தற்கொலை




அவளைக் கைவிடப் பட்டவளாக்கி
பிரார்த்தனைகளைப் பறித்து
இழுத்துச் சென்ற தெருக்களினூடாக
மேலெழுந்த புழுதிப் படலத்தைப்
புறக்கணித்து நீ சென்றிட அதிக நேரமெடுக்கவில்லை


மனதைச் சிதைத்த பாவத்தை
உயிரை வதைத்த தண்டனையை
நயவஞ்சகனுக்கான கூலியைக்
காவியவாறு
இடு காட்டுக்கும் உன் வாசலுக்குமாகக்
காலம் அலைந்தது


அகாலத்தில் திணித்து
நீயும் கைப்பிடி மண்ணிட்டு மூடிய ஓரிடம்
மெளனத்தின் ஆயிரம் ஈட்டிகளை - இனித்
தினந்தோறும் உனை நோக்கி ஏவும்


புறக்கணிக்கப்பட்டவளின் மொழிக்குப்
பெறுமதியிருக்கவில்லை
அநியாயமிழைக்கப்பட்டவளிடம் கையளித்திட
இனி எந்தப் பிராயச்சித்தங்களும்
தேவைப் படப்போவதில்லை

அற்பப் புழுதான் - நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்

ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும்
விழுமியங்களினூடாகப்
பாவிச் சென்றிருக்கும் வேரினை
விடுவிக்க முடியாதவளாக
இன்று
அண்டசராசரங்களின் எதிரே வீழ்ந்து கிடக்கிறாள்


நீகொடுத்த சுமைகளையும்
அந்த உடலையும்
உன்னிடமே எறிந்து விட்டாள்
இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப் போவதில்லை
நீ துன்புறுத்திய அவள் ஆத்மா

18 comments:

த.அகிலன் said...

//ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும்
விழுமியங்களினூடாகப்
பாவிச் சென்றிருக்கும் வேரினை
விடுவிக்க முடியாதவளாக இன்று
அண்டசராசரங்களின் எதிரே வீழ்ந்து கிடக்கிறாள்//

யக்கோவ் இது நல்லாயிருக்கு எனக்கு பிடிச்சிருக்கு...

அற்பப் புழுதான் - நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்

சொற்கள் எல்லாம் நல்லாத்தேன் இருக்கு.. ஆனாக் கொஞ்சூண்டு புலம்பறமாதிரிஇருக்கே... (நான் மட்டும் தான் புலம்பலாம்..ஹி ஹி ஹி )

ஸ்ரீராம் பொன்ஸ் said...

எனது தற்போதைய மனநிலைக்கு மிக அருகில் வந்துவிட்டது இக்கவிதை..படித்த பின் சில நிமிடங்கள் ஸ்தம்பித்துவிட்டேன்..மிக அரிதாய் இப்படியொரு நிலைமை வாய்த்துவிடுகிறது..நான் எழுத நினைத்த சில உணர்வுகளை நீங்கள் சொல்லி விட்டீர்கள்..இதுவே எனக்கும் போதுமானதென தோன்றுகிறது..

Gokulan said...

வாசிக்கையில் கண்கள் கலங்கின சகோதரி..

எவ்வளவு வலிகொண்ட ஒரு மனத்தில் இக்கவிதை விளைந்திருக்கக்கூடுமென யோசிக்கிறேன் நான்..

//மனதைச் சிதைத்த பாவத்தை
உயிரை வதைத்த தண்டனையை
நயவஞ்சகனுக்கான கூலியைக்
காவியவாறு
இடு காட்டுக்கும் உன் வாசலுக்குமாகக்
காலம் அலைந்தது//

நல்ல வரிகள்..

Saravana Kumar MSK said...

நீங்கள் பெண்பாலில் எழுதி இருக்கும் இக்கவிதையை, நான் ஆண்பால் கொண்டு படித்தேன்.. மனசுக்கு மிக நெருக்கமாய் இருந்தது..

//இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப் போவதில்லை
நீ துன்புறுத்திய அவன் ஆத்மா//

சித்தாந்தன் said...

'அற்பப் புழுதான் - நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்'

நெஞ்சை உலுப்புகின்ற வரிகள் இவை.
காலத்தின் நிண்ட கொடூர வரலாற்றை மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றன

இறக்குவானை நிர்ஷன் said...

//புறக்கணிக்கப்பட்டவளின் மொழிக்குப்
பெறுமதியிருக்கவில்லை
அநியாயமிழைக்கப்பட்டவளிடம் கையளித்திட
இனி எந்தப் பிராயச்சித்தங்களும்
தேவைப் படப்போவதில்லை
//

அழகான வரிகளைக் கொண்ட கவிதை. பலதடவைகள் ரசித்தேன்.

(எங்கு சென்றிருந்தீர்கள்? நிறைய நாட்கள் இந்தப்பக்கம் வரவில்லை???)

எம்.ரிஷான் ஷெரீப் said...

மீண்டுமொரு வலி மிகைத்த கவிதை. தலைப்பு கூட மனமதிரச் செய்கிறது. வாழ்வின் ஆதாரங்களில் தீப்பற்றும் போது எழுதிடும் ஒவ்வொரு சொற்களிலும் கூடச் சூடு தாக்கும்.
வலிகள் கவிதையோடு மட்டும் நின்றிடட்டும். வாழ்க்கை வசந்தங்களைக் கொண்டு பூச்சொறியட்டும்.

