அடவி 2007




தீ மூட்டப் பட்ட
வனத்தைவிட்டுத்
தப்பித்துப் பறக்கிறது
பறவை

சிங்கத்தோடு நரிகளும்
புலியோடு ஓநாய்களும்
அணிதிரண்ட அடவியில்
அபயம் தேடியலைகிறது
மான் குட்டி

வற்றிய குளத்தில்
வந்திறங்கிய கொக்குகள்
நீர் ததும்பும் நதிகளில்
சேர்ப்பிக்கும் கதைகள் பேசி
மீன்களைக் காவிப்
பறக்கின்றன மலையுச்சிக்கு

தேனீக்களை விரட்டியடித்துத்
தேன் சொட்டும் வதையை
அபகரித்துக் கொண்டது
கரடி

அடவியெங்கும்
அதிர்ந்து ஒலிக்கிறது
என் தேசத்து
மானுடத்தின் பேரவலம்

8 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

காடு தன் வசந்தங்களை இழந்த கதையை,
தேசம் தன் அமைதியை இழந்த நிலையை,
விலங்குகள் தமக்குள் கபடங்கள் பூசிக் கொண்டு உலா வருதலை அழகாகச் சொல்கிறது கவிதை.
ஆனால் இந் நிலை 2007 ஓடு நின்றுவிடாததுதான் பெரும்வருத்தத்துக்குரியது. :(

Saravana Kumar MSK said...

வலிமிக்க வரிகள்..

கவிநயா said...

//விலங்குகள் தமக்குள் கபடங்கள் பூசிக் கொண்டு உலா வருதலை //

என்று ரிஷானை விட அழகாக சொல்ல முடியாது. வலியை வலிமை மிகு வார்த்தைகளால் பிரசவிக்கும் கலையை நன்கு கற்று வைத்திருக்கிறீர்கள்.

ஜமாலன் said...

அரசியல் சூழலைச்சொல்லும் அருமையான கவிதை பஹிமா..

எளிமையான வார்த்தைகளில் வலிமையான உணர்வுகளை வெளிப்படத்தும் உங்கள் திறன் பாராட்டுக்குரியது.

ஈழஅரசியல் நிலையையும் அது மானுடப் பேரவலமாக மாறிவருவதையும் இதைவிடவும் நுட்பமாகச் சொல்லமுடியாது.

பஹீமாஜஹான் said...

ரிஷான் வருக..

"ஆனால் இந் நிலை 2007 ஓடு நின்றுவிடாததுதான் பெரும்வருத்தத்துக்குரியது. "

ஆமாம்.
2007 ஐ விடவும் 2008 இன் நிலைமை மோசமாகவே உள்ளது.

யாரிடம் போய்ச் சொல்வது ?

பஹீமாஜஹான் said...

சரவணகுமார்

"வலிமிக்க வரிகள்"

உங்கள் வருகைக்கு நன்றி .

பஹீமாஜஹான் said...

வாருங்கள் கவிநயா,

"ரிஷானை விட அழகாக சொல்ல முடியாது"

அவர் தான் எல்லாவற்றிலும் முந்திக் கொண்டு இருக்கிறாரே

உங்கள் வருகைக்கு நன்றி கவிநயா

பஹீமாஜஹான் said...

வாருங்கள் ஜமாலன்

எங்கள் அரசியல் மீதும்
எங்கள் வலிகள் மீதும்
எங்கள் கவிதைகள் மீதும்
நீங்கள் காட்டிவரும் அக்கறை எங்களுக்கு வலுவூட்டுகிறது.

நன்றி.