தூர தேசப் பறவையொன்று
தங்கிச் சென்ற மரம்
மீளவும்
அந்தப் பறவைக்காகக்
காத்துக் கிடக்கிறது

தன் கிளைகள் எறிந்து தேடும்
வான் பரப்பில் பறவை
அதன் பாடலைப்
பதித்துச் செல்லவில்லை.
வேர்கள் ஊர்ந்து பரவும் மண்ணில்
அது
எந்த நிழலையும்
விட்டுச் செல்லவும் இல்லை

மலைகளிடமோ நதிகளிடமோ
பறவை தனது
பயணப்பாதை பற்றிய
செய்தி எதனையும்
பகன்றிடவே இல்லை

சூரிய சந்திரரும்
தாரகைக் கூட்டங்களும்
குருவியின் சேதிகளை
உரைத்திட மொழியின்றி மறையும்

வேர்களும் கிளைகளும்
நீளமுடியாமலொரு பெருங்கடல்
மெளனத்தில் உறைந்த
மரத்தைச் சூழ்ந்திருந்து
ஆர்ப்பரிக்கிறது நிதமும்

பஹீமாஜஹான்
(நன்றி:புதியபார்வை)