வெயில்



வெட்டியகற்றப்பட்ட மரம்
விட்டுச் சென்ற வெளியில்
அதிரடியாக
இறங்கிக் கொண்டிருக்கிறது வெயில்


சாவகாசமாய் நிலத்தில் அமர்ந்து
தாடைகளை அசைத்தவாறிருக்கும்
கிழட்டுப் பிராணியை
காலையில் ஒரு திசையிலும்
மாலையில் பிறிதொரு திசையிலும்
இடம் மாற்றி இருத்துகிறது
ஏதோவொரு நிழல்


வேனிற்காலப் பறவைகளை
ஒரு தேசத்திலிருந்து
இன்னொரு தேசத்திற்குக்
கூட்டிப் போகும் வெயில்
ஆகாயம் பத்திரப் படுத்தி வைத்திருக்கும்
பயணப் பாதைகளின்
வரைபடங்களைக் குழப்பாதவாறு
மீள அவற்றை அழைத்து வருகிறது

மாளிகை வாசல்களுக்கு வெளியே
தயங்கி நிற்கும் வெயில்
எளியவர் முற்றங்களுக்குச்
சிடுசிடுப்புடன் திரும்புகிறது

தாய்த் தேசத்தில் அனாதையாக்கப் பட்ட மகள்
புகலிடம் ஒன்றைத் தேடிப் போகிறாள்
நிழல்களை விரட்டும் பிறிதொரு வெயில்
அவள் பின்னே போகிறது


கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டு விட்டு


வெயில் மறைந்ததும்
அந்தப் பெரு வனம்
கூந்தலை அவிழ்த்துப் போட்டவாறு
தெருவெங்கும் அலையத் தொடங்குகிறது
பதுங்கியிருந்த மிருகங்களையெல்லாம்
தன்னோடு அழைத்துக் கொண்டு
*********************************

("யாத்ரா " கவிதை இதழுக்கு எழுதப்பட்ட கவிதை)

18 comments:

இப்னு ஹம்துன் said...

சொல்லி முடியாத சோகச் சுவடுகளை விட்டுச்செல்கிறது இந்தக் கவிதை.

KARMA said...

மிகக் கனமான எதையோ சுமந்து திரியும் மனதின் ஓசையற்ற அலறல்...

உறங்குமோ இருள் அவிழ்ந்த வனம்?

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

எந்த வரியென்று பிரித்துச் சொல்ல முடியாதளவுக்கு எல்லாச் சொற்களுமே மிகுந்த கவனத்துடனும் , அழகாகவும் கோர்க்கப்பட்டிருக்கிறது. வெயிலைச் சாடியபடி அருமையாக வந்திருக்கிறது கவிதை சகோதரி. ஆனால் கவிதை சாடி நிற்பது வெயிலை மட்டுமல்ல !

பஹீமாஜஹான் said...

வாருங்கள் இப்னு ஹம்துன்

((சொல்லி முடியாத சோகச் சுவடுகளை விட்டுச்செல்கிறது இந்தக் கவிதை.))

வாசிப்பவர்கள் இக்கவிதையின் துயரத்தை உணரக்கூடும் என்பதை இதனை எழுதிமுடித்தபொழுது நான் அவ்வளவாக நினைக்கவில்லை.

ஆனாலும் எழுதப்பட்ட சூழ்நிலை இக்கவிதையிலிருந்து துயரத்தை அகற்ற முடியாமல் செய்துவிட்டதென நினைக்கிறேன்

உங்கள் வருகைக்கு நன்றி.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் KARMA

முதன் முதலாக இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

((மிகக் கனமான எதையோ சுமந்து திரியும் மனதின் ஓசையற்ற அலறல்...

உறங்குமோ இருள் அவிழ்ந்த வனம்?))

காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் ரிஷான்

"கவிதை சாடி நிற்பது வெயிலை மட்டுமல்ல"

ஆமாம்.

எத்தனையோ வெயில்கள் நம்மை வாட்டுகின்றன- இரக்கமேயின்றி.

நன்றி ரிஷான்.

சாந்தி said...

!!கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டு விட்டு!!

வார்த்தைகளுக்குள் வலி மிகுந்து ஈரமாகிறது விழிகள்.

சாந்தி

பஹீமாஜஹான் said...

வாருங்கள் சாந்தி


((வார்த்தைகளுக்குள் வலி மிகுந்து ஈரமாகிறது விழிகள்.))

வாழ்க்கையே வலி மிகுந்ததாக இருக்கும் போது
வார்த்தைகளில் மாத்திரம் சுகத்தை கொண்டு வரமுடியுமா?

நன்றி சாந்தி.

Saravana Kumar MSK said...

அப்பப்பா.. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கவிதை..

Saravana Kumar MSK said...

