பொன்னந்திக் கிரணங்கள் படியத் தொடங்கிய மாலையில்
குளிர்ந்த மலையைவிட்டு கீழிறங்கி
தும்பிகள் பறந்து திரிவதும்
தங்க நிறக் கதிர்களாடுவதுமான வயல் நிலங்களையும்
நீரோடைகளையும் தென்னந்தோப்புகளையும் ஊடறுத்து
மனிதர்கள் வடிந்து போன சந்தைக் கட்டிடங்களையும்
மஞ்சள் வண்ணப் பூச்சொரியும் பெரு விருட்சத்தையும்
தாண்டி நீ சந்திக்கு வந்தாய்

பணியை முடித்து
நகரத்தின் நச்சுக் கரும்புகையில் தோய்ந்து
வாகன இரைச்சல் செவியோரம் இரைந்திட வந்திறங்கி
வீடு நோக்கி நடந்த வேளை
திடீரென எதிரே வந்து வேகம் குறைத்தாய்


உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்
அன்றும்
தலை திருப்பி நான் பார்க்கும் கணம் வரை காத்திருந்து
புன்னகையை உதடுகளில் மறைத்து
ஏதோ ஒரு இராகத்தை மீட்டிய படியே வேகம் கூட்டிச் சென்றாய்

அன்பு பொங்கிப் பிரவகித்த அபூர்வ நாட்களில்
நிழல் போலப்
பிரிவைச் சொல்லிப் பின் வந்தது காலம்

நான் வரச் சாத்தியமற்ற இடங்களில் நீயும்
நீ வரத் தேவையற்ற இடங்களில் நானும்


வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும் வேறு பிரித்த வேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்று தான் அழகாகச் சிரித்தோம்

எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று

ஃபஹீமாஜஹான்

பரப்பிவைக்கப் பட்டிருக்கும் பொருட்களெதிலும்
பார்வையைச் செலுத்தாமல்
பாதிமூடப்பட்டுப் பூட்டுடன் தொங்கும்
விசாலமான கதவினை
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
கடைக்குப் போன சிறுமி

தெருவோரம்
கால் நீட்டியமர்ந்த வண்ணம்
சேகரித்து வந்த
உபயோகமற்ற பொருட்கள் நிரம்பி வழியும்
பொதிகளையே
வெறித்தபடி கிடக்கிறாள்
சிந்தனை பிசகிய மூதாட்டி


ஓடிச் சென்று ஏறிக்கொண்ட
பையன்களை உள்வாங்கி
விரைகிறது பேரூந்து
ஊன்றுகோலுடன் நெடுநேரம் காத்திருந்த
மாற்றுவலுவுள்ள மனிதனை
அந்தத் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு

ஃபஹீமாஜஹான்
2007

என்ன சொல்கிறாய்?

எமது முற்றவெளி மீது

யுத்தத்தின் கரு நிழல்கள்

நெளிந்துவரத் தொடங்கிய வேளை

எமது வாழ்வின்

துயர் மிகு அத்தியாயம் எழுதப் படலாயிற்று!

திடீரென ஊரின் எல்லை கடந்து-நீ

தொலை தூரமேகியதன் பின்

வந்த நாட்களில் இருளடர்ந்த இரவுகள்

யாவிலும் எமது வாழிடமெங்கும்

உனைத்தேடி ஏமாந்து திரும்பினார்கள்!

அதன் பின் நிகழ்ந்த

பிரளயப் பொழுதில்எங்கள் குடிமனைகளுக்கு

மேலாகப் பறந்த

இயந்திரப் பிசாசுகள்

அதிரும் ஓசையுடன்

அச்சத்தைப் பொழிந்தன.

மரக்கிளைகள் சுழன்று

அசைந்ததில் சிதறுண்டு பறந்த

பறவைக் கூட்டங்களோடு

எமதினிய இளைஞர்களும்

காணாமற் போயினர்.

துன்பம் பல சுமந்து

முன்னோர்கள்

தேடி வைத்தவை யாவும்

எம்மிடமிருந்து பறிக்கப்பட்டு

நாசமாக்கப் பட்டன.

ஆனந்த அலை பாய்ந்த

இல்லங்களுக்குள்ளிருந்து எமது

பெண்களின் அவலக் குரல்கள் எழுந்தன.

எங்கள் குழந்தைகளைக் காத்திட

எந்தத் தேவதைகளும் வரவேயில்லை.

ஏங்கோ தூரத்தில்.....

துப்பாக்கிகள் வெடிக்கின்றன.

ஈனக்குரலெடுத்துக் கதறும் ஓசை

காற்றிலேறி வருகிறது.

தினந்தோறும் சாவு எமது வாசல்

வந்து

திரும்பிய

த ட ய ங் க ளை க்

காண்கிறோம்

எப்போதும் கதவு தட்டப் படலாம்!

நீ தேடியழைந்த எதுவுமுனக்கு

ஈடேற்றம் தரவில்லை.

தோற்றுப் போன அரசியலின் பின்னர்

அமைதியைத் தேடித்

தூரத்தேசம் ஒன்றில்அடைக்கலம் புகுந்தாய்!

மனச்சுமைகள் அனைத்தையும்

மௌனமாக அஞ்ஞாத வாசத்திற் கரைத்தாய்!

ஐரோப்பாவில் எங்கோ

அடர்ந்த மூங்கிற் காட்டினிடையே

இராணுவ வீரர்களுக்கு மத்தியில்

இருந்துதொழுகைத் தழும்பேறிய

நெற்றியுடன் நீ எடுத்தனுப்பியிருந்த

நிழற்படம் சொல்லாத சேதிகள்

பலவற்றை எனக்குச் சொன்னது

அதில் ஆனந்த மின்னல் பளிச்சிடும்

உன்முகம் எத்துணை அழகாக உள்ளது?

அன்பானவனே!

எந்த விடிவுமற்ற தேசத்தின்

தலைவிதியை நொந்த வண்ணம்

இங்கு எனது இருப்புப் பற்றியும்

நம்பிக்கைகள் பற்றியும்

ஓயாது விமர்சிக்கின்றாய்!

தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…

உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று

அழிந்திட.....
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த

வாழ்வைச் சபித்தவளாக

நான் வாழ்ந்த போதும்

எனது தேசம்

எனக்கு வேண்டும்!

நீ என்ன சொல்கிறாய்?

-ஃபஹீமா ஜஹான்