தீ மூட்டப் பட்ட
வனத்தைவிட்டுத்
தப்பித்துப் பறக்கிறது
பறவை

சிங்கத்தோடு நரிகளும்
புலியோடு ஓநாய்களும்
அணிதிரண்ட அடவியில்
அபயம் தேடியலைகிறது
மான் குட்டி

வற்றிய குளத்தில்
வந்திறங்கிய கொக்குகள்
நீர் ததும்பும் நதிகளில்
சேர்ப்பிக்கும் கதைகள் பேசி
மீன்களைக் காவிப்
பறக்கின்றன மலையுச்சிக்கு

தேனீக்களை விரட்டியடித்துத்
தேன் சொட்டும் வதையை
அபகரித்துக் கொண்டது
கரடி

அடவியெங்கும்
அதிர்ந்து ஒலிக்கிறது
என் தேசத்து
மானுடத்தின் பேரவலம்