//சாவகாசமாய் நிலத்தில் அமர்ந்து
தாடைகளை அசைத்தவாறிருக்கும்
கிழட்டுப் பிராணியை
காலையில் ஒரு திசையிலும்
மாலையில் பிரிதொரு திசையிலும்
இடம் மாற்றி இருத்துகிறது
ஏதோவொரு நிழல்//

அருமை.. அழகு.. அசத்தல்..

Saravana Kumar MSK said...

//கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டு விட்டு


வெயில் மறைந்ததும்
அந்தப் பெரு வனம்
கூந்தலை அவிழ்த்துப் போட்டவாறு
தெருவெங்கும் அலையத் தொடங்குகிறது
பதுங்கியிருந்த மிருகங்களையெல்லாம்
தன்னோடு அழைத்துக் கொண்டு//

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. மிக சிறப்பாக இருக்கிறது.. //கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டு விட்டு


வெயில் மறைந்ததும்
அந்தப் பெரு வனம்
கூந்தலை அவிழ்த்துப் போட்டவாறு
தெருவெங்கும் அலையத் தொடங்குகிறது
பதுங்கியிருந்த மிருகங்களையெல்லாம்
தன்னோடு அழைத்துக் கொண்டு//

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. மிக சிறப்பாக இருக்கிறது.. மிகுந்த வலிகளோடும்..

பஹீமாஜஹான் said...

வாருங்கள் Saravana Kumar MSK

உங்கள் பின்னூட்டல்களுக்கு மிகவும் நன்றி.

சித்தாந்தன் said...

"கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டு விட்டு"


மனதை குலைக்கிற வரிகள் பஹீமா
எங்கள் தாய்த் தேசம் கண்ணீரால் மட்டுமல்ல
குருதியாலும் நிரம்பிக்கிடக்கிறது
யாரோடு யார் நோவது

சமகாலம் எவ்வளவு கொடுமையாகவுள்ளது
குழந்தைகளின் சடலங்கள் வீதிகள் எங்கும் சிதறிக்கிடக்கையில்
மனிதாபிமானம் இமனிதாபிமான யுத்தம் என்பதெல்லாம் என்ன
யாருக்கு இவையெல்லாம் புரியப்போகிறது

பஹீமாஜஹான் said...

வாருங்கள் சித்தாந்தன்

"குழந்தைகளின் சடலங்கள் வீதிகள் எங்கும் சிதறிக்கிடக்கையில்
மனிதாபிமானம் மனிதாபிமான யுத்தம் என்பதெல்லாம் என்ன
யாருக்கு இவையெல்லாம் புரியப்போகிறது"

100 சதவீதம் இனவாதமும் அரசியலும் கொண்டு முன்னெடுத்துச் செல்லும் அழிவுக்கான பெயர்தான் இலங்கை அரசின் மனிதாபிமானம்.
வெளியே பேசினால் படுகொலை பரிசாகக் கிடைக்கும் பொழுது யாருக்குப் புரிந்தாலும் பயன் ஒன்றுமில்லை.

பேசக்கூடிய ஓரிரு ஊடகங்களும் மிக மோசமாக அடக்கப் பட்டுள்ளன.

அய்யப்ப மாதவன் said...

பஹீமா உங்களை உங்கள் வலைப்பதிவின் ஊடே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியுறுகிறேன்.
உங்கள் கவிதைகள் காத்திரமானவை.ரிஷன் உங்கள் தொகுப்பை பிடிஎஃப் ல் அனுப்பித் தந்திருந்தார். படித்ததும் விரிவாக எழுதுகிறேன்
அன்புடன் அய்யப்பமாதவன்
my mail id iyyappan66@gmail.com

பஹீமாஜஹான் said...

வாருங்கள் அய்யப்பமாதவன்

முதன்முறையாக இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

"ரிஷன் உங்கள் தொகுப்பை பிடிஎஃப் ல் அனுப்பித் தந்திருந்தார். படித்ததும் விரிவாக எழுதுகிறேன்"

ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன்.
அதை அனுப்பிய ரிஷானுக்கும் நன்றி.

அய்யப்ப மாதவன் said...

as rishan told this poetry finely tuned with words and creates pain into me deeply and the final lines metaphor is naturally arrived and what to say
hats off to you faheema. you are a great poet. my tamil software is not properly working in my system. thats why comments in english

சகாராவின் புன்னகை said...

வாழ்த்துக்கள் அக்கா
வளமைபோல ஓர் மென்மையான கவிதை
//வெயில் மறைந்ததும்
அந்தப் பெரு வனம்...

வெய்யில் மறையும்வரை ஏன் காத்திருக்கவேண்டும்
கண்களையும் குரல்களையும் பிடுங்கிவிட்டார்களே போதாதா

அக்கா //நிழல்களை விரட்டும் பிரிதொரு வெயில்
அவள் பின்னே போகிறது// என்று எழுதியிருக்கிறீங்க "பிறிதொரு" என்கிற சொல்லே தவறுதலாக அம்மைந்துவிட்டது என்று நினைக்கிறேன் சரியா,