தூறலாய் சாரலாய்
பெரும் துளிகளாய் மாறித்
தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தது
அந்தி மழை

தாளம் தப்பாத பாடல்களை
அதனதன் குரல்களில் இசைத்தபடி
களிகூர்ந்து பறக்கத் தொடங்கியிருந்தன
வானில் வந்து கூடிய மழைப்பறவைகள்

தனது கவிதைப் பொருள்களெலாம்
சிறகடித்து நனைவதை
இரசித்தவாறு
மெய்மறந்து கிடக்கிறாள் அவள்

அகப்பட்ட பசிய மரங்களையெலாம்
பூவோடும் பிஞ்சோடும் எரித்தவாறு
வழமையான தனது வழியொன்றால்
தெறித்து வந்ததொரு மின்னற் தீ
அவளைச் சூழ வீழ்ந்தோய்ந்ததும்
அக்கணத்தில் தான்

கவிதைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு
கண்ணெட்டாத் தொலைவுக்கப்பால்
போய் மறைந்தன மழைப் பறவைகள்

செல்லப் பறவைகள்
விடைபெற்ற இருண்ட வானத்தை
வலுக்கத்தொடங்கிய மழையில் கை விட்டுவிட்டு
அவளும் காணாமற் போயிருந்தாள்

ஃபஹீமாஜஹான்
2009.12.07

நன்றி: கல் குதிரை