்க முடியாமல்
விலகிச் செல்கிறேன்


மகத்தான பொறுமையொன்றின்
காத்திருப்பைக் கண்டு கண்டே
புறக்கணிப்புக்களை வளர விட்டிருந்தாய்
மனதில் பதிந்த உனது நிழல்
சிதறிய வாசனைத் திரவியம் போல
மெல்ல மெல்ல மறைந்தே போயிற்று


நீ உரிமை கொண்டாடிய
எல்லாவற்றிலிருந்தும்
எனை விடுவித்துக் கொண்டேன்
துயரத்தில் பதை பதைத்த சொற்களையும்
துரோகத்தால் நசுங்குண்ட சத்தியங்களையும்
உனது சுவர்களக்குள்ளேயே விட்டு விட்டு
வெளியேறிப் போகிறேன்


இப்பொழுதும்
ஆதித்திமிர் தடுத்திட உன்னிடம் எஞ்சியுள்ளது
ஒரு சொல்
விதி தனது கண்ணீரை வழிய விட்டசொல்
நாம் நமக்குக் கிடைத்திடக் காத்திருந்த
கடைசிச் சொல்




தான் மாத்திரம் உணரக் கூடிய மொழியில்
கதைத்துக் கொண்டிருந்த
சின்னஞ்சிறு நாற்றுக்களைச்
சிறுமி
குழந்தையைத் தூளியில் கிடத்தும் பக்குவத்தோடு
குழிகளில் நட்டிருந்தாள்
ஆற்றோர மூங்கில்களின் கீதங்களைக் கேட்டவாறு
கதை பேசிப் பேசி அவளுடன்
அவைகள் வளர்ந்தன



"காலையில் வா
அற்புதமொன்றுடன் காத்திருப்போம்'
எனக் கூறி
ஒவ்வொரு மாலையிலும்
அவளை வழியனுப்பி வைத்தன



சூரியனுக்கு முன்னால் அவள் எழுவாள்
பின்னர்
நீள நீள நிழல்களை விழவிடும்
மஞ்சள் வண்ணக் கிரணங்களுடன்
தோப்பினுள் நுழைவாள்
தூர வரும் போதே கண்டு கொள்ளும்
மூங்கில் புதர்களெல்லாம்
தாளத்துடன் அசைந்தாடி
அவளை வரவேற்கும்
ஒரு தளிரையோ
பூவையோ பிஞ்சையோ
அவளுக்குக் காட்டிடவே
செடிகளெலாம் காத்திருக்கும்



தாள முடியாத இன்பம் பொங்கிட
ஆற்றை நோக்கி ஓடுவாள் சிறுமி
சலசலத்தோடும் தெள்ளிய நீரைச்
சிறிய வாளிக்குள் பிடித்து வருவாள்
வாளி கொள்ளா உற்சாகத்துடன்
துள்ளிப் பாயும் தண்ணீர்
மீன்கள் நிரம்பிய அவளது
சின்னச் சட்டையை
நனைத்து நனைத்துக் கூத்தாடும்


செடிகளின் வேரடியில் அவள்
தண்ணீரைப் பாய்ச்சும் வேளை
இசையுடன் பாய்ந்தோடும்
வரும் வழி நீள
நதி நனைத்துச் சுமந்து வந்த
பல்லாயிரம் வேர்களின் மொழிகள்



பின் அவை
பூக்களில் கவிதைகளை வரைந்தவாறு
அவள் போலவே வளரும்
(நன்றி: அம்ருதா)

வெயில்



வெட்டியகற்றப்பட்ட மரம்
விட்டுச் சென்ற வெளியில்
அதிரடியாக
இறங்கிக் கொண்டிருக்கிறது வெயில்


சாவகாசமாய் நிலத்தில் அமர்ந்து
தாடைகளை அசைத்தவாறிருக்கும்
கிழட்டுப் பிராணியை
காலையில் ஒரு திசையிலும்
மாலையில் பிறிதொரு திசையிலும்
இடம் மாற்றி இருத்துகிறது
ஏதோவொரு நிழல்


