எப்பொழுதும்
நீ
கதைசொல்ல ஆரம்பிக்கும் இரவுகளின் முடிவில்
மலைகளிலிருந்து
இறங்கி வரத் தொடங்கும்
துயரத்தின் ஓடையொன்று


தாங்க முடியாச் சுமைகளின்
கனம் வலுக்கும் தருணங்களில்
பற்றியிருக்கும் பாறைகளை ஒவ்வொன்றாய் நழுவவிடுவாய்
உணர்ச்சியின் விளிம்பில்
மரணத்தை அழைத்திடும் சரிவுகளைத் தாங்கி
நீ
அமைதியில் உறைந்திருப்பாய்


பூர்விக குடிகள் விட்டுச் சென்ற தடயங்களைப்
பாறை இடுக்குகளில்
மூலிகைச் செடிகளிடையே பத்திரப் படுத்தியிருப்பாய்
வழிதவறிய ஆடுகளைத் தேடி வரும் சிறுவரிடம்
அற்புதங்களை மடியவிழ்ப்பாய்


நட்சத்திரங்கள்
வழிகாட்டும் இரவுகளில்
போகவிடாது பிணைத்திருக்கும்
ஆதி வேர்களை அசைத்துப் பார்ப்பாய்
உனையே பார்த்தவாறு ஓயாமல் கையசைக்கும்
வயல்காட்டு வெருளியோடு
மீறமுடியாத விதியதன்
நெடுங்கால வேதனையைப் பகிர்வாய்


ஈரத்தைக் குடிக்கவரும்
நிழல்தராச் சூரியனின் தண்டனைகளுக்குத்
தினந்தோறும் பயந்திருப்பாய்
மலையடிவாரத்து நீர்தேங்கிய கழனிகளில்
வீழ்ந்து நடுநடுங்கும்
மாபெரிய உன் விம்பம்.

************************************
2008.02.18
(நன்றி:கலைமுகம்)




அவளைக் கைவிடப் பட்டவளாக்கி
பிரார்த்தனைகளைப் பறித்து
இழுத்துச் சென்ற தெருக்களினூடாக
மேலெழுந்த புழுதிப் படலத்தைப்
புறக்கணித்து நீ சென்றிட அதிக நேரமெடுக்கவில்லை


மனதைச் சிதைத்த பாவத்தை
உயிரை வதைத்த தண்டனையை
நயவஞ்சகனுக்கான கூலியைக்
காவியவாறு
இடு காட்டுக்கும் உன் வாசலுக்குமாகக்
காலம் அலைந்தது


அகாலத்தில் திணித்து
நீயும் கைப்பிடி மண்ணிட்டு மூடிய ஓரிடம்
மெளனத்தின் ஆயிரம் ஈட்டிகளை - இனித்
தினந்தோறும் உனை நோக்கி ஏவும்


புறக்கணிக்கப்பட்டவளின் மொழிக்குப்
பெறுமதியிருக்கவில்லை
அநியாயமிழைக்கப்பட்டவளிடம் கையளித்திட
இனி எந்தப் பிராயச்சித்தங்களும்
தேவைப் படப்போவதில்லை

அற்பப் புழுதான் - நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்

ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும்
விழுமியங்களினூடாகப்
பாவிச் சென்றிருக்கும் வேரினை
விடுவிக்க முடியாதவளாக
இன்று
அண்டசராசரங்களின் எதிரே வீழ்ந்து கிடக்கிறாள்


நீகொடுத்த சுமைகளையும்
அந்த உடலையும்
உன்னிடமே எறிந்து விட்டாள்
இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப் போவதில்லை
நீ துன்புறுத்திய அவள் ஆத்மா



நீ திணித்து விட்டுப் போன
துயரத்தின் குழந்தையை
தாங்க முடியாத ஏமாற்றத்தின் பளுவுடன்
தோள் மீது உறங்க வைத்துள்ளேன்


அது துயில் கலைந்து வீரிட்டு அழாதிருந்திட
எப்பொழுதும்
ஆறுதல் மொழிகளற்ற
ஆழமான மெளனத்தை
எனைச் சுற்றி எழுப்பியுள்ளேன்


நான் அழைக்கப் படும்
அரங்குகளில்
எல்லா வரவேற்புக்களோடும்
எனக்கான இருக்கைதனில் அமர்த்தப்படுகிறேன்
பக்குவமாகக்
குழந்தையைத் தோள்மீது சாய்த்தவாறு
தயாரித்து வைத்திருக்கும் வாசகங்களைத்
தணிந்த குரலில் ஒப்புவித்துவிட்டு
ஊர்மெச்சிடும் மகளாகப்
படியிறங்கிப் போகிறேன்

