பகல் முழுதும்
மலைகளின் சாம்பல் நிறப் போர்வைக்குள்
தேங்கிக் கிடக்கும் இருள்
மாலையில் பதுங்கிப் பதுங்கி மலையிறங்கி
ஊரின் திசைகளெங்கிலும்
உறைந்திட ஆரம்பிக்கும் கணங்களில்
எனை வழியனுப்பி வைப்பாய்

உன்னையும்
எனது ஆனந்தங்களையும்
அந்த வீட்டுத் தனிமையின்
பசியுற்ற வாய்களிடம்
தின்னக் கொடுத்துவிட்டு
எதிர்க் காற்றில் மோதி மோதி
உற்சாகமிழந்த பாதங்களால்
மிதிவண்டியைச் செலுத்துவேன்

திரும்பித் திரும்பிப் பாராமல்
பக்குவமாய்ப் போய் வருமாறு
உனது பிரார்த்தனைகளையெல்லாம்
வழித்துணையாய்த் தொடரவிட்டு
நெஞ்சின் திரவியத்தை வழியனுப்பிவைப்பாய்

மெளனத்தில் மூழ்கிய
பரந்த வயல் வெளியின் கடைசி வளைவையும்
கடந்து மறையப் போகும் கணத்தில்
ஏக்கத்துடன் திரும்பிப் பார்ப்பேன்
நின்றிருப்பாய் அவ்விடத்தே
நீயொரு புள்ளியென

துயரம் தழுதழுக்கும் பெருமூச்சுக்களை
வீட்டினுள் அலையவிட்டு-நீ
கதவுகளை மூடிக் கொள்ளும் இரவில்
தூரத்து மலைகளில்
ஊமையாய்த் தீயெறியும்

நீ முத்தமிட்ட வாசனையும்
சேலைத் தலைப்பால் போர்த்தி எனைத்
தூங்க வைக்கும் கதகதப்பும்
நினைவில் மேவிட உறங்கி
மறுநாளும் உனக்கான பகல் உணவை
மாலையில் எடுத்து வருவேன்

உனைப் பிரிந்து நான்
நீள் தூரம் சென்ற காலங்களில்
உயிர் வதைபட வாழ்ந்திருந்தாய்
அனாதரவாய் விடப்பட்ட
உனதுயிரின் கரைகளை
அரித்தரித்தே அழித்தது
விதியென்னும் பெருவெள்ளம்

உனது இறுதி உணவுக் கவளமும்
வாந்தியாய்ப் போய்விட்ட இரவு
நீ இழுபட்டுச் சென்ற
தலையெழுத்தின் கதை
தடைப்பட்டு நின்றதா?
கண் மூடி விடமுன்னர்
எனைக் கண்டுவிட வேண்டும் என்பதே
உனதுயிர் கூட்டி உச்சரித்த
இறுதிச் சொற்களாயிற்றா?

உன் கடைசி நிம்மதியும்
நான் தான் என்பதை ஏன் மறந்தேன்?
கைசேதமுற்றுத் தவிக்கும் ஆன்மாவைச்
சாவு வரையும் சுமந்தலைய
ஏன் விதிக்கப் பட்டேன்?

நான் வந்தேன்
பாதையைத் திறந்து
ஆயுதம் தரித்த வீரர்கள்
குண்டுகள் அற்ற
பொதிகளிலும் வாகனங்களிலும்
மனிதர்களிடத்தேயும்
அதனைத் தேடித் தேடி
அனுப்பி வைத்த நாளொன்றில்
நான் வந்தேன்
உனைத் தவித்துச் சாகவிட்டு
எங்கோ பரதேசம் கிடந்தவளாக...
யாருமே அறியாத
இரகசியக் கொலையாளியாக

நீ உறங்கிய கட்டில்
காலியாகக் கிடந்தது
நீ நீரருந்தும் கோப்பை
காணாமற் போயிருந்தது
ஆலய வளவில்
புல்மூடிப் படர்ந்த இடமொன்று
எனக்காகக் காத்திருந்தது

அம்மம்மா...........................................
மலை அத்தனைச் சுமை மோதிடக்
கேவியழும் கண்ணீருடன்
கைகளை ஏந்துகிறேன்
விரலிடுக்கினூடு வழிந்தோடுகிறது
நீ காட்டிய பேரன்பு

பஹீமாஜஹான்