எப்பொழுதும்
நீ
கதைசொல்ல ஆரம்பிக்கும் இரவுகளின் முடிவில்
மலைகளிலிருந்து
இறங்கி வரத் தொடங்கும்
துயரத்தின் ஓடையொன்று
தாங்க முடியாச் சுமைகளின்
கனம் வலுக்கும் தருணங்களில்
பற்றியிருக்கும் பாறைகளை ஒவ்வொன்றாய் நழுவவிடுவாய்
உணர்ச்சியின் விளிம்பில்
மரணத்தை அழைத்திடும் சரிவுகளைத் தாங்கி
நீ
அமைதியில் உறைந்திருப்பாய்
பூர்விக குடிகள் விட்டுச் சென்ற தடயங்களைப்
பாறை இடுக்குகளில்
மூலிகைச் செடிகளிடையே பத்திரப் படுத்தியிருப்பாய்
வழிதவறிய ஆடுகளைத் தேடி வரும் சிறுவரிடம்
அற்புதங்களை மடியவிழ்ப்பாய்
நட்சத்திரங்கள்
வழிகாட்டும் இரவுகளில்
போகவிடாது பிணைத்திருக்கும்
ஆதி வேர்களை அசைத்துப் பார்ப்பாய்
உனையே பார்த்தவாறு ஓயாமல் கையசைக்கும்
வயல்காட்டு வெருளியோடு
மீறமுடியாத விதியதன்
நெடுங்கால வேதனையைப் பகிர்வாய்
ஈரத்தைக் குடிக்கவரும்
நிழல்தராச் சூரியனின் தண்டனைகளுக்குத்
தினந்தோறும் பயந்திருப்பாய்
மலையடிவாரத்து நீர்தேங்கிய கழனிகளில்
வீழ்ந்து நடுநடுங்கும்
மாபெரிய உன் விம்பம்.
************************************
2008.02.18
(நன்றி:கலைமுகம்)
10 comments:
எல்லாமே துயரம்தானா பஹீமா?
மலையொன்றின் பார்வையிலிருந்தான மிக மிக அருமையான வரிகளைக் கொண்ட கவிதை.
ஒவ்வொரு வரிகளைப் படிக்கும் பொழுதும் அழகான மலையொன்றின் சலனங்களை மனம் காட்சிப்படுத்துகிறது.
//மலையடிவாரத்து நீர்தேங்கிய கழனிகளில்
வீழ்ந்து நடுநடுங்கும்
மாபெரிய உன் விம்பம்.//
அருமையான கவிதை சகோதரி.
தொடர்ந்து எழுதுங்கள்..!
வாருங்கள் முகவைத் தமிழன்
"எல்லாமே துயரம்தானா பஹீமா?"
மகிழ்ச்சிகள் நீர்க்குமிழிகள் போல மிதந்து வந்து சட்டென மறைந்து போய்விடுபவை.
துயரங்கள் பாரமான கற்கள் போல மனதின் அடியில் என்றென்றைக்குமான அழுத்தத்துடன் தேங்கிக் கிடப்பவை.
அழுந்திக் கிடப்பவற்றை என்ன செய்யலாம் ?
வாருங்கள் ரிஷான் ஷெரீப்
மலையைப் போல அந்த முதாட்டியும் சில இயல்புகளைக் கொண்டிருந்தாள்.
இதில் அந்த முதாட்டியைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
நன்றி ரிஷான்
//எப்பொழுதும்
நீ
கதைசொல்ல ஆரம்பிக்கும் இரவுகளின் முடிவில்
மலைகளிலிருந்து
இறங்கி வரத் தொடங்கும்
துயரத்தின் ஓடையொன்று//
இந்த வரிகளையே ரொம்ப நேரம் தாண்டாமல் இருந்தேன்..
வாருங்கள் சரவணகுமார்
//எப்பொழுதும்
நீ
கதைசொல்ல ஆரம்பிக்கும் இரவுகளின் முடிவில்
மலைகளிலிருந்து
இறங்கி வரத் தொடங்கும்
துயரத்தின் ஓடையொன்று//
"இந்த வரிகளையே ரொம்ப நேரம் தாண்டாமல் இருந்தேன்.."
உங்கள் கருத்திலிருந்து இரண்டு முடிவுகளுக்கு வரலாம் அல்லவா?
நன்றி. நன்றி.
//உனையே பார்த்தவாறு ஓயாமல் கையசைக்கும்
வயல்காட்டு வெருளியோடு
மீறமுடியாத விதியதன்
நெடுங்கால வேதனையைப் பகிர்வாய்//
என் மனநிலையை ஒத்திருக்கிறது. உங்களைப் போல அழகாய்ச் சொல்லத் தெரியவில்லை பஹீமா.
//மகிழ்ச்சிகள் நீர்க்குமிழிகள் போல மிதந்து வந்து சட்டென மறைந்து போய்விடுபவை.
துயரங்கள் பாரமான கற்கள் போல மனதின் அடியில் என்றென்றைக்குமான அழுத்தத்துடன் தேங்கிக் கிடப்பவை.//
அருமையாகச் சொன்னீர்கள்.
வாருங்கள் கவிநயா
//உனையே பார்த்தவாறு ஓயாமல் கையசைக்கும்
வயல்காட்டு வெருளியோடு
மீறமுடியாத விதியதன்
நெடுங்கால வேதனையைப் பகிர்வாய்//
"என் மனநிலையை ஒத்திருக்கிறது. "
அனேகமான பெண்கள் மலையைப் போலத்தான் வேர்பிடித்து நகரமுடியாதவாறு கிடக்கிறார்கள்.கடமைகள்,சமுகத்தின் நியதிகள், வாய்த்திருக்கும் ஆண் சார்ந்த உறவுகள் எல்லாமே அவளை
அசையவொன்னாது காலகாலமாக கட்டிப்போட்டிருக்கின்றன.
பெண்ணியவாதிகள் என்னதான் கூச்சலிட்டாலும் பெண்களின் நிஜ வாழ்வு மிகவும் துயரமானதே
அக்கா நல்ல கவிதை, வாழ்த்துக்கள்
//தாங்க முடியாச் சுமைகளின்
கனம் வலுக்கும் தருணங்களில்
பற்றியிருக்கும் பாறைகளை ஒவ்வொன்றாய் நழுவவிடுவாய்//
தெருக்களில் நாம், ஒவ்வொன்றாய் தவறவிடுகையில் வலித்த அதே உணர்வு
வாருங்கள் தம்பி அருள்
((தெருக்களில் நாம், ஒவ்வொன்றாய் தவறவிடுகையில் வலித்த அதே உணர்வு))
"தெருக்களில் தவறவிடுபவை" சட்டெனத் தொற்றிக் கொண்ட துயரத்துடன் யோசிக்க வைத்த சொல்.
தெருக்களில் மட்டுமல்ல
காடுகளிலும் கடலிலும் சிறைகளிலும் கூட சித்திரைவதைக் கூடங்களிலும் தான்
Post a Comment