வேனிற்காலப் பறவைகளை
ஒரு தேசத்திலிருந்து
இன்னொரு தேசத்திற்குக்
கூட்டிப் போகும் வெயில்
ஆகாயம் பத்திரப் படுத்தி வைத்திருக்கும்
பயணப் பாதைகளின்
வரைபடங்களைக் குழப்பாதவாறு
மீள அவற்றை அழைத்து வருகிறது

மாளிகை வாசல்களுக்கு வெளியே
தயங்கி நிற்கும் வெயில்
எளியவர் முற்றங்களுக்குச்
சிடுசிடுப்புடன் திரும்புகிறது

தாய்த் தேசத்தில் அனாதையாக்கப் பட்ட மகள்
புகலிடம் ஒன்றைத் தேடிப் போகிறாள்
நிழல்களை விரட்டும் பிறிதொரு வெயில்
அவள் பின்னே போகிறது


கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டு விட்டு


வெயில் மறைந்ததும்
அந்தப் பெரு வனம்
கூந்தலை அவிழ்த்துப் போட்டவாறு
தெருவெங்கும் அலையத் தொடங்குகிறது
பதுங்கியிருந்த மிருகங்களையெல்லாம்
தன்னோடு அழைத்துக் கொண்டு
*********************************

("யாத்ரா " கவிதை இதழுக்கு எழுதப்பட்ட கவிதை)




அடுத்தவர்தமை ஆறுதல் படுத்திடத் தானே
அன்பினைப் பகர்ந்திடாது அகன்று சென்றேன்
மீறிப் போய்விடாதிருந்திடப் பண்பாடுகள்
மெளனத்தின் விலங்குகளால் எனைப்
பிணைத்திருந்தேன்


அன்பு ததும்பிக் கிடந்த உனதழகிய
விழிகளில் பதிந்திடா வண்ணம்
பிடிவாதத்துடன் கண்களைத் திருப்பிக் கொண்டேன்
வந்தனங்களும் புன்சிரிப்பும்
உன்னெதிரே வராமல்
இறுகிய முகக் கோலத்தை எனதாக்கிக் கொண்டேன்
உனது நிழல் மீது எனது நிழல் வீழ்ந்து பின்னிடும்
அருகாமையால் வேகமாகக் கடந்து போனேன்
பிரியாவிடைபெற்றுப் புன்னகையுடன் பிரிந்த நாளில்
பகிர்ந்திடாத அன்பின் பளுவினைச் சுமந்து போனேன்

ஆனாலும்
கல்லூரி முன்றலிலும்
அதி வேகத் தெரு முனைவினிலும்
அந்தி மஞ்சள் கிரணங்கள்
முகத்தின் கண்ணாடி வில்லைகளிலும்
சொகுசு வாகனத்திலும் பளிச்சிட்டுச் சிதறிட
ராசா போல எதிரே வந்து
வேகம் குறைத்து நீ தடுமாறித் தவித்த
நகரத்தின் மத்தியிலுமாய்
எதிர்பாராத் தருணத்தில்
எதிர் கொண்ட உன் விழிகள் மாத்திரம்
எனை உற்றுப் பார்த்தவாறே கிடக்கின்றன
இன்னும்

திரும்பத் திரும்பப் பார்த்து
எடுத்துச் செல்லாமலே விட்டுச் சென்ற
உனது பார்வைகள்
உயிரோயும் வரைக்கும் உள்ளொளி பாய்ச்சிடுமோ?
உயிரோயும் வரைக்கும் உயிரினைத் தீய்த்திடுமோ?


************************
20051223

Powered by Blogger.

தொகுப்புகள்

தொகுப்புகள்


About Me

My Photo
ஃபஹீமாஜஹான்
View my complete profile

Search

Blog Archive

About