எப்பொழுதும்
நீ
கதைசொல்ல ஆரம்பிக்கும் இரவுகளின் முடிவில்
மலைகளிலிருந்து
இறங்கி வரத் தொடங்கும்
துயரத்தின் ஓடையொன்று


தாங்க முடியாச் சுமைகளின்
கனம் வலுக்கும் தருணங்களில்
பற்றியிருக்கும் பாறைகளை ஒவ்வொன்றாய் நழுவவிடுவாய்
உணர்ச்சியின் விளிம்பில்
மரணத்தை அழைத்திடும் சரிவுகளைத் தாங்கி
நீ
அமைதியில் உறைந்திருப்பாய்


பூர்விக குடிகள் விட்டுச் சென்ற தடயங்களைப்
பாறை இடுக்குகளில்
மூலிகைச் செடிகளிடையே பத்திரப் படுத்தியிருப்பாய்
வழிதவறிய ஆடுகளைத் தேடி வரும் சிறுவரிடம்
அற்புதங்களை மடியவிழ்ப்பாய்


நட்சத்திரங்கள்
வழிகாட்டும் இரவுகளில்
போகவிடாது பிணைத்திருக்கும்
ஆதி வேர்களை அசைத்துப் பார்ப்பாய்
உனையே பார்த்தவாறு ஓயாமல் கையசைக்கும்
வயல்காட்டு வெருளியோடு
மீறமுடியாத விதியதன்
நெடுங்கால வேதனையைப் பகிர்வாய்


ஈரத்தைக் குடிக்கவரும்
நிழல்தராச் சூரியனின் தண்டனைகளுக்குத்
தினந்தோறும் பயந்திருப்பாய்
மலையடிவாரத்து நீர்தேங்கிய கழனிகளில்
வீழ்ந்து நடுநடுங்கும்
மாபெரிய உன் விம்பம்.

************************************
2008.02.18
(நன்றி:கலைமுகம்)