முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன

தனது குழந்தைகளுக்காக
எடுத்துச் செல்லும் கனிகள்
ஒவ்வொன்றாக அழுகுவதை
ஏக்கத்துடன் தூக்கியெறிகிறாள்

அன்பை
நிம்மதியை
மாபெரும் கருணையொன்றை
தன்னோடு எடுத்துச் செல்லக்
காத்திருக்கிறாள்

ராஜாக்களின் அரசியல்
அவள் வீட்டைச் சிதைத்தது
அதிகாரம் கொண்ட கழுகொன்று
அவளது புத்திரரைக் கெளவிப் பறந்தது
சித்தம் பிசக வைத்த
இரக்கமற்ற குரலொன்று
அவளைத் தெருவெங்கும் ஓடவைத்தது

இன்று...
கின்னரர் தம் இசையிழந்த
நிலமெங்கும்
அவளது ஒப்பாரி அலைகிறது
அரசனைத் துதிபாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டொழிகிறது


(நன்றி: "எதுவரை" இதழ்-2)