இக்கணத்தில்
உனை விலகிப்போவதைத் தவிர
வேறு மார்க்கம் ஏதுமில்லை


எல்லா அபிமானங்களையும்
ஒதுக்கிவிட்டால்
ஒரு சத்திரத்தைப் போல
எளிமையாக உள்ளது
வாழ்க்கை


உன் வழி அதுதான் எனத்
தேர்ந்தெடுத்து நீ விலகிய பின்
யாரும் பயணித்திராத
துயர்மிகு பாதை இதுவானாலும்
நான் இனிப்
போய்த் தான் ஆகவேண்டும்


கோபம் விளைவித்த துணிச்சல்
என் முன்னே வேகமாக நடக்கிறது
வெகு சீக்கிரத்திலேயே
நான் திரும்பி விடுவேன் என
நீ காத்திருக்கலாம்


ஏளனப் புன்னகை
மெல்ல மெல்ல மறைந்து
உன் முகத்தில் இறுக்கம் வந்தமர்ந்து
விபரீதத்தை உணரும் கணத்தில்.....
நீ வரவே முடியாத வெளியொன்றில்
எனதாத்மா மிதந்து கொண்டிருக்கும்

2010.08.29 இரவு 9 மணி
(நன்றி : கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ்-2011)