ஆக்கிரமிப்பாளர்களே
எனது பாடலை விட்டுவிடுங்கள்
சின்னஞ்சிறு ஆன்மா ஏந்தியது
நெடுந்தூரம் போய்விடட்டும்


நீங்கள் இட்ட வரம்புகளுக்குள்
நின்று ததும்புகிறேன்
நீங்கள் வகுத்திருந்த வேலிகளின் எல்லையில்
வாழ்வைக் கைவிட்டுத் திரும்பியுள்ளேன்


எக்காலத்திலுமினி
உங்கள் பீடங்களில் முழந்தாளிட வர மாட்டேன்
நீங்கள் ஆராதிக்கும் நாமங்களிலும் சேர மாட்டேன்


ஆதிமுதல் போற்றிவரும்
அந்தக் கிரீடங்களின் மீது
அவமதிப்பை விட்டெறிகிறேன்
உங்கள் அலங்காரப் பட்டினங்களின்
துர்வாடையையும் பேரிரைச்சலையும்
சகித்திட முடியாமல் அகன்று போகிறேன்

பாய் மரத்தையும் திசைகாட்டியையும்
கரை மணலில் புதைத்து
அலைகளில் தள்ளிவிட்டீர்கள்
யாருமே காப்பாற்ற வரமுடியாத
துயரக் கடல் நடுவே
அமிழ்ந்து கொண்டிருக்கிறது
உயிரின் படகொன்று