உனைக் கடந்து செல்லும் கணத்தில்
எனது தோளிலிருந்து நழுவும் குழந்தை
உன் மீது
ஒரு கொடி போலப்
படர்ந்திடச் சாயும் வேளை மீண்டும்
அடுத்த தோள்மீது தூங்க வைக்கிறேன்

திரும்பித் திரும்பி
உனையே பார்த்தவாறு தேம்பும் குழந்தையை
எனது கை மாற்றி ஏந்திக் கொள்ளும்
எல்லா உரிமைகளும் உனக்கிருந்தும்
உன் கரங்கள் ஒரு போதும் நீளவும் இல்லை
வேறு எவரிடமும் கொடுத்திட
நான் விரும்பவும் இல்லை
(நன்றி:வடக்குவாசல்)






பிஞ்சுப் பாதங்கள்
செல்லக் கனவுகளின் மீது தத்தி நடந்த வேளை
உனது சாட்டை அடிகளால்
சின்னவளின் கால்களில் பதித்த
இரத்தக் கோடுகளின் மீதிருந்து
உனது குரூரத்தின் பாதையைத் தொடங்கினாய்
அந்தச் சிறுமியின் உலகில்
பிசாசின் உருவெடுத்து உலவலானாய்


அவள் வளர வளர
விஷப் பற்களின் கூர்மையைத் தீட்டியவாறே
அந்தச் சின்னவளின் காலங்களை
அச்சுறுத்துபவனாக நடமாடித் திரிந்தாய்



உனது காலடியோசைகளில்
அவளது பாடல்கள் மெளனித்துப் பதுங்கிக் கொண்டன
தீவைத்த மலரெனப் பொசுங்கிவிழும்
அவளது புன்னகையை மிதித்தவாறு
நித்தமும் வலம் வந்தாய்
அவள் ஒளியினைத் தரிசித்த
எல்லா வாசல்களையும்
வாளேந்தியவாறு அறைந்து சாத்தினாய்
மலையென அழுத்தும் இம்சைகளை
அந்த வீடெங்கும் அவிழ்த்து விட்டிருந்தாய்


அவளைக் காப்பாற்றிடவெனப் பொங்கி வந்த
ஒரு காதலின் பிரவாகத்தை
எந்தச் சுவடுமின்றித் தூர்ந்திட வைத்தாய்
நடைப்பிணமானவளை
உனது அரங்குகளிலிருந்து ஓரம்கட்டி
இருளொன்றின் பள்ளத்தாக்கில் அலையவிட்டாய்


அந்தச் சிறுபெண்
உணர்வுபெற்றெழுந்த ஒவ்வொரு வேளையிலும்
உன் கோரப்பற்களால் தீண்டித் தீண்டித்
துடிதுடிக்க விட்டாய்
எக்காலத்திலும் கருணையைச் சிந்தாத கண்களில்
தீயினைக் காவித்திரிந்தாய்

கேள்
நீயாரென்பதை அவளிடம்
அடையாளப் படுத்துவாள்
நாசகாரன்
கொடூரன்
காட்டுமிராண்டி
மன்னிப்பேதுமற்ற மாபாதகனின் வடிவமென


இறைவனே,
இம்முறை உனது வானவர்களை அனுப்பாதே
ஏழு ககனம் விட்டு நீயே இறங்கி வா
உனை வழிபடும் துரதிஷ்டத்தின் புதல்வியை
பேய்களின் தலைவனின் நிழலில்
வதைபட விட்டிருப்பது உனக்குத் தகுமெனில்
தடுப்பதற்கில்லை
எந்த ஆலயத்தை வேண்டுமானாலும் நீ
தரைமட்டமாக்கிப் போகலாம்





நான் அகன்று போகிறேன்
உனது எல்லாப்
பாசாங்குகளை விட்டும்
பிடிவாதங்களை விட்டும்


வழிகேடு உனது வேதமான பின்னர்
குடிகேடன் உனது தோழனான பின்னர்
என் குரல்
நினது இதயத்தில் ஏறாமல்
நழுவி விழுகிறது


இந்தத் துயர் மிகுந்த நாட்களில்
சகோதரத்துவத்தின் மரியாதையின் மீது
கசந்த நிழலைப் படிய விடுகிறாய்
காப்பாற்றுவதாகச் சொல்லும் உறுதிகளை
வெறிபிடித்த அலைகளிடையே கைவிட்டுள்ளாய்


அன்னையைக் காதலியைக் கடைசியில்
சகோதரியை
அவமானங்களால் போர்த்துகிறாய்
இன்னும் மீதமிருக்கலாம் உன்னிடம்
போர் நிலத்திலிருந்து
பொத்திப் பிடித்துக் கொண்டு வந்த
வாழ்வும் வசந்தங்களும்
இனி அவற்றையும் ஒவ்வொன்றாக
சாத்தானிடம் அடகுவை