பஹீமாஜஹான் said...

அன்பின் தம்பி

" ஆனாக் கொஞ்சூண்டு புலம்பறமாதிரிஇருக்கே... "

கொஞ்சம் அல்ல மொத்தமாகவே புலம்பல் போலத் தான் இருக்கு.

வருகைக்கு நன்றி.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் SIRIRAM PONS

"மிக அரிதாய் இப்படியொரு நிலைமை வாய்த்துவிடுகிறது..நான் எழுத நினைத்த சில உணர்வுகளை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.."

எனக்கும் இத்தகைய அனுபவம் வாய்த்ததுண்டு.

"எனது தற்போதைய மனநிலைக்கு மிக அருகில் வந்துவிட்டது இக்கவிதை"

ஆண்களாலும் இத்தகைய வலியை உணரமுடிகிறது தான்.
அதே வேளை ஆண்களில் ஒரு பிரிவினரின் செயல்களே பெண்ணைச் சாகடித்துக் கொண்டுமிருக்கின்றன.

உங்கள் வருகைக்கு நன்றி

பஹீமாஜஹான் said...

வாருங்கள் கோகுலன்

"எவ்வளவு வலிகொண்ட ஒரு மனத்தில் இக்கவிதை விளைந்திருக்கக்கூடுமென யோசிக்கிறேன்"

ஆணின் முடிவுகளிலும் செயல்களிலும் கொஞ்சமாவது பணிவும் மனிதாபிமானமும் அடக்கமும் இருந்தாலே போதும் அவனைச் சார்ந்து வாழும் பெண்ணின் உலகம் நிம்மதி கொண்டதாக இருக்கும்.

இதை உணர்ந்தவர்கள் எத்தனைபேர்?

உங்கள் வருகைக்கு நன்றி

பஹீமாஜஹான் said...

வாருங்கள் saravana kumar

"நீங்கள் பெண்பாலில் எழுதி இருக்கும் இக்கவிதையை, நான் ஆண்பால் கொண்டு படித்தேன்.. மனசுக்கு மிக நெருக்கமாய் இருந்தது.. "

ஒரு சில ஆண்களுக்குத் தான் இத்தகைய நிலைமை ஏற்படக் கூடும்.ஆனால் ஒவ்வொரு பெண்ணும் வாழ்வில் ஒரு தடவையாவது "செத்துப் போகலாம்" என்று எண்ணும் படியாக அவளைச் சார்ந்த வாழ்வு கசப்பைத் திணித்திருக்கும்.

உங்கள் வரவுக்கு நன்றி.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் சித்தாந்தன்
இந்தக் கவிதையை இரண்டு முறையில் எழுதினேன்.

ஒன்று யுத்தத்தால் சாகடிக்கப் பட்ட பெண்.
மற்றையது அவள் சார்ந்து நிற்கும் ஆணினால் சாகடிக்கப் பட்ட பெண்.

2 வதையே இங்கு போட்டுள்ளேன்.

"'அற்பப் புழுதான் - நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்'"

இந்த வரிகள் முதல் கவிதையின் பாதிப்பைக் கொண்ட வரிகள்

பஹீமாஜஹான் said...

வாருங்கள் நிர்ஷன்

"எங்கு சென்றிருந்தீர்கள்? நிறைய நாட்கள் இந்தப்பக்கம் வரவில்லை"

எங்கும் செல்லவில்லை.இந்தப் பக்கம் வராமலே இருந்து விட்டேன்.

உங்கள் வரவுக்கு நன்றி

பஹீமாஜஹான் said...

வாருங்கள் ரிஷான்

"வலிகள் கவிதையோடு மட்டும் நின்றிடட்டும்"

வாழ்வின் வலிகள் தான் சிலருக்குக் கவிதைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

:(

கவிநயா said...

உங்கள் கவிதைகள் பலவற்றில் பரிச்சயமான உணர்வுகளைக் காண்கிறேன். விரைவிலேயே வலி தீரட்டும், வழி மாறட்டும்.

eayathambi said...

இன்றுதான் இந்த வலைப் பூவைப் பார்த்தேன். சந்தோசமாய் இருந்தது.

வாழ்த்தும் நெஞ்சோடு,
இளையதம்பி தயானந்தா

பஹீமாஜஹான் said...

வாருங்கள் இளையதம்பி தயானந்தா அவர்களே

பின்னூட்டமிட்டதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

90களில் வானொலியூடாக எனது கவிதைகளை ஒலிபரப்புச் செய்து என்னைக் கவிதை உலகுக்குக் கொண்டு வந்தவர்களில் தாங்களும் ஒருவர்.

எப்பொழுதும் தங்களின் கருத்துக்களை நான் அவாவி நிற்கிறேன்.
நன்றியுடன்

பஹீமாஜஹான் said...

வாருங்கள் கவிநயா


"உங்கள் கவிதைகள் பலவற்றில் பரிச்சயமான உணர்வுகளைக் காண்கிறேன். "

ஆமாம்.

அவற்றிலிருந்து விடுபட்டு எழுதத் தான் முயற்சி செய்கிறேன்.