
வெறியேறிய நீசன்
அபராதி நீ
உனது சாக்கடைகளில் வளரும்
பன்றிகள் கூட்டத்தை
ஊடகப் பண்ணையொன்றில்
உள் நுழைய விட்டாய்
'மகாராஜாவின்' கழுத்தை நெரித்த
கைகளின் விறைப்புத் தணிய முன்பே
'லசன்த'வின் குருதியில்
இன்னுயிரை ஓடவிட்டு
அந்தப் பகற்பொழுதைப்
பதைபதைத்திட விட்டிருந்தாய்
வெறியேறிய நீசனன்றி
வேறென்ன பெயர் உனக்கு?
சொர்க்கத் தீவின் அற்புதக் கிரீடம்
அதிஷ்டம் தவறி உனது
தலையில் வீழ்ந்த கணம்
அனைத்தையும் இடம்மாற்றி இருத்தியது
மனிதாபிமானத்தைப் புதை குழியிலும்
காட்டுமிராண்டியைச் சிம்மாசனத்திலுமாக
காஸாவுக்குக் கருணைமனு எழுதும் நீ
வன்னிக்குள் ஏவிவிட்ட 'காவல் தெய்வங்கள்'
சிதறிக் கிடக்கும் உடலங்களின் மீதும்
சின்னாபின்னமான குழந்தைகளின் வாழ்வுமீதும்
ஏறிநடப்பதைப் பார்த்தவாறு
தினந்தோறும் உன்மத்தம் கொள்கிறாய்
இரத்தமும் சதையும் தின்றவாறு
மக்கள் கைவிட்டுச் சென்ற ஊர்கள்தொறும்
நாவைத் தொங்கவிட்டபடி அலைகிறது
நீ கட்டவிழ்த்து விட்ட பேரவலம்
கொடூரச் சாவுகளைக்
கண்டு கண்டு அதிர்ந்த மண்
பலி கொள்ளும் கண்களுடன்
உனையே பார்த்திருக்கிறது
உனது அரசியல்
சகித்திட முடியாத் துர்வாடையுடன்
வீதிக்கு வந்துள்ளது
சுபீட்சம் மிகுந்த தேசத்தின் ஆன்மா
கைவிடப் பட்ட களர் நிலமொன்றில்
புதையுண்டு அழுகிறது
(நன்றி: புகலி)
அபராதி
Posted by
ஃபஹீமாஜஹான்
at
17
comments
Subscribe to:
Posts (Atom)