மீளவே முடியாத இழிவின் வாசலைத்
தட்டிக் கொண்டிருப்பவனே
இறுதிக் கோரிக்கையையும் நின் பாதங்கள்
நசித்துக் கொண்டு போனபின்னர்
இனி மறுப்பதற்கில்லை
அந்தக் கடப்பாரையை
எனது தலைமீது கைவிட்டவன்
நீதான் என்பதை

அடவி 2007




தீ மூட்டப் பட்ட
வனத்தைவிட்டுத்
தப்பித்துப் பறக்கிறது
பறவை

சிங்கத்தோடு நரிகளும்
புலியோடு ஓநாய்களும்
அணிதிரண்ட அடவியில்
அபயம் தேடியலைகிறது
மான் குட்டி

வற்றிய குளத்தில்
வந்திறங்கிய கொக்குகள்
நீர் ததும்பும் நதிகளில்
சேர்ப்பிக்கும் கதைகள் பேசி
மீன்களைக் காவிப்
பறக்கின்றன மலையுச்சிக்கு

தேனீக்களை விரட்டியடித்துத்
தேன் சொட்டும் வதையை
அபகரித்துக் கொண்டது
கரடி

அடவியெங்கும்
அதிர்ந்து ஒலிக்கிறது
என் தேசத்து
மானுடத்தின் பேரவலம்







நெடுங்காலத் தாமதத்தின் பின்
இப்போது அழைக்கிறாய்
எந்த மன்னிப்புமற்ற வியாக்கியானங்களோடு
பதுங்கிப் பதுங்கி வந்திருக்கிறாய்

முதன் முறையாக உன்னை எறிந்தேன்
இதயத்திலிருந்து சாக்கடைக்கு
மாசுற்றவைகளைத் தூக்கியெறிந்திட
இரு தடவைகள் சிந்தித்ததேயில்லை நான்

தூமகேது மறைந்து போன இடத்தில்
இருள் கவிகிறது
ஆதியில் இடப்பட்ட வழியொன்றினூடாக
தேடிப் போக முடியாத நிலவு
தேய்ந்து தேய்ந்து நகர்கிறது

இருளொன்றின் உள்ளேயிருந்து
அன்பானவளே என்கிறாயா?
எந்த அறிமுகமுமற்றவளாக
இக்கணத்தில் உனைக் கடக்கிறேன்

சொல்
அன்பானவனாக இருந்தாயா?
வேலிகளையுடைத்து
உனது ஓடைகளில்
அவமான நீர் புகட்டிட அழைத்தபோதும்
தாரை வார்த்துத் தந்திட
எவருமே முன்வராத வாசலொன்றில்
தாகித்துக் கிடந்தவளைக்
கைவிட்டுச் சென்ற போதும்
அன்பானவனாக இருந்தாயா?

எனக்கும் உனக்குமான உலகின்
கடைசிவாசலையும் மூடி
முத்திரையிட்டாயிற்று
அந்தப் பிசாசை இருகூறாக்கி
நெஞ்சத்து சீசாக்களில் அடைத்தாயிற்று

இனி நடந்தேறும் படியான
மங்களங்கள் எதுவுமற்ற இந்நாளில்
எழுதிமுடித்திடாத பாடலொன்றை
நினைவு படுத்துகிறாய்
இறுதி வரிகளுக்கான இசையை மாத்திரம்
உன்னிடம் தருகிறேன்

உன்னால் நான் நனைந்த மழை
அது தான் இறுதியில்
நோயையும் விட்டகன்றது





இலக்கற்றுப் பறந்து கொண்டிருந்த
சிறு பறவை
விதியின் சுவரொன்றினருகே
வட்டமிட்ட பொழுது
யாருக்காவோ காத்திருந்த தளவாடியில்
சிறகடிக்கும் தனது துரதிஷ்டத்தின்
விம்பத்தைக் கண்ணுற்றது


பாவனை காட்டுமந்தக் கண்ணியில்
உள்ளம் சிக்கிவிட
உள்ளிருக்கும் அபூர்வத்தின்
ஸ்பரிசத்தைப் பெற முயன்ற தருணங்களிலெல்லாம்
வலிமை மிகுந்த தடையொன்றில்
மோதி மோதி விழுந்தது

அந்த வீட்டின்
கருணையற்ற காலடியோசைகள்
நெருங்கி ஒலிக்கத் தொடங்கும் பொழுதெலாம்
கண்ணாடிக்குள் உறவைக்
கைவிட்டுவிட்டுக்
காற்று வெளிக்குள் தெறித்து மறைந்தது

