மேதைகளும் மாபெரிய வீரர்களும்
மீண்டு வராமற்போன
மருத்துவமனைக் கட்டிலொன்றிலிருந்து
அதே தீர்க்கமான முடிவொன்றிலிருந்து
எழுந்து வந்துள்ளாய்


திருநாமங்களையெலாம்
உச்சாடனம் செய்து
எல்லாம் வல்லவனிடம்
உனை மீட்டுத் தரவேண்டி
ஏந்தித் தவித்த கரங்களை
அழுத்திக் கொண்டிருந்தது
அன்பின் கொடும் சுமை


உயிரோடு போராடிக் கொண்டிருந்த
இன்னுயிரைத்
தூர தேசத்தில் விட்டு விட்டு
ஊர்ந்தூர்ந்து வந்ததந்தக்
கொடிய காலம்


இருக்கும் இடத்தை
நொந்து போன எண்ணங்களால்
நிரப்பி விட்டுத்
துயரேறிய பொழுதுகளை
இழுத்தவாறு நொண்டி நகர்ந்தன
இரு பாதங்கள்


செல்லப் பறவையே....
இறுதியில் நீ வந்தாய்
உதிரமெங்கும் கலந்தோடிய நஞ்சிலிருந்து
உன் ஜீவனை மீட்டெடுத்து வந்தாய்


உறங்க மறந்த இரவின் மீது
ஆனந்தக் கண்ணீரைக்
கசிய விட்டவாறு
வாழ்விலிருந்து நழுவிப் போனதொரு
பெரும் வலி

என்ன வார்த்தையால் உனை வரவேற்பது
எந்தக் கரம் கொண்டு உனை அரவணைப்பது
எனத் தெரியாத கடலொன்றுக்கப்பாலிருந்து
கையசைக்கிறாய்


ஆருயிரே வருக
பாக்கியம் புரிந்தவர் நாம்
உனை மீளவும் பெற்றிருக்கிறோம்

-----------------------------------
*தம்பி ரிஷானுக்கு




ஒரு துர்க்காலத்தைப்
பரப்பி வைத்துப்
புழுங்கித் தவித்தது
நீண்ட கோடை



நஞ்சுண்ட நாட்களைச்
சுமந்தவாறு
அரபிக் கடல் மீது
ஓயாமல் தத்தளித்தது
ஒரு பேரலை

ஆருயிர்கள்
துடிதுடித்த பொழுதுகளைப்
புரட்டிப் புரட்டிப் படித்து விட்டுத்
தூர எறிந்து போயிற்று
விதியின் கொடும் கை


இன்று...
வீழ்ந்து கிடந்த திசைகள்
புத்துயிர் பெற்று நிமிர்கின்றன

தலைமீது சுமந்தலைந்த
பாறாங்கல்லொன்றை
இறக்கி வைத்துவிட்டு
விலைமதிப்பற்ற திரவியமொன்றை
ஆரமெனச் சூடிவருகிறது
சூரியோதயம்

நொந்து போன சிறகுகளை
மெல்ல மெல்ல அசைத்தவாறு
உந்திப் பறந்திடும்
உற்சாக வேளைக்காகக்
காத்துக் கிடக்கிறது
எங்கள் அன்பு "வானம் பாடி"

இறைவ,
நினதளவற்ற அருளுக்கு
நன்றிகள் கோடி
****************************
(ரிஷானுக்கு)





மனமுருகிக்கேட்ட பிரார்த்தனைகளின் முடிவில்
அடுத்துச் செய்வது
என்னவென்றறியாமல்
வலிமிகுந்த கேள்விகள்
வீடெங்கும் பரவிப் போயிருந்த
இன்றைய
அந்திப் பொழுதின் பளுவை நீக்கி
நீயழைத்தாய்


எஞ்சியிருக்கும் வலுவெலாம் திரட்டி
இரகசியக் குரலில் கதைத்தாய்
உயிர் பிழிபடும் வேதனையை
உச்சரித்த ஒவ்வொரு சொல்லிலும்
வழியவிட்டாய்

