எனது இரண்டாவது கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.
இத் தொகுப்பை வெளியிட்ட தம்பி அகிலன், சயந்தன் உள்ளிட்ட "வடலி"க்கு எனது மனமார்ந்த நன்றிகள்

(இங்கே வாங்கலாம்)http://vadaly.com/shop/?page_id=231&category=27&product_id=88





நீ
இறைவனின் தோற்றமொன்றை
எதிர்பார்த்துக் காத்திருந்தாய்
தீண்டத் தகாத பொருளாக்கி
இருளின் மூலையொன்றில்
உனைக் கிடத்தியிருந்தது முதுமை

எழுந்து நடக்கத் தயாராகும் பொழுதெலாம்
வயோதிபமடைந்த பூமி
தள்ளாடித் தள்ளாடி
உனை வீழ்த்திடத் தயாராக இருந்தது

உன் வாழ்வு முழுதும் சேகரித்த
வேதனைகளைப் பகர்ந்திட
எந்தச் செவியுமே
அவ்வீட்டில் இல்லாதிருந்தது


பேரன்புடன்
அவதரிக்கச் செய்து ஆளாக்கி வளர்த்த
உருவங்களுக்குள்ளிருந்து
திரும்பி வரவே இல்லை
உனக்கான பரிதவிப்புகளும் பாசங்களும்


இனியும் சகித்திட முடியாத
வாழ்வை உதறியெறிந்து
நீ போனாய்



நீ நீரூற்றியதால்
வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்
இன்று
உன் கருணையின் காலடிகளைத்
தேடியவாறு
தலைகவிழ்ந்து நிற்பதைக் காண்

(நன்றி- "எதுவரை" இதழ்-2)




முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன

தனது குழந்தைகளுக்காக
எடுத்துச் செல்லும் கனிகள்
ஒவ்வொன்றாக அழுகுவதை
ஏக்கத்துடன் தூக்கியெறிகிறாள்

அன்பை
நிம்மதியை
மாபெரும் கருணையொன்றை
தன்னோடு எடுத்துச் செல்லக்
காத்திருக்கிறாள்

ராஜாக்களின் அரசியல்
அவள் வீட்டைச் சிதைத்தது
அதிகாரம் கொண்ட கழுகொன்று
அவளது புத்திரரைக் கெளவிப் பறந்தது
சித்தம் பிசக வைத்த
இரக்கமற்ற குரலொன்று
அவளைத் தெருவெங்கும் ஓடவைத்தது

இன்று...
கின்னரர் தம் இசையிழந்த
நிலமெங்கும்
அவளது ஒப்பாரி அலைகிறது
அரசனைத் துதிபாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டொழிகிறது


(நன்றி: "எதுவரை" இதழ்-2)