அந்தச் சூரியன்
மூழ்கிவிட்டது

கடல்தாண்டிப்போகவுமில்லை
அடவி வழியே பதுங்கிய படி
நீள்தூரம் கடக்கவுமில்லை

நீரில் மூழ்கியவாறு தீ கரையேறிய நாளில்
நிலத்தில் பதுங்கிக் கொண்டு புயல்
முற்றவெளிக்கு வந்த நாளில்
ஆகாயத்தின் அருகுகளினூடாகப் புறப்பட்ட இடியோசைகள்
தலைக்கு மேலாக மையம் கொண்ட நாளில்
சூரியன் உன்மத்தங்கொண்டு
அலையத் தொடங்கியது

சூரியன் உருவாக்கிய நகரங்கள்
அஞ்சிய படி சிதறியோடத்தொடங்கின
அது வளர்த்த பயிர் நிலங்கள்
கருகத் தொடங்கின
ஆகாயமெங்கும் தீப்பிடித்த பொழுதில்
சூரியனி்ன் பிரகாசம்
மெல்ல மெல்ல
வடியலாயிற்று

யாரும் சென்றடைய முடியாத ஏரியொன்றில்
கடைசியாக அது
மறைந்து கொண்டிருந்தது
நீர்ப்பரப்பில் உதிரத்தைக் கரைத்தபடி

சூரியன் செத்துப்போன நிலத்தை
ஊழியின் பெருமழை நனைத்தது
அது உருவாக்கிய பட்டினங்களில்
நிரந்தர இருள் படியலாயிற்று

2010.02.28
நன்றி: மறுபாதி (இதழ் -4) சித்திரை - ஆனி 2010