சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து
காற்றிலே கரைகிறது சூனியம்!


அவர்களும் விதைத்தனர்
இவர்களும் விதைத்தனர்:
எந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை
உருமலை உள்ளடக்கிக்
காலங்கள்தொறுமவை காத்துக்கிடந்தன!


தத்தித் தவழும் பாலகனோ...
ஏழைத் தாயொருத்தியோ...
இனிய இளைஞnihருவனோ...
மதகுருவோ...
மேய்ச்சலுக்குச் சென்ற மந்தையொன்றோ...
அல்லது
குறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ?


அறுவடை காண மறந்த வன்னிப் பெரு நிலத்தில்
நச்சுக் கிழங்குகளை நாளெல்லாம் தோண்டலாம்:
நீண்ட கோடைகளிலும் மரிப்பதில்லை
மாரி காலம் கடந்து போன பின்னும் முளைப்பதில்லை:
ஏவி விடப் பட்ட பூதங்களைத் தமக்குள் பிடித்து
பாதையோரங்களிலும் பொட்டல் வெளிகளிலும் காத்திருந்தன!


நெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட
தன் கரம் சுமந்த கோலுடன்
அங்குலமங்குலமாக
வன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்!


எங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்
எம்மொழியும் அறியான்...எமதினமும் அறியான்...
அவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்
நாமினி எதை நடப் போகிறோம்?