அதி வேக ஊர்திகளாலும் அவசரங்களாலும்
ஆக்கிரமிக்கப் பட்ட தெருவில்
கவனத்தைப் பதித்துச் சென்ற
காலைப் பொழுதொன்றில் நீயழைத்தாய்:
என் பெயர் கூறியழைத்தாயோ....
எதைச் சொல்லிக் கதைத்தாயோ....
இரைச்சலில் நழுவவிட்டு விட்டேன் -
உனது ஆரம்பச் சொற்களை - பின்னர்
கம்பீரமான குரலில் உனது பெயர் கூறி
நீளமான சொற்களை நீயுதிர்த்தாய்!
திகைத்துத் தடுமாறி
தெருவிலிருந்து நீங்கிய பின் உன்னுடன் கதைத்தேன்
பிரிவைச் சொன்னாய்:
பல நூறு நட்சத்திரங்கள் மின்னிய வானத்தைச் சுருட்டி
எங்கோ எறிந்து
அருவிகளையும் ஓடைகளையும்
என்னிடம் விட்டு விட்டு
அதற்கப்பால் நீ போனாய்!
பண்பாடுகளாலும் விழுமியங்களாலும்
நீ எனக்களித்த கெளரவங்களாலும்
கட்டப் பட்டுக் கிடக்கிறேன்
ஒன்றுமே அறியாதவனா நீ?
திரும்பித் திரும்பிப் பார்த்து
எனதான்மாவிலிருந்து எதனையோ
எடுத்துச் சென்ற பின்பும்
ஒன்றுமே அறியாதவனா நீ?
காற்றில் உதிரும் இலைகளோடு
எந்த ஒசையுமற்று உதிர்ந்து கொண்டிருக்கிறேன்
கிளை பரப்பித் தளிர்த்தோங்கிட நான்
காற்றிலே இசை நிரப்பித் தந்தாய் நீ
கண்ணீரையும் பிராத்தனையையும்
ஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு
உறவின் நூலிழைகள் வழிகின்றன.
நீ என்னிடம் விட்டுச் சென்ற
ஈரப் பார்வைகள்
இன்னும் எனை உற்றுப் பார்த்தவாறே கிடக்கின்றன.
ஃபஹீமாஜஹான்
4 comments:
விட்டுப்போன அந்த பார்வையின் மீது எனது கவலை அலை மோதுகிறது.
மிகவும் அழமான ஆதங்கக்கவிதை வரிகள்.
நெஞார்ந்த வாழ்த்துக்கள்.
என்.சுரேஷ்,சென்னை
nsureshchennai@gmail.com
நீ என்னிடம் விட்டுச் சென்ற
ஈரப் பார்வைகள்
இன்னும் எனை உற்றுப் பார்த்தவாறே கிடக்கின்றன.
வருகை தந்தமைக்கு நன்றி காண்டீபன்.
ஃபஹீமாஜஹான்
நல்ல கவிதை..
அருமையான வார்த்தை பிரயோகம்.. கருத்தும் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள் தோழி
Post a Comment