இறைவனுக்கு நன்றி




ஒரு துர்க்காலத்தைப்
பரப்பி வைத்துப்
புழுங்கித் தவித்தது
நீண்ட கோடை



நஞ்சுண்ட நாட்களைச்
சுமந்தவாறு
அரபிக் கடல் மீது
ஓயாமல் தத்தளித்தது
ஒரு பேரலை

ஆருயிர்கள்
துடிதுடித்த பொழுதுகளைப்
புரட்டிப் புரட்டிப் படித்து விட்டுத்
தூர எறிந்து போயிற்று
விதியின் கொடும் கை


இன்று...
வீழ்ந்து கிடந்த திசைகள்
புத்துயிர் பெற்று நிமிர்கின்றன

தலைமீது சுமந்தலைந்த
பாறாங்கல்லொன்றை
இறக்கி வைத்துவிட்டு
விலைமதிப்பற்ற திரவியமொன்றை
ஆரமெனச் சூடிவருகிறது
சூரியோதயம்

நொந்து போன சிறகுகளை
மெல்ல மெல்ல அசைத்தவாறு
உந்திப் பறந்திடும்
உற்சாக வேளைக்காகக்
காத்துக் கிடக்கிறது
எங்கள் அன்பு "வானம் பாடி"

இறைவ,
நினதளவற்ற அருளுக்கு
நன்றிகள் கோடி
****************************
(ரிஷானுக்கு)

6 comments:

JAGADEESWARAN said...

இறைவனுக்கு நன்றி KAVETHYKAKA UNGALUKU நன்றி

எம்.ரிஷான் ஷெரீப் said...

மீளவும் வந்துவிட்டேன் சகோதரி ஃபஹீமா ஜஹான் !

அன்பான உங்கள் பிரார்த்தனைகளுக்கும், பிரார்த்தனைக்கென நண்பர்களை ஒருங்கிணைத்ததற்கும், இன்னும் எனக்காகப் பிரார்த்தித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்காகவும் எனது நன்றிப் பதிவு இங்கே
http://rishanshareef.blogspot.com/2009/05/blog-post.html

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.

ஆகாய நதி said...

கடவுளுக்கு நன்றி! ரிஷான் உங்கள் பின்னூட்டம் கண்ட பிறகே மகிழ்ச்சி.. எனக்கு உங்களை தெரியாது கடவுள் முன் எல்லாரும் சகோதர சகோதரிகள் தானே!

பஹீமாஜஹான் said...

வாருங்கள் JAGADEESWARAN

இறைவனுக்குத்தான் நன்றி.

பஹீமாஜஹான் said...

"மீளவும் வந்துவிட்டேன்"
ரிஷான்.
இந்த வார்த்தைக்காகத் தான் தவம் கிடந்தோம்.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் ஆகாய நதி

"கடவுளுக்கு நன்றி"

உங்கள் வருகையைக் குறித்து மகிழ்வடைகிறேன்.