உன் சிரித்த முகம்
உன்து புன்னகைக் குரல்
எல்லாவற்றையும்
இந்தப் பயங்கர நாட்களிடம்
பசியாறக் கொடுத்துவிட்டாய்

உனது தோள் மீது வந்தமரும்
பட்சிகளெதுவும் பறந்து வராத
அடிவான மலைத் தொடர்களை... ...
உன் குருதியில் கலந்திருக்கும் நஞ்சை
வாங்கிக் கொள்ளத் தெரியாமல் பார்த்திருந்த
விசாலமிகு வான வெளியை ........
வேதனை நிரம்பியிருக்கும்
மிகப் பெரிய கடலொன்றை.....
எண்ணித் தவிக்கிறாய் .
இன்னும் நீ
நோவுகளில் இருந்து மீளவில்லை
இது வரையும் நீ
துயரத்தின் எல்லையைத் தாண்டவும் இல்லை

உனை ஆபத்தில் கிடத்திக் கொண்டு
அடுத்தவரின் நிம்மதிக்காக
அனைத்தையும் மறைத்தாய்
உன் உடலில் புகுந்த நஞ்சை
நாங்கள் பருகியிருக்கக் கூடாதா?
உனை வதைக்கும் வலிகளை
நாங்கள் ஏற்றிருக்கக் கூடாதா?

அதிகாலையின் மீதும் பத்து இரவுகள் மீதும்
வானத்தின் மீதும் விடிவெள்ளியின் மீதும்
அந்த மாபெரும் நகர்மீதும் மலை மீதும்
சத்தியம் செய்பவனே....
எங்கும் நிறைந்த இறைவனே
எல்லாம் வல்ல ஒருவனே

எங்கள் தம்பியை
சுகப்படுத்தித் தந்துவிடு
நகரமுடியாத வேதனையின் சுமையுடன்
கால்களைச் சுற்றியிருக்கும்
இந்தக் காலத்தைப் போக்கிவிடு









2009.05.04 (16:14)


இன்று கதைத்து நீதானா?

அன்புத் தம்பி

அது நீதானா?



உனது குரல்

எனது நம்பிக்கைகளை உடைத்தது

உனது கோரிக்கை

எனது தைரியத்தைச் சிதைத்தது


எந்தப் பதிலுமளிக்காத

தொலைபேசி இலக்கமொன்றை

எம்மிடையே விட்டுப் போயிருந்தாய்

கடல்கள் தாண்டி

மலைகள் தாண்டி

ஏக்கத்துடன் திரும்பின

பல நூறு அழைப்புகள்



எல்லோரிடமும் புன்னகையை

மிதந்து போக விட்டுக் கொண்டிருக்கும்

நீ தான் இன்று

கைவிடப்பட்ட படகொன்றில்

அத்தனை பேரையும்

தவிக்க விட்டுள்ளாய்



தூர நாட்டில்

கிடத்தப் பட்டிருக்கும்

மருத்துவமனைக் கட்டிலொன்று

பிரார்த்தனைக்காக ஏந்தப் படும்

என் கரங்களுக்குள்ளே நடுநடுங்குகிறது

தனது அருளின் அரவணைப்புக்குள்

இறைவன் உனைக் காத்திட வேண்டுமென்று

உள்ளம் உருகியழுகிறது


டோஹாவின் காற்றே....மண்ணே....

நட்சத்திரங்களே..சூரிய சந்திரரே..

அற்புதங்களைப் பொதித்து வைத்திருக்கும்

மாபெரிய வானகமே...

எங்கள் தம்பி நலம் பெற்று வந்துவிட

இறைவனிடம் முறையிடுங்கள்


ரிஷா.......................ன்

உன் வருத்தங்களை

எங்களுக்குத் தந்து விட்டு

நீ எழுந்து வந்து விடு

எமது ஆரோக்கியங்களை

உன்னுடலில் வாங்கிக் கொண்டு

இன்புற்று வாழ்ந்து விடு

____________________________________-
* இதனைப் படிப்பவர்கள் ஒரு கணம்
விழிமூடி மெளமாக இருங்கள்
சகோதரன் ரிஷான் நலம் பெற வேண்டு மென்று
பிரார்த்தியுங்கள்