சாத்தானுடன் போனவனுக்கு





நான் அகன்று போகிறேன்
உனது எல்லாப்
பாசாங்குகளை விட்டும்
பிடிவாதங்களை விட்டும்


வழிகேடு உனது வேதமான பின்னர்
குடிகேடன் உனது தோழனான பின்னர்
என் குரல்
நினது இதயத்தில் ஏறாமல்
நழுவி விழுகிறது


இந்தத் துயர் மிகுந்த நாட்களில்
சகோதரத்துவத்தின் மரியாதையின் மீது
கசந்த நிழலைப் படிய விடுகிறாய்
காப்பாற்றுவதாகச் சொல்லும் உறுதிகளை
வெறிபிடித்த அலைகளிடையே கைவிட்டுள்ளாய்


அன்னையைக் காதலியைக் கடைசியில்
சகோதரியை
அவமானங்களால் போர்த்துகிறாய்
இன்னும் மீதமிருக்கலாம் உன்னிடம்
போர் நிலத்திலிருந்து
பொத்திப் பிடித்துக் கொண்டு வந்த
வாழ்வும் வசந்தங்களும்
இனி அவற்றையும் ஒவ்வொன்றாக
சாத்தானிடம் அடகுவை

மீளவே முடியாத இழிவின் வாசலைத்
தட்டிக் கொண்டிருப்பவனே
இறுதிக் கோரிக்கையையும் நின் பாதங்கள்
நசித்துக் கொண்டு போனபின்னர்
இனி மறுப்பதற்கில்லை
அந்தக் கடப்பாரையை
எனது தலைமீது கைவிட்டவன்
நீதான் என்பதை

17 comments:

தமிழன்... said...

நல்லா இருக்கு...

தமிழன்... said...

என்ன பிரச்சனை :)

சமீபத்திய எரிச்சல் என்ன...?

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சகோதரி,

சகோதரத்துவமும் நேசமும் அப்படியே இருக்கையில் சில காயங்களை ஆற்றவேண்டிச் சகோதரன் வழி தவறியிருப்பார்.

அன்புத் தம்பியை மன்னிப்போம்.
காயங்கள் ஆறியவிடத்து மீண்டும் பழைய தம்பியாகத் திரும்பி வருவார்.
ஏற்றுக் கொள்ளலாம்.

Saravana Kumar MSK said...

//இனி மறுப்பதற்கில்லை
அந்தக் கடப்பாரையை
எனது தலைமீது கைவிட்டவன்
நீதான் என்பதை//

ரொம்ப வலி மிகு வரிகள்..

படித்து முடித்த பின்னர் என்னிடம் வார்த்தைகளே இல்லை, எதை சொல்லவும்..
:[

Nintavur shibly said...

சுய கழிவிரக்கத்தின் ஆற்றாமை நிரம்பி வழியும் அழகான கவிதை....

சட்டென்று கவிதையை படித்து முடித்த பின்னும் கவிதை தரும் அதிர்வு சில நிமிடங்கள் இதயத்தில் உறைகிறது..

அழகான உங்கள் கவிதைகளுக்கு என்றும் நான் இரசிகன்...

Natchathraa said...

வலி மிகுந்த வரிகள்...
உண்மைதான் சகோதரி..
சகோதரன் மேல் உண்மையான அன்பு நமக்கிருக்க ஏனென்று காரணமே சொல்லாமல் நம் பாசத்தினை புரிந்துக்கொள்ளா சகோதரனை என்ன சொல்லுவது....:-((
மனம் வருந்தி திரும்பும் வரை காத்திருப்போம்...வரும் நேரம் அன்பால் அணைத்திடுவோம்....

Rajakamal said...

கவிதை வரிகளில் வேகம் தெரிகிறது
பஉறிமாவிற்கு ஒட்டு மொத்த ஆண் வர்கத்தின் மீதே கோபமா
கடப்பாறையை எல்லாம் கையில் எடுத்திருக்கிறிர்கள்
கோபம் தணிந்து ஒரு கவிதை எழுதுங்களேன்

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என வலை பூவிற்கு
வருகை தந்து கருத்துகள் தாhருங்களேன்

வலை பூ பெயர் நிலா மலர்கள்
www.rajakamal.blogspot.com

கவிநயா said...

உணர்வுகளுக்கு வார்த்தை கட்டி உலவ விடுவதில் உங்களுக்கு நிகர் இல்லை. வலிகள் மறையாவிட்டாலும் குறையும்.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் தமிழன்

"என்ன பிரச்சனை :)

சமீபத்திய எரிச்சல் என்ன...?"

இது தான்- (ரிஷான் குறிப்பிட்டுள்ளது போல)

"சகோதரத்துவமும் நேசமும் அப்படியே இருக்கையில் சில காயங்களை ஆற்றவேண்டிச் சகோதரன் வழி தவறியிருப்பார்.

