ஒரு துர்க்காலத்தைப்
பரப்பி வைத்துப்
புழுங்கித் தவித்தது
நீண்ட கோடை



நஞ்சுண்ட நாட்களைச்
சுமந்தவாறு
அரபிக் கடல் மீது
ஓயாமல் தத்தளித்தது
ஒரு பேரலை

ஆருயிர்கள்
துடிதுடித்த பொழுதுகளைப்
புரட்டிப் புரட்டிப் படித்து விட்டுத்
தூர எறிந்து போயிற்று
விதியின் கொடும் கை


இன்று...
வீழ்ந்து கிடந்த திசைகள்
புத்துயிர் பெற்று நிமிர்கின்றன

தலைமீது சுமந்தலைந்த
பாறாங்கல்லொன்றை
இறக்கி வைத்துவிட்டு
விலைமதிப்பற்ற திரவியமொன்றை
ஆரமெனச் சூடிவருகிறது
சூரியோதயம்

நொந்து போன சிறகுகளை
மெல்ல மெல்ல அசைத்தவாறு
உந்திப் பறந்திடும்
உற்சாக வேளைக்காகக்
காத்துக் கிடக்கிறது
எங்கள் அன்பு "வானம் பாடி"

இறைவ,
நினதளவற்ற அருளுக்கு
நன்றிகள் கோடி
****************************
(ரிஷானுக்கு)