வசீகரிக்கும் நடனங்களையும்
உயிருருகும் பாடல்களையும்
ஒப்புவித்த பின்னரும்
உள்ளிருக்கும் உலகைத் தாண்டி
மாயப் பறவை வாராமற் போகவே
அதன் பார்வையில் படுமாறு
கூடொன்றைக் கட்டிமுடித்திடச்
சவால்மிகுந்த வனாந்தரங்களில் அலைந்து
சிறு துரும்புகளைக் காவி வந்தது


விரித்துத் திரிந்த சிறகுகளை ஒடுக்கித்
தன் சிறு கூட்டுள் வைத்தவாறு
இருள் தேங்கியிருக்கும் கண்ணாடியைப் பார்த்தவாறு
இரவுகள் தோறும் பயந்தவாறிருந்தது

ஒரு விடியலில்
அனைத்தையும் இடமாற்றிக் கொண்டிருந்த வீட்டின்
அதிகாரமிக்க கையொன்றிலிருந்து
குருவியின் விம்ப உலகம்
நழுவிச் சிதறியது.
ஏதுமறியாதது
சுவர் தின்ற தன் இணையைத் தேடி
அந்த இடமெலாம் கதறிப் பறந்தது


இன்று
எல்லாப் பறவைகளும்
விடைபெற்றுப் போய்விட்ட
வனமொன்றைச் சரணடைந்த குருவி
சுவரில் புதையுண்ட தனது விம்பத்தை
மீட்டெடுத்து வர முடியாமற் போன
சாபத்தை எண்ணி அழுகிறது







பாதைகள் அழைக்கின்றன
ஆசைகள் நிரம்பிய உள்ளம் அழைக்கிறது
ஆனாலும்
அவளை ஆழிக்குள் புதைக்கிறாய்

நட்சத்திரக் கூட்டங்களெல்லாம்
அதே தரிப்பிடங்களில்
இன்னும் வழிபார்த்திருக்கின்றன
அன்பைக் கொன்ற நீயோ
அவளது வழிகளை மூடுகிறாய்

அதிகாலையில்
தூய அருவியொன்றிலிருந்து
அவளது எளிய குடிசை நோக்கிச்
சுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ
கல்லெறிந்து உடைத்த வேளை
தவத்தில் மூழ்கியிருந்த
அவள் கானகத்து மான்கள்
திகைத்தோடித் திசை மறந்தன

மீளவும் உடைத்திட முடியாக்
கலயம் சுமந்து புறப்பட்டவளைக்
கலங்கிய நீர் ஓடைகளில்
திரும்பத் திரும்ப இறக்கிவிட்டாய்
வீடடைய முடியாத
இருள் வழியெங்கும்
அவளது பாதங்களை அலைக்கழித்தாய்

அவள் நீர் ஊற்றிக் காத்திருந்த
செழிப்புமிகு பயிர் நிலங்களில்- உனது
அடங்காப்பிடாரி ஆட்டுக் குட்டிகளை
விளையாட அனுப்பினாய்

கதிர்களை நீ
நாசமறுக்காதிருந்திருப்பாயானால்
தானியக் களஞ்சியங்களை
வாழ்வின் ஆதாரங்கள் கொண்டு
நிரப்பியிருப்பாள்

இறுதியாக
உயிர் விடைபெறப் போகும்
துறைமுகமொன்றில் அவளைச் சந்தித்தாய்
சொல்,
மாபெரிய கண்ணீர்க் கடலில்
அவள் இறங்கிப் போன போது
நீ தானே வழியனுப்பி வைத்தாய்












பெருக்கெடுத்து வரும்
இருளில் நனைந்தவாறு
கற்பனைகளில் வாழ்ந்திருந்த உனை
வழியனுப்பி வைக்கிறேன்

அன்பு வழிந்தோடிய இனிய உலகத்தைச்
சுற்றியெடுத்து
எரியும் தீயிடம் தின்னக் கொடுக்கிறேன்

எல்லாம் முடிந்து போன பின்
மனதின் கருணையையும் அன்பையும்
காற்றிலே கிழித்தெறிகிறேன்
குருவிச் சொண்டுகளில் காவிச் சென்றவை
கூடுகளைக் கதகதப்பாக்கிக் கொள்ளட்டும்
யாருக்கு வேண்டுமினி
நிராகரிப்பின் வேதனைகள் ?


