ஓர் அரசியல்
ஓர் அவ நம்பிக்கை
அகதியாக உனை வெளியேற்றியது


தீராத் துயரம்
பளுமிக்க தனிமை
நெடும் பெரு மூச்சு
உன்னிடம் தேங்கிக் கிடக்கிறது


துரோகத்தின் பழிச் சொல்லும்
மரணத்தின் தீர்ப்பும்
அநியாயமாக உனைப் பின் தொடர்கிறது

கொலையுண்டவர்களை
நீள் வரிசையில் கிடத்தி
நீயும் நிலவும் காவலிருந்த இரவில்
தேசத்தின் மீதிருந்த
இறுதி நம்பிக்கையையும்தொலைத்திருந்தாய்


அலைகளில் தத்தளிக்கும் படகில்-நீ
தப்பித்து ஏறிய இருளில்
எல்லா அடையாளங்களையும்
அழித்திருந்தாய்

இன்று..
நீ அஞ்சிய நரகமொன்றை நோக்கி
நகர்த்தப்பட்டுள்ளாய்


அபயம் தேடித் தவித்த
உன் இறுதிச் சொற்கள்
எனது அறையெங்கும்
எதிரொலித்தபடியழைகின்ற இந்நாளில்
நம்பிக்கையும் ஆறுதலும் தரக்கூடிய
எல்லாச் சொற்களையும் நானிழந்து நிற்கிறேன்