நிழல் மரங்களற்றுச்
சூரியன் தவிதவிக்கும்
நெடுஞ்சாலையோரம்
வெய்யிலை
உதறி எறிந்தவாறு
நடக்கிறாள் மூதாட்டி


குதி கால்களால்
நெடுங்களைப்பை
நசுக்கித் தேய்த்தவாறு
காற்றைப் பின் தள்ளிக்
கைகளை வீசுகிறாள்

வெய்யில்
மிகப் பெரும் தண்டனையை
வழி நீளப் பரவவிட்டுள்ளது.
வேட்டை நாய் போல
அவள் முன்னே
ஓடிச் செல்கிறது நிழல்

பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்
தேங்கி நடுநடுங்குகிறது
ஆதியிலிருந்து தொடரும் துயரம்.

பஹீமாஜஹான்