மேசைமீது உருண்டோடும் பென்சிலை
"ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!
ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்
வகுப்பறையினுள்
வந்து விழுந்த நட்சத்திரங்கள்
உங்களைச் சூழவே இருப்பதனால்
இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்
வீழ்வதேயில்லை
உம் கிரணங்கள்
எனது குறைபாடுகளை நீங்கள்
முன்வைக்கும் வேளை
தூக்கிவிடும் கரமொன்றையிழந்து
வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன்
ஏறமுனைகையில்
படிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு
எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்
புறந்தள்ளிவிட்டு
எதையுமினிச் சாதிக்க முடியாதெனப்
பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்
நான் என்ன செய்ய வேண்டுமென்றோ
எப்படி உருவாக வேண்டுமென்றோ
அல்லது
உங்களைச் சுற்றிவரும்
ஒரு பிரகாசமான தாரகையாக
மாறுவதெவ்விதமென்றோ தெரியவே இல்லை
கற்றுத் தாருங்களெனக்கு
கொம்புகளும் விசிறிகளுமாகப்
பயங்காட்டுகின்ற சொற்களுக்கும்
பெருக்கலும் வகுத்தலுமாக
இறுக்கமான வாய்ப்பாடுகளுக்குள்
வீற்றிருந்தவாறு
தீராச் சிக்கல் தரும்
எண்களுக்கும் மத்தியில்
முடங்கிக் கிடக்கிறதென்னுலகம்
எனக்கான கெளரவத்தையும்
என் விழிகளுக்கான ஒளியையும்
கண்டடைந்து கொள்ளவே
ஒவ்வொரு காலையிலும் வருகிறேன்
எனினும்
முதுகின் பின்னால் கிடந்த இருளை
என் முன்னே நடக்கவிட்டுப்
பயனேதுமற்ற
பளுமிகுந்த பொதியொன்றைச் சுமந்தவாறு
நிமிர முடியாப் பாதைகளினூடாகத்
தினந்தோறும் திரும்பிச் செல்கிறேன்
நீங்களும் ஒரு தேரோட்டி தான்
விபத்தின்றிக் கழிந்ததில்லை ஒருநாளும்
ஆனால்
மீள மீளக் காயப்படுவதெல்லாம் நான்தானே?
என்மீது குற்றப் பத்திரிகை வாசித்து
தினமும் தண்டனை வழங்கும்
சிறைக்கூடமே எனது வகுப்பறையெனின்
மன்னித்துக் கொள்ளுங்கள்
எப்போது மாறப்போகிறீர்கள் -
நீங்களும் ஒரு ஆசிரியராக ?
-----------
2011.02.21
(நன்றி:கலைமுகம் இதழ் 51)
14 comments:
அன்பின் பஹீமா ஜகான்!
அற்புதமான உங்கள் இந்தக் கவிதையை ஈழத்து முற்றத்தில் கொணரும்படி உங்களிடம் ஆவலுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
"வகுப்பறையினுள்
வந்து விழுந்த நட்சத்திரங்கள்
உங்களைச் சூழவே இருப்பதனால்
இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்
வீழ்வதேயில்லை
உம் கிரணங்கள்"
இந்த மெய்யான வார்த்தைகள், எதோ ஒரு வகையில் தலையெடுக்கக் கயிட்டப்படும், தாழ்ந்த மட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்.
அன்புடன்
ந. குணபாலன்
வாருங்கள் ந.குணபாலன் அவர்களே,
"மேசைமீது உருண்டோடும் பென்சிலை
"ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்"
நான் வகுப்பறையொன்றில் கண்ட (12 வயதுடைய) சிறுமி பற்றிய நேரடிப் பதிவு இது.
"இந்தக் கவிதையை ஈழத்து முற்றத்தில் கொணரும்படி உங்களிடம் ஆவலுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்."
முயற்சி செய்கிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான் வகுப்பறையினுள்
வளர்ந்த ஆசிரியர் மனோநிலை அறிந்து எழுதிய கவிதை. ஆசிரியருக்கு முதலில் உளவியல் தேவை அப்பொழுதுதான் குழந்தை மனமறிந்து பாடம் நடத்த முடியும் . குழந்தைகள் கவனம் சிதறாமல் நன்கு படிக்க முடியும் .படிக்கவும் ஆசிரியரிடமும் அன்பு மேலோங்கும்.
குழந்தை மகிழ்வு அதன் முகத்தில் பாருங்கள் . கவிதைக்கு பொருத்தமான அழகிய படம் .பெண் குழந்தைக்கு இறைவன் அறிவோடு அழகும் கொடுத்து பெண்களை மதிக்கச் செய்கின்றான்
நீங்கள் ஒரு ஆசிரியராகவும் இருந்து இந்தக் கவிதையை எழுதியதில் அளவற்ற மகிழ்ச்சி.
வாருங்கள் nidurali அவர்களே,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
வாருங்கள் தமிழ்நதி,
நீண்ட இடைவேளையின் பின்னர் இந்தப் பக்கம் வந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.நன்றி.
அற்புதமான கவிதை, ஒவ்வொரு பின் வரிசை மாணவர்களின் நிலை இதுதான், மனித உரிமைகள் பற்றி மேடைகளில் கதைக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறையில் மாணவர்களுக்கு இவ்வாறுதான் இன்று நடக்கிறார்கள்
"என்மீது குற்றப் பத்திரிகை வாசித்து
தினமும் தண்டனை வழங்கும்
சிறைக்கூடமே எனது வகுப்பறை"
It's nice to see your blog. I have read some of your poems when I was in SL. Wish you all the best.
nalla kavidhai faheema,
aasirivaanmaithuvaththin nallathoru patterihaiyaaha kolvatharkku ik kavithaikku muluththahuthiyum undu.
inham
superb kavithai
தமிழகத்தின் கும்பகோணத்தைச் சார்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியன் நான். தங்கள் கவிதை மிக நன்று. நான் பள்ளிகளில் பார்க்கின்ற பல குழந்தைகளின் குரலாய் ஒலிக்கின்றது. கண்டிப்பாக இது போன்ற தரமான கவிதைகளை பள்ளி ஆசிரியராலன்றி யாரால் எழுத முடியும்.
arumaiyana nenjai thodum kavithai
Arumaiya Kavithai ... sagothari. Fahimaa Jahaan avargaley
அண்மையில் "தங்கமீன்கள்" திரைப்படம் பார்த்தபோது ஏற்பட்ட வலி. ஒவ்வொரு ஆசிரியரும் புரிந்து கொள்ளவேண்டியது. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
Post a Comment