நீ வராத பகற்பொழுதில்
படிந்துள்ள புழுதியைக்
கிளப்பியவாறு
ஆட்டுக் குட்டியுடன்
திரும்பிச் செல்கிறேன்


நீ வராத மாலை நேரத்தில்
கூடு திரும்பும் மைனாக்களின்
பாடல்களையெல்லாம்
வயல்வெளியில் விட்டுவிட்டு
கதவுகளை மூடிக் கொள்கிறேன்

நீ வராத இருளில்
பதுங்கிக் கிடக்கும்
வலிகளைப் போக்கிடவென்று
தீபமொன்றை ஏற்ற முனைகிறேன்

நீ வராத வசந்த காலத்தில்
இலைகளும் பூக்களும் உதிர்ந்து
நிழல் வற்றிப் போன
என் மரத்தடியில் கிடந்து
முகங்கவிழ்ந்து விம்முகிறதொரு
நெடுங்கனவு

2010.08.17
(நன்றி: கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ் -2011 )