எப்பொழுதும் ஆறுதலையும்
அலைததும்பும் காதலையும் எடுத்துக் கொண்டு
இல்லம் மீள்வாய்
பற்றியிருக்கும் கரங்களுக்குள்
அன்பினைப் பத்திரப் படுத்தி
என் பிரார்த்தனைகளுடனும்
செல்ல மொழிகளுடனும்
புறப் பட்டுச் செல்வாய்

சமையல்காரியாகவோ
சலவைக்காரியாகவோ அன்றி
உனதுயிராகவோ அதனிலும் உயர்வாகவோ
எனைக் காத்திருந்தாய்

நேயமுடன் அரவணைத்துக் கொண்ட
நிலாப் பொழுதுகளில்
எம்மிடையே கீதமிசைத்துப் பாய்ந்தோடிய
வெள்ளியோடையின் சங்கீதத்தில்
நண்பர்கள் இலயித்திருந்தனர்
எனது முகஞ்சுழிப்பும் சிடுசிடுப்பும் மேலோங்கும்
காலமொன்றைக் கொண்டு வருவாய் என்பதை
எவருமே ஏற்காதிருந்தனர்

நினைக்கும் பொழுதெலாம்
துயர்மிகைத்திடுமோர் வலி தரும் விதி
ஏன் வாய்த்தது பேரன்பே?

சாட்சிகளை முன்னிருத்தி
வேதவசனங்களை ஒப்புவித்து
கணவனாக மாறினாய்
நீ அழைத்து வந்த பேய்களிடம்
உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்

இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத
கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்
கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த
காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு
வெளியேறிப் போய்விட்டது
எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று.....
********************************************************



ஆக்கிரமிப்பாளர்களே
எனது பாடலை விட்டுவிடுங்கள்
சின்னஞ்சிறு ஆன்மா ஏந்தியது
நெடுந்தூரம் போய்விடட்டும்


நீங்கள் இட்ட வரம்புகளுக்குள்
நின்று ததும்புகிறேன்
நீங்கள் வகுத்திருந்த வேலிகளின் எல்லையில்
வாழ்வைக் கைவிட்டுத் திரும்பியுள்ளேன்


எக்காலத்திலுமினி
உங்கள் பீடங்களில் முழந்தாளிட வர மாட்டேன்
நீங்கள் ஆராதிக்கும் நாமங்களிலும் சேர மாட்டேன்


ஆதிமுதல் போற்றிவரும்
அந்தக் கிரீடங்களின் மீது
அவமதிப்பை விட்டெறிகிறேன்
உங்கள் அலங்காரப் பட்டினங்களின்
துர்வாடையையும் பேரிரைச்சலையும்
சகித்திட முடியாமல் அகன்று போகிறேன்

பாய் மரத்தையும் திசைகாட்டியையும்
கரை மணலில் புதைத்து
அலைகளில் தள்ளிவிட்டீர்கள்
யாருமே காப்பாற்ற வரமுடியாத
துயரக் கடல் நடுவே
அமிழ்ந்து கொண்டிருக்கிறது
உயிரின் படகொன்று






எங்கும் வியாபித்து அரசாட்சி செய்தது இருள்:
அடர்ந்து செறிந்த இருளினூடு சிள்ளுடுகளும் தவளைகளும்
தமதிருப்பைச் சொல்லித் தயங்கித் தயங்கி ஒலித்தன

மயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு
வீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு
என் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.
பின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்
அவர்கள் வலம் வருகிறார்கள் போலும்
ஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ?
உருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது

அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன
அந்த வேளைதனில் உனை ஏன் நினைத்தேன் என்று தெரியவில்லை

அன்று மழை ஓய்ந்த அந்திப் பொழுதில்
அவர்கள் வந்து போயிருக்க வேண்டும்
எமது கல்லூரி முற்றவெளியெங்கும் வரிசை பிசகாத
சப்பாத்துக் கால்களின் சுவடுகள் எஞ்சியிருந்தன.
இரத்தக் கறைதோய்ந்த மண்டபத்து மூலையறைச் சுவர் மீது
புதிய தடயங்களை கண்ணிரண்டும்
பயத்துடனே தேடி நடுநடுங்கின.
என் விழிகளுக்குள் வெளவால்கள் சடசடத்துப் பறந்தன

ஆதிரை:
கடைசியாக நீ கல்லூரி வந்ததினம்
அதுவென்றுதான் நினைக்கிறேன்
அன்று சிரித்திடவே இல்லை நீ
சிந்தனை வயப் பட்ட முகத்துடன்
கல்லூரி வளவெங்கும் அலைந்து திரிந்தாய்


பின்னர் நான் பார்க்க நேர்ந்த போராளிகளின் படங்களிலெல்லாம்
உன் முகத்தைத் தேடித் தோற்றேன்
இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை

துப்பாக்கி வரைந்த உன் இரசாயனவியல் குறிப்பேட்டைப்
பத்திரப் படுத்திவைத்துள்ளேன்.
பாடத்தைவிட்டு உன் கவனம் திசைமாறிய தருணங்களில்
ஓரங்களில் நீ எழுதியுள்ள வாசகங்கள்
விட்டு விடுதலையாகும் உன் சுதந்திரக் கனவைச் சொல்கின்றன

