பெருக்கெடுத்து வரும்
இருளில் நனைந்தவாறு
கற்பனைகளில் வாழ்ந்திருந்த உனை
வழியனுப்பி வைக்கிறேன்

அன்பு வழிந்தோடிய இனிய உலகத்தைச்
சுற்றியெடுத்து
எரியும் தீயிடம் தின்னக் கொடுக்கிறேன்

எல்லாம் முடிந்து போன பின்
மனதின் கருணையையும் அன்பையும்
காற்றிலே கிழித்தெறிகிறேன்
குருவிச் சொண்டுகளில் காவிச் சென்றவை
கூடுகளைக் கதகதப்பாக்கிக் கொள்ளட்டும்
யாருக்கு வேண்டுமினி
நிராகரிப்பின் வேதனைகள் ?


எப்பொழுதும் ஆறுதலையும்
அலைததும்பும் காதலையும் எடுத்துக் கொண்டு
இல்லம் மீள்வாய்
பற்றியிருக்கும் கரங்களுக்குள்
அன்பினைப் பத்திரப் படுத்தி
என் பிரார்த்தனைகளுடனும்
செல்ல மொழிகளுடனும்
புறப் பட்டுச் செல்வாய்

சமையல்காரியாகவோ
சலவைக்காரியாகவோ அன்றி
உனதுயிராகவோ அதனிலும் உயர்வாகவோ
எனைக் காத்திருந்தாய்

நேயமுடன் அரவணைத்துக் கொண்ட
நிலாப் பொழுதுகளில்
எம்மிடையே கீதமிசைத்துப் பாய்ந்தோடிய
வெள்ளியோடையின் சங்கீதத்தில்
நண்பர்கள் இலயித்திருந்தனர்
எனது முகஞ்சுழிப்பும் சிடுசிடுப்பும் மேலோங்கும்
காலமொன்றைக் கொண்டு வருவாய் என்பதை
எவருமே ஏற்காதிருந்தனர்

நினைக்கும் பொழுதெலாம்
துயர்மிகைத்திடுமோர் வலி தரும் விதி
ஏன் வாய்த்தது பேரன்பே?

சாட்சிகளை முன்னிருத்தி
வேதவசனங்களை ஒப்புவித்து
கணவனாக மாறினாய்
நீ அழைத்து வந்த பேய்களிடம்
உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்

இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத
கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்
கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த
காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு
வெளியேறிப் போய்விட்டது
எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று.....
********************************************************



ஆக்கிரமிப்பாளர்களே
எனது பாடலை விட்டுவிடுங்கள்
சின்னஞ்சிறு ஆன்மா ஏந்தியது
நெடுந்தூரம் போய்விடட்டும்


நீங்கள் இட்ட வரம்புகளுக்குள்
நின்று ததும்புகிறேன்
நீங்கள் வகுத்திருந்த வேலிகளின் எல்லையில்
வாழ்வைக் கைவிட்டுத் திரும்பியுள்ளேன்


எக்காலத்திலுமினி
உங்கள் பீடங்களில் முழந்தாளிட வர மாட்டேன்
நீங்கள் ஆராதிக்கும் நாமங்களிலும் சேர மாட்டேன்


ஆதிமுதல் போற்றிவரும்
அந்தக் கிரீடங்களின் மீது
அவமதிப்பை விட்டெறிகிறேன்
உங்கள் அலங்காரப் பட்டினங்களின்
துர்வாடையையும் பேரிரைச்சலையும்
சகித்திட முடியாமல் அகன்று போகிறேன்

பாய் மரத்தையும் திசைகாட்டியையும்
கரை மணலில் புதைத்து
அலைகளில் தள்ளிவிட்டீர்கள்
யாருமே காப்பாற்ற வரமுடியாத
துயரக் கடல் நடுவே
அமிழ்ந்து கொண்டிருக்கிறது
உயிரின் படகொன்று






எங்கும் வியாபித்து அரசாட்சி செய்தது இருள்:
அடர்ந்து செறிந்த இருளினூடு சிள்ளுடுகளும் தவளைகளும்
தமதிருப்பைச் சொல்லித் தயங்கித் தயங்கி ஒலித்தன

மயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு
வீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு
என் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.
பின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்
அவர்கள் வலம் வருகிறார்கள் போலும்
ஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ?
உருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது

அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன
அந்த வேளைதனில் உனை ஏன் நினைத்தேன் என்று தெரியவில்லை

அன்று மழை ஓய்ந்த அந்திப் பொழுதில்
அவர்கள் வந்து போயிருக்க வேண்டும்
எமது கல்லூரி முற்றவெளியெங்கும் வரிசை பிசகாத
சப்பாத்துக் கால்களின் சுவடுகள் எஞ்சியிருந்தன.
இரத்தக் கறைதோய்ந்த மண்டபத்து மூலையறைச் சுவர் மீது
புதிய தடயங்களை கண்ணிரண்டும்
பயத்துடனே தேடி நடுநடுங்கின.
என் விழிகளுக்குள் வெளவால்கள் சடசடத்துப் பறந்தன

ஆதிரை:
கடைசியாக நீ கல்லூரி வந்ததினம்
அதுவென்றுதான் நினைக்கிறேன்
அன்று சிரித்திடவே இல்லை நீ
சிந்தனை வயப் பட்ட முகத்துடன்
கல்லூரி வளவெங்கும் அலைந்து திரிந்தாய்


பின்னர் நான் பார்க்க நேர்ந்த போராளிகளின் படங்களிலெல்லாம்
உன் முகத்தைத் தேடித் தோற்றேன்
இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை

துப்பாக்கி வரைந்த உன் இரசாயனவியல் குறிப்பேட்டைப்
பத்திரப் படுத்திவைத்துள்ளேன்.
பாடத்தைவிட்டு உன் கவனம் திசைமாறிய தருணங்களில்
ஓரங்களில் நீ எழுதியுள்ள வாசகங்கள்
விட்டு விடுதலையாகும் உன் சுதந்திரக் கனவைச் சொல்கின்றன

உன் நகர்வுகளை மோப்பம் பிடிக்கும்
அறிமுகமற்ற சப்பாத்துக் கால்கள்
சனியன்களால் ஆட்டுவிக்கப்படும் நாளைகளிலும்
எமது வாழிடங்களில் பதிந்து செல்லலாம்
நீ கவனமாயிருந்து இலட்சியத்தை வெற்றிகொள்

பஹீமாஜஹான்
(2001-மூன்றாவது மனிதன்)