அன்புத் தம்பியை மன்னிப்போம்.
காயங்கள் ஆறியவிடத்து மீண்டும் பழைய தம்பியாகத் திரும்பி வருவார்.
ஏற்றுக் கொள்ளலாம்."

இத தான் பிரச்சினை.

பள்ளிக் கூடப் பையன்களின் சண்டைகளில் இருந்து சற்றே ஓய்வுடன் விடுமுறையைக் கடத்தலாம் என்று பார்த்தால் பள்ளிக் கூடப் பையன்களைவிடவும் வளர்ந்த பையன்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்

5,6 வயதுப் பையன்களின் பிடிவாதத்துடனும் அறிவுடனும்.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் ரிஷான் ஷெரீப்

"அன்புத் தம்பியை மன்னிப்போம்.
காயங்கள் ஆறியவிடத்து மீண்டும் பழைய தம்பியாகத் திரும்பி வருவார்.
ஏற்றுக் கொள்ளலாம்."

அவனவனாப் பார்த்து முள்ளில் விழுந்து காயப்பட்டுக் கொண்டு....

அதைவிட்டும் எழுந்து வரக் கரம் கொடுத்தால் அதையும் மறுத்துக் கொண்டு....

எங்களையும் பைத்தியமாக்கிக் கொண்டு...

ரொம்பவும் அன்புத் தம்பியாம் தம்பி

பஹீமாஜஹான் said...

வாருங்கள்
saravanaumar

"ரொம்ப வலி மிகு வரிகள்..

படித்து முடித்த பின்னர் என்னிடம் வார்த்தைகளே இல்லை, எதை சொல்லவும்.."

என்ன அந்தக் கடப்பாரையை உங்கள் தலையில் கைவிட்டமாதிரி இருந்ததோ? :)

உங்கள் வருகை மகிழ்ச்சிதருகிறது.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் ஷிப்லி

"சட்டென்று கவிதையை படித்து முடித்த பின்னும் கவிதை தரும் அதிர்வு சில நிமிடங்கள் இதயத்தில் உறைகிறது.."

இந்தக் கவிதை எழுத நேர்ந்த சம்பவமும் கூட இன்னும் தலையை அழுத்திக் கொண்டே இருக்கிறது.

நன்றி ஷிப்லி

பஹீமாஜஹான் said...

வாருங்கள் நட்சத்திரா


'சகோதரன் மேல் உண்மையான அன்பு நமக்கிருக்க ஏனென்று காரணமே சொல்லாமல் நம் பாசத்தினை புரிந்துக்கொள்ளா சகோதரனை என்ன சொல்லுவது....
:-((
மனம் வருந்தி திரும்பும் வரை காத்திருப்போம்...வரும் நேரம் அன்பால் அணைத்திடுவோம்...."

99 சதவீதம் எனது பொறுமையைச் சோதித்து விட்டான்.இன்னும் மீதமிருப்பதையும் என்ன செய்யப் போகிறான் என்று பார்க்க வேண்டியது தான்

பஹீமாஜஹான் said...

வாருங்கள் நட்சத்திரா


'சகோதரன் மேல் உண்மையான அன்பு நமக்கிருக்க ஏனென்று காரணமே சொல்லாமல் நம் பாசத்தினை புரிந்துக்கொள்ளா சகோதரனை என்ன சொல்லுவது....
:-((
மனம் வருந்தி திரும்பும் வரை காத்திருப்போம்...வரும் நேரம் அன்பால் அணைத்திடுவோம்...."

99 சதவீதம் எனது பொறுமையைச் சோதித்து விட்டான்.இன்னும் மீதமிருப்பதையும் என்ன செய்யப் போகிறான் என்று பார்க்க வேண்டியது தான்

பஹீமாஜஹான் said...

வாருங்கள்
Rajakamal

"ஒட்டு மொத்த ஆண் வர்கத்தின் மீதே கோபமா"
அப்படி ஒன்றும் நான் சொல்வில்லையே?

எங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டு அல்லவா?

உங்கள் "நிலாமலர்கள்" அழகாக உள்ளன.

உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் கவிநயா

உங்கள் வரவு மகிழ்ச்சி தருகிறது

Gokulan said...

அன்பு பஹிமா அக்கா..

தம்பியின் மீதான அன்பும் அக்கறையும் அழகாய் கவிதயாக உள்ளது..

தடம்மாறிச்செல்லும் எந்தவொரு சகோதரனுக்கும் இந்தக்கவிதை உரித்தாகும்.. மிக நன்று..

(கவிதை சொல்வதும் சரிதான்.. அப்படியே விட்டுவிடாமல் தம்பியின் காதைத்திருகி வீட்டில் உட்காரவைத்துவிடுங்கள் :))