உன் நகர்வுகளை மோப்பம் பிடிக்கும்
அறிமுகமற்ற சப்பாத்துக் கால்கள்
சனியன்களால் ஆட்டுவிக்கப்படும் நாளைகளிலும்
எமது வாழிடங்களில் பதிந்து செல்லலாம்
நீ கவனமாயிருந்து இலட்சியத்தை வெற்றிகொள்

பஹீமாஜஹான்
(2001-மூன்றாவது மனிதன்)

தோட்டம்:
அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில்
மந்தைகள் மேயவரும் காலங்களில்
கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும்
ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும்.
"தண்ணீர் தேடிப் பாம்பலையும்
காட்டில் திரியாதே"
அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்
பதுங்கிப் பதுங்கி நோட்டம்விட்டுத்
தோட்டம் பார்த்து ஓட்டமெடுப்பேன்.
அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்
கையிலே ஓர் தடி
அத் தடியையும் செருப்பொரு சோடியையும்
மரத்தடியில் விட்டுக்
கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்.
கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி
பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்.

ஆறு:
ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி
கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும்
மாலைப் பொழுதொன்றில்,
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி.
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.
நானும் தொடர்வேன்,
தோட்டத்து ஒற்றையடிப் பாதையின் சருகுகளைச்
சிறு மண் வெட்டியால் இழுத்தவாறு
அவள் பின்னே

புதையல்:
அத்திமரத்தின் கீழே
கருநிறப் பாசி படர்ந்து
நீர்ப் பூச்சிகள் சருக்கள் நிகழ்த்தும்
நீர் தேங்கிய மணலை அகழத் தொடங்குகையில்
வெண்ணிற மணலோடு
சலசலத்து ஊறும் குளிர் நீர்
ஊறிவரும் நீரை வழிந்தோட வைக்கும்
கால்வாய் அமைப்பையும் அவளே அறிவாள்.

அத்தியின் கிளைகள் ஆடும்
தெள்ளிய நீர்ச்சுனையை
உருவாக்கிய பெருமிதத்துடன்
மாலை இருளை ஆற்றில் விட்டுக்
கரையேறி வீடடைவோம் சிறுமியும் பாட்டியும்.

நாசகாரன்:
பின்னாளில்
எல்லோரும் வந்தங்கே துவைப்பர் குளிப்பர்.
இடையிடையே உயர்ந்த ஆற்றங் கரையின்
மூங்கில் மரங்களின் மறைவில் நின்று
வந்திருப்பவரை அடையாளங் கண்டு திரும்புவாள் பாட்டி.
பின்னும்
கண்காணிப்புத் தவறிய இடைவெளியில் வந்து
படுகுழி தோண்டி வைத்துப் போயிருப்பான்
அவளது வடிகாலமைப்பு ஞானத்தின் துளியும் வாய்க்காத
அற்பப் பயலொருவன்.
தெளிந்த நீர் ஊற்றுக் குட்டையாக மாறி
அழுக்கு நீர் சுற்றிச் சுழலுமங்கே
நாசமறுத்த பயலவனை முனிந்த படி
மீளவும் புணரமைப்பாள் வியர்வை வழிந்திட அம்மை.

(கலைமுகம் இதழுக்காக எழுதியது)

பஹீமாஜஹான்









கங்குல் விலகாத காலைப் பொழுதில்
இருள் தேங்கிய வானில்
மின்னற் கோடுகள் ஓடுவதான 'சேட்'டில்
இரு சூரியரைக் கண்ணாடி வில்லைகளால்
முகத்தில் மறைத்துக்
கம்பீரமாய் -நீ
தினமும் ஆழம் தேடி
உள் நுழையும் இரு வாசல்களையும்
இமைக்குள் தாழ்த்தி
ரோசா வண்ண உடையில்
பிரியம் மலர்ந்திட
உன்னுடன் ஏறிக் கொண்டேன்


மழை முகில்கள் தொங்கிக் கிடந்த அதிகாலையில்
நெடுந்தூரம் கடந்தோம்
உடனிருந்த சிறுவர்களின் சேட்டைகளில்
ஒருவரையொருவர்
எண்ணிப் பயணிக்கும்
கனவுகளில் இருந்து மீண்டோம்

சீதளம் செறிந்த அடர் இருள் வனத்தினுள்
புகுந்த வேளை
இடி முழக்கத்துடன் 'சோ'வென இறங்கியது
கிளைகள் பணிந்து பெரு மழை

இறுதி யன்னலையும் மூடி
இசை தவழ்ந்த வாகனத்துள்ளே
ஒளியையும்
வாசணை கமழும் குளிரையும் பரவவிட்டாய்
மஞ்சள் ஒளியுடன்
ஆடைகளில் படியத் தொடங்கியது
உனது சுகந்தத்துடனான ஈரவளி

வழி நீளப் பேரிடிகள் முழங்கி அச்சுறுத்தச்
சிறியவர் எதிரே
உனது தைரியம் எனையும் தொற்றியது
மலையை ஏந்தும் வல்லமையுடன் நீ
வீழ்ந்து கொண்டிருக்கும்
மழைத் துளியொன்றன்றி வேறேது நான்?

