ஆருயிரே வருக






மேதைகளும் மாபெரிய வீரர்களும்
மீண்டு வராமற்போன
மருத்துவமனைக் கட்டிலொன்றிலிருந்து
அதே தீர்க்கமான முடிவொன்றிலிருந்து
எழுந்து வந்துள்ளாய்


திருநாமங்களையெலாம்
உச்சாடனம் செய்து
எல்லாம் வல்லவனிடம்
உனை மீட்டுத் தரவேண்டி
ஏந்தித் தவித்த கரங்களை
அழுத்திக் கொண்டிருந்தது
அன்பின் கொடும் சுமை


உயிரோடு போராடிக் கொண்டிருந்த
இன்னுயிரைத்
தூர தேசத்தில் விட்டு விட்டு
ஊர்ந்தூர்ந்து வந்ததந்தக்
கொடிய காலம்


இருக்கும் இடத்தை
நொந்து போன எண்ணங்களால்
நிரப்பி விட்டுத்
துயரேறிய பொழுதுகளை
இழுத்தவாறு நொண்டி நகர்ந்தன
இரு பாதங்கள்


செல்லப் பறவையே....
இறுதியில் நீ வந்தாய்
உதிரமெங்கும் கலந்தோடிய நஞ்சிலிருந்து
உன் ஜீவனை மீட்டெடுத்து வந்தாய்


உறங்க மறந்த இரவின் மீது
ஆனந்தக் கண்ணீரைக்
கசிய விட்டவாறு
வாழ்விலிருந்து நழுவிப் போனதொரு
பெரும் வலி

என்ன வார்த்தையால் உனை வரவேற்பது
எந்தக் கரம் கொண்டு உனை அரவணைப்பது
எனத் தெரியாத கடலொன்றுக்கப்பாலிருந்து
கையசைக்கிறாய்


ஆருயிரே வருக
பாக்கியம் புரிந்தவர் நாம்
உனை மீளவும் பெற்றிருக்கிறோம்

-----------------------------------
*தம்பி ரிஷானுக்கு

6 comments:

இளைய அப்துல்லாஹ் said...

உனது பிரார்த்தனை வீண் போகவில்லை

இளைய அப்துல்லாஹ்

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சகோதரி,

என்ன வார்த்தைகளைச் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்லப் போகிறேனெனத் தெரியவில்லை. வெறுமனே நன்றி மட்டும் சொல்லித் தப்பித்துக் கொள்ளல் கூடப் போதாது. இந்த அன்பை எப்படி ஈடேற்றப்போகிறேனெனத் தெரியவில்லை.

//உறங்க மறந்த இரவின் மீது
ஆனந்தக் கண்ணீரைக்
கசிய விட்டவாறு
வாழ்விலிருந்து நழுவிப் போனதொரு
பெரும் வலி//

எனக்கும். :)

பஹீமாஜஹான் said...

"உனது பிரார்த்தனை வீண் போகவில்லை

இளைய அப்துல்லாஹ்"

இறைவனுக்கே எல்லா நன்றியும்.

பஹீமாஜஹான் said...

ரிஷான்
"வெறுமனே நன்றி மட்டும் சொல்லித் தப்பித்துக் கொள்ளல் கூடப் போதாது"

ஆமாம்.
மறுபடியும் இப்படியான விபரீதங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதே நீங்கள் எமக்காகச் செய்யக் கூடிய மிகப் பெரிய உதவி ஐயா.

Athikkadayan said...

அன்பு சகோதரி பஹிமா ஜஹானுக்கு,
ரிஷான் மீண்டு வந்ததற்கு வல்ல இறைவனுக்கே நாம் அனைவரும் நன்றி செலுத்துவோமாக. பிரிவின் வலியில் இருக்கும் அவரை மீண்டும் இயல்புக்கு கொண்டு வருவதில் ஒரு சகோதரியாக உங்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். இருக்கும் என்றே நம்புகிறேன் (உங்கள் இருவருக்குமான கவிதைகளை படிக்கின்ற போது அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது ).
தங்கள் தம்பி ரிஷானின் கவிதைகளில் சிலவற்றை மட்டுமே நான் படித்திருக்கிறேன். பொதுவாக கவிஞர்களை நான் அவ்வளவாக கொண்டாடுவதில்லை ஏனெனில் அவர்கள் தங்களின் கவிதையினூடாக வல்ல இறைவனுக்கு அறிந்தோ அறியாமலோ இணைவைத்து விடுவார்கள். ஆனால் நான் படித்த ரிஷானின் கவிதைகளில் அத்தகைய இணை வைப்பை காணவில்லை. இனிவரும் காலங்களிலும் அவரும் நீங்களும் அவ்வாறே இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
ஏக இறைவா இந்த பூமியில் வாழும் காலமெல்லாம் எங்களை உனக்கு இணை வைக்காதவர்களாகவே வாழ செய்.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் Athikkadayan

"பிரிவின் வலியில் இருக்கும் அவரை மீண்டும் இயல்புக்கு கொண்டு வருவதில்"

அப்படி வலிமிகுந்த பிரிவுகள் ரிஷானுக்கு இல்லை

"ஆனால் நான் படித்த ரிஷானின் கவிதைகளில் அத்தகைய இணை வைப்பை காணவில்லை"
ரிஷான் நல்ல பிள்ளை.

உங்கள் வருகைக்கு நன்றி