நீர்ச் சுமையில் முறிந்து சரியும்
கிளைகள் குறித்த பயம்
அடவியைத் தாண்டியதும்
விலகிப் போயிற்று
பெய்தல் நின்ற வானத்திலிருந்து
வந்தடைந்த முதல் கிரணம்
பிள்ளைகளின் முகங்களில்
புன்னகையைத் தீட்டியது

ஓய்ந்திருந்த இசையும் ஓசையும்
மீள வலுத்தது
நுழைவாயிலருகே
எனை விடுவிக்கும் வேளையில்
ஆழ்ந்து ஊடுறுவுமொரு பார்வையை எறிந்தாய்
இப்போது
அடர் வனத்தினுள்ளே பெரு மழையாய் நீ
எனதான்மாவினுள் நுழையத் தொடங்குகையில்
ஆண்டாண்டு காலப் போர்வைகள் கொண்டு
எனை மூடிப் போகிறேன் நான்

பஹீமாஜஹான்
(கலைமுகம் சஞ்சிகைக்காக எழுதப் பட்டது)

மழை கசிந்து கொண்டிருக்கும்
இருள் தேங்கிய அதிகாலையில்
உங்கள் நினைவுக் குறிப்புகளைப்
புரட்டிக் கொண்டிருக்கிறேன்
பிசு பிசுக்கும் புல் வெளியின்
வேர்களிடையே தேங்கிக் கிடக்கிறது
நேற்றைய பெரு மழை


நதிகள் பெருக்கெடுத்தோடும்
நிர்க்கதி மிகுந்த தீவில்
இந்த மழையை
யாருமே வரவேற்றதில்லை
உங்களிடமிருந்து
பிரிவின் போர்வை எடுத்து
எனை மூடுகிறேன்


என் நதி சுமந்து வந்த
திரவியங்களனைத்தையும்
உங்களிடமே கொடுத்தேன்


திடுமென வருமோர்
காட்டாற்று வெள்ளத்தில்
என் கரை வளர்த்த மரங்கள்
இழுபட்டுச் செல்லாதிருக்கப்
பின்னிப் பின்னிப் பிணைந்திருக்கும்
பெயர் தெரியாப் பெருங்கொடிகள்


நனைந்த பூமி உலர்ந்திட
நாளை வரும் கோடையில்
உங்கள் நதித் தீரங்கள் ஊடாக
ஊற்றெடுத்து ஓடிக் கொண்டிருக்கும்
என்றென்றைக்குமான
என் குரலோசை

பஹீமாஜஹான்

நிழல் மரங்களற்றுச்
சூரியன் தவிதவிக்கும்
நெடுஞ்சாலையோரம்
வெய்யிலை
உதறி எறிந்தவாறு
நடக்கிறாள் மூதாட்டி


குதி கால்களால்
நெடுங்களைப்பை
நசுக்கித் தேய்த்தவாறு
காற்றைப் பின் தள்ளிக்
கைகளை வீசுகிறாள்

வெய்யில்
மிகப் பெரும் தண்டனையை
வழி நீளப் பரவவிட்டுள்ளது.
வேட்டை நாய் போல
அவள் முன்னே
ஓடிச் செல்கிறது நிழல்

பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்
தேங்கி நடுநடுங்குகிறது
ஆதியிலிருந்து தொடரும் துயரம்.

பஹீமாஜஹான்

நோய்

காற்றில் திரிதலாகா
தண்ணீர் அலைதலாகா
ஓயந்திருக்க வேண்டுமன்றி ஓடிவிளையாடலாகா
காய்ச்சலின் உச்சகட்டத்தில்
டாக்டர் தாத்தாவின் கட்டளைகள் நீளும்
நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக
நின்றிருப்பாள் அருகே அன்னை
நிறைவேற்றவியலாக் கட்டளைகளைக் கேட்டவாறு
சின்னஞ் சிறுமி மௌனமாக அமர்ந்திருப்பேன்




ஆணை மீறல்

விளையாட்டும் முற்றமுமெனை
வந்தனங்கள் கூறியழைக்க
வயல் காற்றுலவும் வெளியெங்கும்
அலைந்து திரிவேன்
இசைவானதொரு தருணம் வாய்ப்பின்
காகித ஓடங்களை
வயலோர வாய்க்காலில்
மிதந்து போகவிட்டு மீள்வேன்
மருந்துண்ணும் வேளையதில்
பெரியம்மா, அண்ணன்மார்களெனும்
அயல்வீட்டு இராணுவமெனைக் கைப் பற்றிக்
கொண்டுவரும் அம்மாவினெதிரே

மருந்துண்ணல்

மாத்திரைத் துண்டொன்றையும் சீனியையும்
கரண்டியில் இட்டுக்
கரைத்தெடுத்துவரும் கொடுமை கண்டு
எனதழுகை உரக்கத் தொடங்கும்
கை, கால், தலையெனப் பற்றி
அசையவிடாது எனையமர்த்திச்
சூழ்ந்து நிற்கும் சக்கரவியூகம்
காவல் தேவதையாம் அம்மம்மாவையும்
தூர நிறுத்தி வைத்திருக்கும்
அக்கணத்தின் அதிகாரம்
தெரு முனைவையும் தாண்டி எனதார்ப்பாட்டம்
பாதையில் போவோரைத் திரட்டிவரும் வீட்டருகே
கசக்கும் பிசாசு வாய் நோக்கி வரும் போது
தாரை தாரையாய் வழிந்தோடக் கண்ணீர்
இறுக மூடிக் கொள்வேன் உதடுகளை
கடும் பிரயத்தனத்துடன் அம்மா
கரைசலை வாய்க்குள் இடச்
சிந்தியதும் உமிழ்ந்ததும் போக
ஒரு துளியை விழுங்கிய பின்
அனைத்துக்குமாக
ஆரம்பத்திலிருந்து அழத்தொடங்குவேன்

துயரிலிருந்து மீள்தல்

அப்போது வருமென் காவல் தேவதை
தூக்கி அணைத்திடுவாள்
வாய் கொப்பளிக்க வைத்துக்
கசந்த நாவில் வெல்லமிட்டு
ஆறாகப் பெருகுமென் கண்ணீர் துடைத்திடுவாள்
தோளிலே படுக்க வைத்துச்
சேலைத் தலைப்பைப் போர்வையாக்கித்
தோட்டமெங்கும் சுமந்தலைவாள்
கதைகள் நூறு சொல்லி
அழ வைத்தவர்களைப் பேசி
அழுகையை ஓய வைப்பாள்
நானுமொரு பறவையென
மாமரக் கிளைகளில் தத்திப் பாயும்
புள்ளினங்களில் இலயித்திருக்கையில்
மீண்டுமெனைப் படுக்கையில் கிடத்திக்
காவலிருப்பாள்


நோயிலிருந்து மீளும் நிகழ்காலம்

விழிகளைத் திறக்க முடியாத களைப்பும்
வலுவிழந்த உடலும் சற்றே தேறிட
எழுந்தமர்ந்துள்ளேன்
இளைத்த இவ்வந்தியில்

துடைத்தழித்திட முடியாமல்
நோயின் வலியைத் தாங்கி நிற்கும் முகத்தை
விசாரிக்க வருவோரிடமிருந்து
மறைப்பது பற்றிச் சிந்திக்கிறேன்

மின் கம்பியில் குந்தியவாறு
எனதறையையே பார்த்திருந்த வெண் பறவைக்கு
மரணத்தின் துர்க்குறிகள் கிட்டவில்லை

ஓய்வற்று உலன்றிடப் போகும்
நாளைய தினத்திலிருந்து
கசிந்து வருகிறது
நொந்த உடலுக்கான நஞ்சு

பஹீமாஜஹான்

தூர தேசப் பறவையொன்று
தங்கிச் சென்ற மரம்
மீளவும்
அந்தப் பறவைக்காகக்
காத்துக் கிடக்கிறது

தன் கிளைகள் எறிந்து தேடும்
வான் பரப்பில் பறவை
அதன் பாடலைப்
பதித்துச் செல்லவில்லை.
வேர்கள் ஊர்ந்து பரவும் மண்ணில்
அது
எந்த நிழலையும்
விட்டுச் செல்லவும் இல்லை

மலைகளிடமோ நதிகளிடமோ
பறவை தனது
பயணப்பாதை பற்றிய
செய்தி எதனையும்
பகன்றிடவே இல்லை

சூரிய சந்திரரும்
தாரகைக் கூட்டங்களும்
குருவியின் சேதிகளை
உரைத்திட மொழியின்றி மறையும்

வேர்களும் கிளைகளும்
நீளமுடியாமலொரு பெருங்கடல்
மெளனத்தில் உறைந்த
மரத்தைச் சூழ்ந்திருந்து
ஆர்ப்பரிக்கிறது நிதமும்

பஹீமாஜஹான்
(நன்றி:புதியபார்வை)

Powered by Blogger.

தொகுப்புகள்

தொகுப்புகள்


About Me

My Photo
ஃபஹீமாஜஹான்
View my complete profile

Search

Blog Archive

About